அரற்றினான். அந்த ஒரே வார்த்தையில், தனது உடல், பொருள், உயிர், அத்தனையும் வைத்திருப்பது போல் ஓலமிட்டான். ஆரம்பத்தில் செய்வதறியாது திக்குமுக்காடிய மரகதம், தன்னை, மனத்தாலும் நிலைப்படுத்திக் கொண்டாள். அவன், முதுகைத் தட்டிக் கொடுத்து, “எதுன்னாலும் அழாதடா...” என்று தைரியம் சொல்லியே, பயப்பட்டாள். உடனே ஒரு சிந்தனை. அந்த மாப்பிள்ளை பிடிக்காததை, அவன் இந்த வீட்டுக்கு வருவதைத் தடுக்க முடியாத இயலாமையில், தம்பி இப்படி அழுகிறானோ என்று ஒரு அனுமானம். அந்த நினைப்பும் அற்றுப் போக அவள், தம்பியின் முகத்தை முந்தானையால் துடைத்து, ரத்தக் கறைகளை அகற்றியபோது-
அந்த வீட்டு வாசலை அடைப்பது போல், நான்கைந்து பேர் ஒன்று திரண்டு நின்றார்கள். பிறகு ஒவ்வொருவராய் வெளியே வந்தார்கள். தாய் வெள்ளையம்மா, மகள் மரகதத்தைத் தள்ளிவிட்டு, மகனைத் தன் மார்பில் சாய்க்கப் போனாள். அவனோ அம்மாவைத் தள்ளிவிட்டு, அக்கா மேல் மீண்டும் சாய்ந்தான். பழுத்த பனம் பழத்தைக் கொத்திப் போட்டது போல், முகத்தில் சின்னச் சின்னச் சுருக்கங்களைக் கொண்ட வெள்ளையம்மா, மகனைச் சுற்றிச் சுற்றியே வந்தாள். ‘அய்யையோ... என் பிள்ளைக்கு என்ன ஆச்சோ?’ என்று சராசரிக் குரலை விட அதிகமாகக் கத்தினாள். எதுவும் புரியாமல் பக்கத்தில் நின்ற மூத்த மகன், ஆறுமுகப் பாண்டியின் கையைப் பிடித்து வைத்துக் கொண்டு, ஆறுதல் தேடுகிறவள் போல் அவனைப் பார்த்தாள். ஒரு குழந்தையை இடுப்பிலும் ஏழு வயதுப் பயலை கையிலும் வைத்துக் கொண்டு நின்ற கோமளம், மைத்துனனை வைத்த கண் வைத்தபடி பார்த்தாள். இதற்குள், இடுப்புக் குழந்தை அம்மாவின் கால் வழியாக இறங்கி, அண்ணன் பயல் உதயகுமாரின் தலையை ஆனந்தமாய் மிதித்து, சுயம்புவின் பக்கம் போய் ‘செத்தப்பா, செத்தப்பா’ என்றது, இரண்டு வயதுக் குழந்தை. அப்போது அந்த வார்த்தை அபசகுனமாய் ஒலித்தது. தாய்க்காரி குழந்தையின் வாயை ஒரு கையால் மூடி மறுகையால் இழுத்துப் பிடித்தாள். ஆனால் அண்ணியிடம் இழுபட்ட அந்தக் குழந்தையை, சுயம்பு தன் பக்கமாய் இழுத்துக் கொண்டு அதன் தலையைத் தன் கழுத்திற்குள் வைத்துக் கொண்டு, “நீ சொன்னது மாதிரி செத்துட்டேம்மா... சித்தப்பாவா செத்துட்டேன்” என்று அழுதான். அவன் அழுகைக்குத் தங்கைதான் காரணம் என்பது போல், ஏழு வயது உதயகுமார், எழுந்து போய், அதன் தலையைக் குட்டினான். குடும்பத்தினர் எல்லோரும் சுயம்புவை அதிர்ந்து பார்த்தார்கள். ஆறுமுகப்பாண்டி, எதுவும் புரியாமல் மனைவி கோமளத்தைப் பார்க்க, பதிலுக்கு அவள் அவனையே பார்த்தாள். அந்த வேப்பமரத்திற்குச் சிறிது தொலைவில் உள்ள வாதமடக்கி மரத்தூரில் உட்கார்ந்திருந்த கணவனை ஓரங்கட்டிப் பார்த்தபடியே, வெள்ளையம்மா