(Reading time: 10 - 19 minutes)
Irulum oliyum
Irulum oliyum

“என்னடி சொன்னே? இன்னொரு தடவை சொல்லுடி...”

இப்போது இன்னொருத்தி சவாலிட்டாள்:

“கீழே இறங்குடி கஸ்மாலம். கீழே இறங்குறியா, நானு மேல வரட்டுமா... இன்னொருவாட்டி துடைப்பக் கட்டைன்னு சொல்லுடி பார்க்கலாம். உன்ன கட்டையால சாத்தாட்டால், நானு ‘ஹார்பார்’ கந்தசாமியோட சம்சாரம் இல்லை. கஸ்மால முண்டைக்கு ‘வாழ்வு’ வந்தாலும் வந்தது, இந்த வீடே கஸ்மாலமா பூட்டுது” என்றவள், “மல்லிகா, நீ முறவாசல் பண்ணாண்டாம். துடப்பத்தைக் கீழே போடு. நீ அந்த துடப்பத்த கீழே எறியாட்டால், எங்களை அதனால் அடிக்கிறதுக்குச் சமானம். நீ கிளீன் பண்ணவேண்டாம். அந்த ராங்கிக்காரி செய்றதை செய்துக்கட்டும்” என்று வெடித்தாள்.

“போனால் போகுதுன்னு, பொறுத்துப் பொறுத்துப் போனால், கடைசில, எங்க கண்ணாட்டியையே பேசுறாள். உன்னை இதுவரைக்கு ‘தெனாவட்டுல’ விட்டு வச்சதே தப்புடி. மல்லிகா, சொல்றதக் கேக்கமாட்டே...”

கந்தசாமி மனைவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டவள் போல் மல்லிகா துடப்பத்தைக் கீழே போட்டாள். ஒரு பகுதியில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்த தூசிகளும், சருகுகளும், மண் துகள்களும் அப்போதைக்கென்றே, பலமாக அடித்த காற்றில், சற்று மேலே எழும்பி, வீட்டுக்கார அம்மாவின் கண்ணில் படும்படியாக நடனமாடின. அவள் திகைத்து, திக்குமுக்காடி, ஒரு வாய்க்கு ஒன்பது வாய்கள் பதில் சொல்வதால், அதுவே அவளுக்கு ‘முதலிரவை’ப் போல் அல்லாது, முதல் அனுபவமாக இருந்ததால், கன்னத்தை உப்பி, கண்களை உருட்டி, மாடிச் சுவரில் கைகளைக் குத்தி, செல்லாக் கோபத்தை, செலவழிக்க முடியாமல் திண்டாடிய போது, இட்லி ஆயா, நிஜமாகவே சமரசம் செய்ய நினைத்துத்தான் பேசினாள்:

“நான் அதுக்குத்தான் குயந்தே அப்போபிடிச்சே உனக்கு புத்தி சொல்றேன். நம்மோட மரியாதையை நாமதான் காப்பாத்தணும். ஏழைங்க யானை மாதுரி... உட்கார்ந்திருக்கிறது வரைக்கும், சும்மா குந்திக்கிட்டு இருப்பாங்க. எழுந்துட்டாங்கன்னா, அப்பால... யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நாங்களும் உன்கிட்ட பொறுத்துத் தானே போகிறோம். நீ குழாயடிக்கு வந்துட்டால், நாங்கள் தொலவுல போய் விடுகிறோம். நீ வாசலுக்கு வந்தால், நாங்கள் விலகி நிற்கிறோம். போன மாசம் முப்பது ரூவாய் வாடகைப் பணத்தை முப்பத்தஞ்சா ஏத்துனே, கொடுத்தோமா... இல்லையா? கார்ப்பரேஷன் காரன் வந்தப்போ, நீ முப்பத்தஞ்சு ரூபா வாங்குனாலும், நாங்க பதினைந்துன்னு சொன்னோம்! நீயே சொல்லு குயந்தே... நீயே சொல்லு...”

“அப்படியும் நீ இந்த கக்கூஸ் கதவுக்கு ஒரு தாழ்ப்பாள் போடல. ரெண்டு மாசமா கதவு ஆடுது.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.