மாமா மகனுக்குத் தாரை வார்ப்பதா என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே, நடுவர் இல்லாத ஒரு பட்டிமன்றம். ஆகையால் இப்போது இருவருமே பேசிக் கொள்வதில்லை. கடைசியில் மாமா மகன் இன்னொரு பெண்ணையும், அத்தை மகன் அடுத்த பெண்ணையும் கட்டிக் கொண்டதுதான் மிச்சம். உடனடியாக அப்பன்காரன் நாலைந்து பெரியவர்களோடு ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு நடத்தப் போனார். மறுவாரமே, ஒரு ஜீப்பில் ஒரே ஒரு பெண்ணும், ஆறு ஆண்களும் ஒன்று திரண்டு வந்து, அவளுக்குப் ‘பூ’ வைத்து விட்டுப் போய்விட்டார்கள். பெண் கொடுக்கல் - வாங்கலில், பெரும்பாலும் உள்ளூரைத் தாண்டாத அந்த “சுய மகரந்த சேர்க்கை” ஊராருக்கு இந்த ஐம்பது கிலோ மீட்டர் தூர மாப்பிள்ளையே ஒரு அதிசயம். ஆனால், மருவியவள் மரகதம்தான். மாப்பிள்ளை எப்படியோ? கூனோ? குருடோ? நொள்ளையோ? வெள்ளையோ? அவனது சொந்தக்காரர்கள் யாரும், இந்த ஊரில் இல்லாததால், அவன் எப்படி என்று அறிய முடியவில்லை. ஆகையால், முகமறியா ஒருத்தனிடம் முந்தானை விரிக்கப் போகிறோமே என்ற பயம். இடமறியா வீட்டில் இடறி விழப்போவது போன்ற தடுமாற்றம். இந்தச் சமயத்தில் தான், பதினைந்து நாட்களுக்கு முன்பு வந்த, தம்பி சுயம்பு, மாப்பிள்ளை ஊர் வழியாய்ப் போய் ‘பையனை’ப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனான். “எக்கா, மாப்பிள்ளை மட்டும் எனக்குப் பிடிக்கலன்னா இந்தக் கலியாணத்தையே நடத்த விடமாட்டேன். நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் போனவன் இதோ திரும்பியிருக்கிறான்...
மரகதம், தம்பியைப் பார்த்து நாணத்துடன் சிரித்தாள். காதுகள் நிமிர தலை கவிழ்ந்து நின்று அவன் பக்கமாக, கண்களை மட்டும் உயர்த்தினாள். அப்படியும் அவன் பதில் பேசாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு நிமிர்ந்தாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவள் முகம், சுழிப்பானது; சுண்டிப் போனது. கால்கள் தம்பியை நோக்கித் தாமாய் நகர்ந்தன. என்ன கோலம் இது? முகத்தில் ரத்தக் கீறல்கள்; வாயில் ரத்தச் சிதைவுகள், மரகதம் பதறினாள்.
“தம்பி... தம்பி... என்னடா ஆச்சு? என்னடா ஆச்சு?”
வயதளவில் நான்கு ஆண்டுகள் இடையில் நின்றாலும், உறவளவில் முப்பதாண்டு இடைவெளி கொடுக்கும் தாய் மாதிரியான அக்காவைப் பார்த்ததும், சுயம்புவால் தாளமுடியவில்லை. அவள் மேல் காலற்றவன் போல் சாய்ந்தான். இதனால் நிலை தடுமாறிப் போன மரகதம், வேப்ப மரத்தூணைப் பிடித்து, தன்னைச் சரிக்கட்டிக் கொண்டபோது, அவன் அக்காவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து அவள் தலைக்கு மேல் தன் தலையைப் போட்டு, ‘அக்கா... அக்கா’ என்று