உதிர்ந்திருந்த மலர்களைப் பொறுக்கி, பாத்திரத்தில் நிரப்பிப் பார்வதியிடம் கொடுத்தாள்.
இதற்குள் கொட்டிலில் கட்டியிருந்த பசு மாட்டைக் கறந்து விட்டுப் பால் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார் பார்வதியின் கணவர் கல்யாணராமன். சுவருக்கு அந்தண்டை நிற்கும் பவானியைப் பார்த்ததும் அவர். "உள்ளே போய் ஒரு தம்ளர் கொண்டுவா அம்மா. குழந்தைக்கப் பால் தருகிறேன்" என்றார். பவானியின் மகன் பாலுவிடம் அவருகு அலாதி அன்பு. சின்னஞ்சிறு வயதில் தன்னந்தனியாக வாழத் துணிந்து விட்ட பவானியிடம் அவருக்கு மதிப்பும் வாஞ்சையும் ஏற்பட்டிருந்தன.
பவானி சிறிதுநேரம் தயங்கி நின்றாள். பிறகு தயக்கத்துடன் உள்ளே சென்று. பாலுக்காகத் தம்ளர் எடுத்து வந்தாள்.
"நேற்று மத்தியானம் வீட்டில் பால் இல்லையென்று குழந்தைக்கு நீ ஒன்றுமே தரவில்லையாமே?" என்று கேட்டுக் கொண்டே அவர். செம்பிலிருந்த பாலைத் தம்ளரில் ஊற்றினார். பிறகு அவளைப் பார்த்து. ”உனக்குத் தேவைப்படுகிற பாலை நான் கொடுத்து விடுகிறேன் அம்மா. நீ விலை ஒன்றும் கொடுக்க வேண்டாம்" என்றார்.
பவானிக்கு அவரை எதிர்த்து ஏதாவது சொல்லவே தயக்கமாக இருந்தது. ”பால் நான் தான் கொடுப்பேன். நீ வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்" என்ற தோரணையில் அல்லவா பேசுகிறார்? அவரிடம் போய் எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று நினைத் தாள் பவானி.
இருந்தாலும், அவளுக்கு சுயகௌரவம் அதிகம். பிறத்தியாருடைய தயவிலே அவளுக்கு வாழ விருப்பமிருந்தால் அன்றே- அவள் கணவன் இறந்து போன தினமே-வருந்தி வருந்தி அழைத்த அவள் தமையனுடன், சென்னைக்குப் போயிருக்கலாம். ஆகவே பவானி விநயமாகக் கல்யாணராமனைப் பார்த்தாள். பிறகு தயக்கத் துடன், ”மாமா! காசில்லாமல் வெறுமனே இதை வாங்கிக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. ஊரிலே மற்றவர்களும் ஏதாவது வம்பு பேசுவார்கள்" என்றாள்.
கல்யாணராமன் பவானியை விழித்துப் பார்த்தார். "பூ! பிரமாதம்! ஊரிலே நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று தானே உனக்குப் பயம் அம்மா? உனக்கு என்னைப் பற்றியோ என் மனசைப் பற்றியோ சந்தேகம் ஒன்றும் இல்லையே? அப்படி இல்லை யென்றால் பேசாமல் பாலை வாங்கிக் கொள்."
கல்யாணராமன் வெள்ளை மனம் படைத்தவர். வடக்கே நல்ல வேலையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சொந்தக் கிராமத்தில் வீடு வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அவர்களுடையது என்று சொல்ல வீடும் நிலபுலன்களும் மாடும் கன்றும் இருந்தன. ஆனால் ஒரு குழந்தை இல்லை. பால்யத்தில் திருச்செந்தூர் முருகனையும் பழனி ஆண்டவனையும்