(Reading time: 10 - 20 minutes)
Irulum oliyum
Irulum oliyum

இருந்தால் நலங்கிவிடுமே, மடிப்புக் கலைந்துவிடுமே என்று யோசனை செய்திருப்பாள். சீதாவின் புடைவைகள் தாமே அவைகள்! அவைகள் எப்படிப் போனால் என்ன! புடைவைகளை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்துவிட்டு, "ஏண்டீ, இந்தக் கனகாம்பரக் கலர் 'கிரேப்' புடைவையை உடுத்துக் கொள்கிறேனே. நீயும் இதைத்தான் ’செலக்ட்’ பண்ணி இருக்கிறாயா என்ன?" என்று நிஷ்டுரமாகக் கேட்டாள் சீதாவைப் பார்த்துச் சாவித்திரி.

"ஹும்.. ஹும்.. பெண் பார்க்க வருவது உன்னையே தவிர என்னை அல்ல சாவித்திரி! உனக்குத்தான் தெரியுமே, எனக்கு இந்தப் பகட்டான புடைவை யெல்லாம் பிடிக்காது என்று".-- சாவதானமாகப் பதிலளித்த சீதா, தான் பொறுக்கி எடுத்த புடைவையை வைத்துவிட்டு மற்றவைகளைத் திரும்பவும் பீரோவில் அடுக்கி வைப்பதற்கென்று தன்னுடைய அறைக்குத் திரும்பினாள்,

இதற்குள்ளாகச் சமையலறையில் சிறு பூகம்பம் ஒன்று ஏற்பட்டது என்று கூறலாம். ஜப மாலையை உருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த பாட்டி, தன் நாட்டுப் பெண் மங்களத்தைப் பார்த்துத் திடீரென்று ஒரு கேள்வி கேட்டாள்.

"என்ன உயர்வு என்று இந்த வரனை நிச்சயம் பண்ணி இருக்கிறீர்கள்? பிள்ளைக்கு வேலை இல்லையாமே! சொத்து இருந்து விட்டால் போதுமா? புருஷனாய், லக்ஷணமாய், வேலை பார்க்காமல், பொழுது விடிந்து பொழுதுபோனால் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு! கேட்கச் சகிக்கவில்லையே!" என்று பாட்டி கோபத்துடன் கூறிவிட்டு, வேகமாக ஜபமாலையை உருட்டினாள்.

மங்களத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அந்த நாளில் ராஜமையர் உத்தியோகம் பண்ணிக் கிழித்தது அவளுக்குத் தெரிந்ததுதானே? இருந்த வேலையையும் ஒரே நாளில், 'சத்தியாக்கிரகம் பண்ணி ஜெயிலுக்குப் போகிறேன்' என்று ஆரம்பித்து, ராஜிநாமா செய்தவர் ஆயிற்றே! பிறகு சீதா பிறக்கிறவரைக்கும் பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்தே குடும்பம் நடத்தவில்லையா? மாமியாருக்கு இதெல்லாம் மறந்து போனதைப்பற்றி மங்களத்துக்குக் கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டன. அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த நெய்யில் முந்திரிப் பருப்பையும் திராக்ஷையையும் போட்டு வறுத்துக்கொண்டே, மாமியாருக்குப் பதில் கூறாமல் இருந்தாள் மங்களம்.

உருட்டிக் கொண்டிருந்த ஜபமாலையைச் சம்புடத்தில் வைத்துவிட்டு. இரண்டு உத்தரணி ஜலத்தை 'ஆசமனீயம்' செய்தாள் பாட்டி. பிறகு, "கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேராம்?" என்று கேட்டாள் நாட்டுப் பெண்ணை.

இனிமேலும் பதில் கூறாமல் இருக்க முடியாது என்று தெரிந்து. "ஒரே பிள்ளை தான்; பிக்கல், பிடுங்கல் ஒன்றும் கிடையாது. தகப்பனார் வேண்டியது சம்பாதித்து வைத்திருக்கிறார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.