(Reading time: 8 - 15 minutes)
Vata malli
Vata malli

மரகதம், தம்பியின் பக்கம் அடிமேல் அடிபோட்டு நடந்தாள். அவனை, மறுபுறமாய்த் திருப்பி, தன் தோளில் சாய்த்துக் கொண்டு கட்டிலுக்கு வந்தாள். அவன் முதுகைத் தடவிவிட்டாள். தோளைத் தட்டிக் கொடுத்தாள். முகத்தைத் துடைத்து விட்டாள். தலையைக் கோதி விட்டாள். பிறகு கழுத்தை நீவி விட்டபடியே உபதேசித்தாள்.

  

நல்லா யோசிச்சுப் பாரு தம்பி... நம்ம குடும்பத்துலயே பெரிய படிப்புக்கு போற முதல் ஆளு நீதான்... அதுவும் ‘காரை வீட்டுக்காரன்’ மகன் கருப்பசாமிக்கு... அவுங்க வீட்டுல எவ்வளவோ முயற்சி செய்தும்... ஒரு லட்ச ரூபாய் கையில வெச்சுக்கிட்டு அலைஞ்சும் கூட, அவனுக்கு எஞ்ஜினியருங்குல இடம் கிடைக்கல. ஆனா உனக்கு தானா கிடைச்சுருக்கு. இதனாலயே நம்ம ஊருல உன்னால நம்ம குடும்பத்துக்கு மதிப்பு. அந்த மதிப்ப குலைச்சுடாதடா. ஊரு உலகத்துல தம்பி படிச்சா, அண்ணன் பொருமுவான்... ஆனால் நம்மண்ணன் அப்படிப்பட்டவனா... அப்பாவும், அம்மாவும்...”

  

அவங்க பேச்சைப் பேசாதக்கா... இப்படி என்ன பெத்துப் போட்ட அவங்கள என்ன செய்தாலும் தகும்.”

  

உனக்குத் தெரியாதுடா... அப்பா மனசு ஒரு வேளை கல்லாயிருந்தாலும் அந்தக் கல்லுக்குள்ள தேரையா இருக்கறது நீதாண்டா... நீ காலேஜுக்கு போகும் போதெல்லாம், உன்னை எப்படி வாஞ்சையோட பாப்பார் தெரியுமா... ஊர்க்காரங்க உன்னப்பத்தி பெருமையா பேசும்போது... ‘அவன் கிடக்கான்னு...’ ஒப்புக்குச் சொல்லிக்கிட்டே, எப்படிச் சிரிப்பார் தெரியுமா... அதனால... அக்கா என்ன சொல்ல வந்தேன்னா...”

  

சுயம்பு, திடீரென்று அக்காவிடமிருந்து விடுபட்டு, கட்டிலில் இருந்து அப்படியே விழுந்தான். தரையில் அங்குமிங்குமாய் புரண்டான். மோவாயைத் தூக்கி தூக்கி தரையில் இடித்தான். “அய்யோ... அய்யோ...” என்று கை கால்களைச் சுருக்கினான், நீட்டினான், மடக்கினான்.

  

மரகதம், இப்போது தானே பிரமை தட்டி நின்றாள். தம்பியின் படிப்பு நின்று போய் விடும் என்று நினைக்கக் கூட அவளால் முடியவில்லை. எப்படியோ சுதாரித்துக் கொண்டு அவன் அருகே மண்டியிட்டு உட்கார்ந்தபடியே “தம்பி... தம்பி...” என்ற போது, வெள்ளையம்மா, உள்ளே வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.