செக்கர் வானில் ஒளிப் பிழம்பாகச் சுழலும் சூரியனின் வடிவத்திலே தில்லையம் பதியிலே ஆனந்த நடனமிடும் இறைவன் தோன் றினான். உலகையே தன் சக்தியால் ஆட்டுவிக்கும் வள்ளலின் ஆட்டங்களுக்கு முன்பு நல்லவையும், தீயவையும். தலை குனிந்து வணங்க வேண்டியது தானே?
பவானியின் கல்யாணத்தின் போது அவளுக்குப் பல பரிசுகள் வந்திருந்தன. அதிலே அவளுக்குப் பிடித்தமான தேவாரப் பாடல்கள் புத்தகத்தை மட்டும் எடுத்துப் பத்திரமாகப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டாள். யாரோ ஒருவர் அன்புடன் அளித்த நடராஜனின் திருஉருவப் படத்தை வீட்டுக் கூடத்தில் மாட்டி வைத்தாள்.
குடும்பம் பல்கிப் பெருகப் போகிறது என்றுதான் முதலில் அவள் நினைத்தாள். ஆனால், அவள் இதயத்தில் அரசு புரிந்த நடராஜன் வேறு விதமாகவல்லவா செய்து விட்டான்? கணவனைப் பிரிந்த பிறகு சிலகாலம் அவள் நடராஜனின் உருவத்தை ஏறிட்டும் பார்க்க வில்லை. வாசு போய் ஒரு வருஷம் வரையில் அந்தப் படத்தில் தூசும். தும்பும் படிந்து கிடந்தது.
அன்று திருவாதிரை நாள். கோவிலில் பாண்டும் நாதஸ்வரமும் ஒலித்தன. உதயத்தில் நடராஜன் ஆடிக் கொண்டே கோபுர வாயிலில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க வந்து விட்டான். பவானி தன் வீட்டுத் திண்ணை ஓரமாக வந்து நின்று கோவிலின் வாயிலை நோக்கினாள்.
அருள் சுரக்கும் ஆண்டவனின் வதனம் அந்தச் காலை வேளையில் அன்புடன், தன் மகவுக்குப் பாலூட்டும் தாயின் கருணை முகத்தை நினைவூட்டியது. தாயை மறந்து மகவால் உயிர் வாழ முடியுமா? வறண்டு போயிருந்த அவள் உள்ளத்தில் அன்புப் பிரவாகம் பெருக ஆரம்பித்தது. பித்துப் பிடித்தவள் போல் வீட்டுக்குள் ஓடினாள். கூட்டத்தில் மாட்டியிருந்த நடராஜப் பெருமானின் உருவப் படத்தை நீர் மல்கும் கண்களால் பார்த்தாள் . விம்மி விம்மி அழுது கொண்டே . . ’பிரபு! என்னை மன்னித்துவிடு! உன்னை உதாசீனம் செய்தால் என் நெஞ்சில் ஏற்பட்ட துயரத்துக்கு முடிவு காண முடியும் என எண்ணி