இல்லை. யார் வீட்டில் எந்த விசேஷம் நிகழ்ந்தாலும் ஊரில் உள்ள அத்தனை பெண்களும் ஒன்று சேருவார்கள். தலைக்கொரு வேலையாகச் செய்வார்கள். வேலையும் அழகாகவும் ஒழுங்காகவும் முடிந்துவிடும். அன்றும் கோடி வீட்டிலிருந்து பாகீரதி அம்மாமி வந்திருந்தாள். வயது அறுபது இருக்கும். வாய் படபடவென்று எதையாவது பொரிந்து தள்ளுவதற்கு ஈடாக கையும் சரசரவென்று லட்சியமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும். இதற்கு நேர் விரோத குணம் படைத்தவள் ரகுபதியின் தாய் ஸ்வர்ணாம்பாள். கறிகாய் நறுக்க உட்கார்ந்தால் மணிக் கணக்காக அங்கேயே உட்கார்ந்திருப்பாள்!
பாகீரதி அம்மாமி மற்றக் காரியங்களைக் கவனித்துக்கொண்டிருக்க, ஸ்வர்ணம் ஒரு கூடை நிறையக் காய்கறிகளை வைத்துக் கொண்டு அரிவாள்மணைக்கு முன்பு உட்கார்ந்திருந்தாள். உள்ளே யிருந்து கமகமவென்று சமையல் வாசனை கிளம்பிக் கொண்டிருந்தது. பாகீரதி அம்மாமி பாயசத்துக்குச் சேமியாவை வறுத்துக்கொண்டே, "ஏண்டி ஸ்வர்ணம்! நீ முன்னாடி அந்த இடத்தை விட்டு எழுந்திரு பார்க்கலாம். மீதியை நான் நறுக்கிக் கொள்கிறேன்" என்றாள்.
"இருக்கட்டும் அம்மாமி, நீங்கள் எத்தனை காரியங்கள் தான் செய்வீர்கள்?"
”நான் என்னத்தைச் செய்ய இருக்கிறது? அடுப்பில் வைத்தால் தானே ஆகிறது. ஏண்டி! புடலங்காயைக் கூட்டுக்கு நறுக்கச் சொன்னால் விரல் பருமனுக்கு நறுக்கி வைத்திருக்கிறாயே!" என்று கூறினாள் பாகீரதி அம்மாமி.
"த்ஸொ ...... த்ஸொ . . . . திரும்பவும் நறுக்கிவிடட்டுமா மாமி?" என்று கேட்டாள் ஸ்வர்ணம் பாகீரதியைப் பார்த்து.
”வேண்டாம்; வேண்டாம். நாட்டுப்பெண் வருகிற நாழிகை ஆகிறது. நீ போய் மற்றக் காரியங்களைக் கவனி" என்றாள் அந்த அம்மாள்.
அவள் சொல்லி வாய்மூடுமுன் வாசலில் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து மங்களமும், சந்துருவும், சாவித்திரியும் இறங்கினார்கள். ஸரஸ்வதி பரக்கப் பரக்க ஆரத்தி எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் முகத்தில் பொங்கிய சந்தோஷத்தைக் கண்டு சந்துரு வியப்படைந்தான்.
"வா, சாவித்திரி! வாருங்கள் மாமி" என்று புன்முறுவலுடன் வரவேற்றாள் ஸரஸ்வதி. அவர்களை அழைத்துவிட்டு அவள் திரும்பியபோது சந்துரு தன்னையே உற்றுப் பார்ப்பதை அறிந்ததும் அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. ரகுபதி அதுசமயம் வெளியே சென்றிருந்ததால் சங்கோஜத்துடன் ஸரஸ்வதி அவனைப் பார்த்து, "வாருங்கள்" என்று அழைத்தாள்.
பல வருஷங்களுக்கு அப்புறம் அவ்வீட்டிற்கு ஒளி தர வந்திருக்கும் சாவித்திரி, மாமியாரை நமஸ்கரித்தபோது ஸ்வர்ணாம்பாள் உணர்ச்சி மிகுதியால் வாயடைத்து நின்றாள். கண்களில்