சாடையாகப் பேசினாள்.
“இப்படிக் குத்துக்கல்லு மாதிரி எதுக்காக நிற்கணும். பெத்த பிள்ளை பொறி கலங்கி வந்திருக்கான். என்னடா ஆச்சுன்னு ஒரு வார்த்தை கேட்கப்படாதா?”
பிள்ளையார், கையிலிருந்த சுருட்டு, விரல் இடுக்கை எரிப்பதை உணரவில்லை. அந்த இரண்டு விரல்களும் செந்நிறமாகி, பிறகு வெண் தழலாய் மாறியதை அறியவில்லை. வழக்கம் போல் கம்பீரம் கலையாமல், ‘பெரிய மகன்’ ஆறுமுகப் பாண்டியனைப் பார்த்து, கேட்டார்.
“ஏண்டா பெரியவன்... இவன் எதுக்காக வந்தானாம்? எதுக்காவ அழுவறானாம்?”
சுயம்பு அழுகையை நிறுத்தினான். அந்த வாதமடக்கி மரம்போல் உறுதியாகவும், அதன் பட்டைகள் போலச் சிற்சில சுருக்கங்களாகவும் தோன்றிய தந்தையைக் குற்றம் சாட்டும் தோரணையில் பார்த்தான். பிறகு தந்தையைப் பார்க்காமலே, வீறாப்பாக பதிலளித்தான்.
“நான், இனிமேல் காலேஜுக்குப் போகமாட்டேன். போகமாட்டேன்னா போகமாட்டேன்...”
எல்லோரும் ஆடிப் போனார்கள். பிள்ளையார் அவன் பக்கத்தில் அதட்டலோடு வந்து நின்றார். ஆறுமுகப் பாண்டி கோபமாக ஏதோ பேசப்போக, அவன் மனைவி கோமளம் கணவனை இதமாகப் பிடித்துக் கொண்டாள். ‘பிளஸ்-ஒன்’ தங்கையை அந்த எதிர்கால எலெக்ட்ரானிக் எஞ்சினீயருடன் ‘கனெக்ஷன்’ கொடுக்க நினைத்திருப்பவள். ஆகையால் மைத்துனன் மீது ஒரு வாஞ்சை. பாம்பும் சாகாமல் பாம்படித்த கம்பும் நோகாமல் எப்படிப் பேசுவது என்று, அவள் யோசித்துக் கொண்டிருந்த போது, பிள்ளையார், எங்கேயோ பார்த்தபடி அதட்டினார்.
“எருதுக்கு நோவாம். காக்கைக்குக் கொண்டாட்டமாம்... இப்போவாவது கண் குளிர்ந்து மனம் குளிர்ந்தால் சரிதான்.”
பிள்ளையார் பார்த்த வைக்கற்போரிலிருந்து, அவரது தம்பியும், தம்பி பெண்டாட்டியும் விழுந்தடித்து ஓடினார்கள். தம்பிக்கும் அவருக்கும் தீராப் பகை. இரு தடவை கோர்ட்டிற்குப் போனவர்கள். பிள்ளையார், பேசி முடித்ததும், மனைவிக்காரி வெள்ளையம்மா அவருக்கு ஒத்தாசை செய்தாள்.