சுயம்பு எழுந்தான். கால்களை மாற்றி மாற்றி, தரையில் மிதித்தான். அம்மாவை நேருக்கு நேராய்ப் பார்த்து இரண்டு திட்டுத் திட்ட வேண்டும் போலிருந்தது. தட்டிக் கேட்க அப்பா வந்தால், அவரையும் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற கோபம்... கடும்கோபம்.
சுயம்பு, பெட்டியை எடுத்து வலது தோளில் போட்டுக் கொண்டான். அவலத்தை ஆத்திரம் துரத்த, அவன் எதிர் திசையை ஏக்கத்தோடு பார்த்தான். ஒரு ஒளி வட்டத்தைப் பார்த்துவிட்டு, அது வருவது வரைக்கும் காத்திருக்க விரும்பாதது போல், அதை நோக்கி ஓடினான். அதன் மேல் மோதப் போவது போல், மூச்சு முட்ட, தாவினான். அந்த லாரி படாத பாடுபட்டு, அவன் மீது மோதாக் குறையாய் நின்றது. டிரைவர் கத்தினார். “உனக்கு அறிவிருக்கா? சைடுல நின்னு கையாட்டினால் நிறுத்த மாட்டேனா? சரி... சரி... ஏறு... காசு... இருக்குல்ல...”
அந்த லாரியின் பின்பக்கம் உள்ளே இருப்பதைக் காட்டாத தார்ப்பாய் மேல், பத்துப் பதினைந்து பேர் ஒருவரை ஒருவர் ஆதரவாய்ப் பிடித்தபடி கும்பலாய்க் கிடந்தனர். டிரைவருக்குப் பின்னால் உள்ள நீண்ட பெஞ்சில் ஏழெட்டுப் பேர். இவர்கள் போதாது என்பது போல் கீழே, ஆறு பேர் மூட்டை முடிச்சுகளாய் சுருங்கிக் கிடந்தார்கள். சுயம்புவை ‘கேபினில்’ ஏற்றுவதா, அல்லது பின்பக்கம் அனுப்புவதா என்று யோசித்த டிரைவர் அவனை அசைபோட்டுப் பார்த்தார். பிறகு அவன் பாண்ட் சட்டை போட்டிருப்பதைப் பார்த்து, கேபினுக்குள் ஏற்றும்படி கிளீனருக்கு சைகை செய்தார். உடனே, அந்த வண்டிக்கு ஒரு காது இருப்பது போல கதவு திறந்தது. சுயம்பு, டயர் சக்கரத்தில் கால் பதித்து மேலே ஏறிக் கொள்வதற்காக, கிளீனர் கையை வெளிப்பக்கம் நீட்டினான். அந்த இருக்கை அறைக்குள் ஒளிர்ந்த விளக்கில் வெளியே தெரிந்த கையை சுயம்பு பார்த்தான். அது உருண்டு திரண்டு, ஒவ்வொரு விரலும் ஒரு இரும்புக் குச்சியாய்த் தெரிந்தது. அதைப் பற்றிக் கொள்ள ஆசையோடு கையை நீட்டிய சுயம்பு, பிறகு கூச்சத்தோடு, நீட்டிய கையை மடக்கிக் கொண்டான். ஆனாலும், கிளீனரின் கை அவனை ‘கிளீனாக’ உள்ளே இழுத்து பெஞ்சில் போட்டது. பிறகு அவனிடம் ‘சகட்டு மேனிக்கு’ இருபது ரூபாயை வாங்கி டிரைவரிடம் கொடுத்தது. அவர் அதை சிகரெட் மாதிரி உருட்டி, காதில் சொருகிக் கொண்டார். இப்படி இரண்டு காதுகளிலும் பல சொருகல்கள்.
அந்த லாரி, முன்னால் சூழ்ந்த இருளைக் கொலை செய்தபடியே ஓடியது. பின்னால் கூட்டத்தில் இடிபட்ட சுயம்பு, பாதி உடம்பைத் தனது மடிமேல் போட்டபடி தன் முகத்தை முகத்தால் இடித்துக் கொண்டு தூங்கியவனை, நோட்டம் போட்டான். அவன் உருண்டு திரண்ட