"எனக்கென்ன குழந்தைகள் இருந்து பாழாய்ப் போகிறது!' என்கிற வருத்தம் அவள் குரலில் தொனித்த மாதிரி இருந்தது அவருக்கு.
"மகா பாவி நான்!" என்று தமக்குள்ளேயே மறுகினார் அந்தக் கிழவர்.
தகப்பனாரின் மனத்தில் தன்னைப் பற்றி ஏதோ போராட்டம் நடக்கிறது என்பதைக் காமாட்சி அறியவே இல்லை. எப்பொழுதும் போலவே அவள் தன் அலுவல் களில் ஈடுபட்டிருந்தாள்.
ஒரு தினம் பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு மேல் டாக்டர் ஸ்ரீதரன் அவர்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் ஜெயஸ்ரீயும் வந்திருந்தாள். கூடத்தில் உட்கார்ந்திருந்த வேதாந்தம் சிறிது நேரம் ஜெயஸ்ரீயை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
”உங்கள் பெண்ணா?" என்று கேட்டார் அவர் டாக்டரைப் பார்த்து.
"ஆமாம். ஜெயஸ்ரீ தான். உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா! நன்றாக வளர்ந்திருக்கிறாள்" என்று சொல்லிக் கொண்டே ”ஏனம்மா! இந்தத் தாத்தாவை உனக்கு தெரியுமா!" என்று கேட்டார்.
”தெரியாமல் என்ன அப்பா? வக்கீல் தாத்தா தானே? நாலைந்து வருஷத்துக்கு முன்னே எனக்கு இவர் ’லேடி' பொம்மை வாங்கித் தரவில்லையா? அதை இன்னமும் வைத்திருக்கிறேனே!" என்றாள் ஜெயஸ்ரீ. காமாட்சி இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவள் எழுந்திருந்து உள்ளே போனாள். அழகிய குழந்தைப் பொம்மை ஒன்றை எடுத்து வந்தாள்.
"இந்தா அம்மா! இதையும் வைத்துக்கொள்" என்று கூறி ஜெயஸ்ரீயிடம் கொடுத்தாள் அதை.
ஜெயஸ்ரீக்குத் தயக்கமாக இருந்தது. ’பொம்மை வைத்துக் கொண்டு விளையாடும் வயசெல்லாம் தாண்டி விட்டதே இது நமக்கெதற்கு' என்று அவள் யோசித்துக் கொண்டு சற்றுத் தயக்கத்துடன் கையை நீட்டினாள் பொம்மையை வாங்க.
வேதாந்தம் இதை பார்த்துக் கொண்டே உட்கார்ந் திருந்தார். பிறகு டாக்டரின் பக்கம் திரும்பி,