Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 02 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 2
சுயம்பு, கத்திக் கத்திக் களைத்துப் போனான். அப்பாவையும், அம்மாவையும், திட்டித் திட்டி அலுத்துப் போனான்.
அந்தப் பெட்டிமேல் அவலத்தின் அவலமாக உட்கார்ந்திருந்தான். சவுக்குத் தோப்பில் ஊளையிட்டுக் கொண்டிருந்த நரிகள், அவன் இதுவரை கத்திய கத்தலை சக்தி வாய்ந்த ஒரு மிருகத்தின் கர்ஜனையாக நினைத்து அங்குமிங்குமாய்ச் சிதறின. ஆனால் இப்போது அவன் தலையில் கைவைத்து, தானே தானேயாய், தன்னந்தனியாய் உட்கார்ந்திருப்பதை உணர்ந்து, கால் கிலோ மீட்டர் தொலைவு வரை நெருங்கி அவனைப் பார்த்து அரைவட்டம் போட்டன. ஆனாலும் அவன் அவ்வப்போது கத்தினான். ‘அம்மா’ என்ற கத்தல் ‘அப்பா’ என்ற அலறல், வார்த்தைகளை வரவழைத்தும், வந்தவற்றை வெளியே துப்புவது போலவும் அவன் கத்தியபோது பின் வாங்கும் நரிகள், அவன் அமைதியாகும் போது நெருங்கப் பார்த்தன. பொதுவாக ஆள் வாடைக்கே பயப்படும் அந்த நரிகள், அவனையும், ஒரு ஆறு மாதக் குழந்தையாக இளக்காரமாய்ப் பார்த்தன. எக்காளமாய் ஊளையிட்டன. என்றாலும் சுயம்பு இப்போது அந்தப் பெட்டி மேலே படுத்துக் கால்களைத் தரையில் போட்டுப் போட்டுக் குதிக்க விட்ட போது, அந்த நரிகளுக்கு ஒரு பெரும் அச்சம். எதிர்த்திசையில் ஓடின.
இதற்குள், அந்தக் கொடூர இருளை இரண்டாய்க் கீறுவது போல், ஒரு லாரி ஒளிக்கற்றைகளோடு அங்கே வந்து லேசாய் நொண்டியடித்தது. சுயம்பு தன்னைத் தானே குறுக்கிக் கொண்டு ஈன முனங்கலாய் முனங்கியதைப் பார்த்த டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். அவர் அனுமானப்படி, அவன் சரியான ஆக்ஸிடெண்ட் கேஸ். எந்த வண்டியோ அடித்துவிட்டுப் போய்விட்டது. எடுத்துப் போட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தால் அப்போது பார்த்து போலீஸ் வரும். ‘இதனால்தானே நடு ராத்திரியில் துள்ளத் துடிக்க ரோட்டில் கிடக்கும் மனிதர்கள் மீதும் வண்டிகள் ஏறிக்கொண்டே ஓடுது...’ லாரி டிரைவர் தன்னைத்தானே மெச்சிக் கொண்டார். அவன் மேல் லாரியை விடாமல், வண்டியை ‘ஒடித்து’ ஓட்டியதே, தான் செய்த மிகப் பெரிய சேவை என்பது போல், அந்த வாகனத்திற்குள் உட்கார்ந்தபடியே ஓடி, பிறகு தலைமறைவானார்.
அந்த லாரியின் ஒளிக்கற்றைகளாலோ, அல்லது அது போட்ட தகர டப்பா சத்தத்தினாலோ,