ஒளிரும் ஒளியாய் மின்னினாள். அபிராமிபட்டர் வர்ணிக்கும் அம்பாள் மாதிரி...
மரகதம் தம்பியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவன் பேண்ட் போட்டிருப்பதைப் பார்த்து பெருமகிழ்ச்சி. இங்கிலீஷ் டாக்டர்ன்னா இங்கிலீஷ் டாக்டர்தான். ஒரு வாரத்திலேயே குணப்படுத்திட்டாங்களே...
சுயம்பு சும்மா இருக்கவில்லை.
“எக்கா... ஒன் மாப்பிள்ளையப் பார்த்து மயங்கி விழப்போற பாரு. அர்ச்சுனன் பல்வரிசையைப் பார்த்து விட்டு பவளக்கொடி மயங்கினாளாமே..அப்படி..”
“அப்போ மாப்பிள்ளைக்குத் தெத்துப் பல்லா. உதட்டை மீறி வெளியில தலைகாட்டுற பல்லா...”
எவளோ, ஒரு சித்தப்பா மகள், இன்னும் பார்க்காத மச்சானை, இப்போதே கிண்டல் செய்தாள். எல்லாப் பெண்களும் சிரித்தபோது, ஒருத்தி அவசரப்படுத்தினாள்.
“சரி... சீக்கிரமா கோயிலுக்குப் போயிட்டு வந்துடுவோம். மாமன் சடங்கு, மாப்பிள்ளை அழைப்புன்னு ஆயிரம் இருக்கு. பையன் வீட்டார் வந்துகிட்டே இருக்காங்களாம். எம்மாளு மரகதம். இப்பவே இப்படி வெட்கப்படாதடி! அந்த ராத்திரிக்கும் கொஞ்சம் வச்சுக்க! ஏய் சுயம்புத் தம்பி, இந்த ரூம நல்லாப் பார்த்துக்கணும். எல்லாப் பொருளும் இங்கதான் கெடக்குது... யாரையும் வீட்டுக்குள்ள விடாத!”
சுயம்பு தலையாட்டினான். தம்பியைக் கோயிலுக்குக் கூட்டிப் போக நினைத்த மரகதம், தம்பியின் தலையை வருடிவிட்டு, நடந்தாள். சுற்றிலும் பெண்கள் சூழத் தேரோட்டமாய்ப் போனாள்.
சுயம்பு அந்த அறையை அங்குமிங்குமாய் நோட்ட மிட்டான். வெளியே ஒலித்த மேளச் சத்தம், வெளியேறிக் கொண்டிருப்பதுபோல் சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தது. மணப்பெண் மரகதத்தை, பெண்கள் கோயிலுக்குக் கூட்டிப்போனபோது, அப்படிக் கூடவே போகாதது, சுயம்புவுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. இந்த அறையையும் அறைக்குள் இருப்பதையும் பார்த்துக்