(Reading time: 22 - 44 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

ராஜா இல்லாமல் தனித்துச் சாப்பிடத் தோன்றவில்லை. பழக்கமும் இல்லை. ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்கிறது, பெருமாளுக்கு அல்ல. வேப்பமரத்து நிழல் அவனை நல்ல உறக்கத்தில் ஆழ்த்தி விட்டிருந்தது. ராஜா அவனை ஏக வசனத்தில் திட்டிக்கொண்டே ஸ்கூட்டரை நிறுத்திக் கீழே இறங்கிக் கதவைத் தானே திறந்துகொண்டு உள்ளே சென்றான். காலையில் செய்த 'கசரத்’தில் அவனுக்கு உடல் களைத்துப் போயிருந்தது. நல்ல பசி வேறு. சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த தக்காளி ரசத்தின் வாசனை, சாம்பிராணிப் புகையுடன் கலந்து வந்தபோது அவனுடைய பசியை மேலும் தூண்டியது.

வீட்டுக்குள் நுழையும் போதே ”அத்தை ! பசி! பசி!... வா அத்தை!'' என்று எக்காளமிட்டுக் கொண்டே சமையலறையை நோக்கி விரைந்தான். நொடிப் பொழுதில் காக்கி உடையைக் களைந்து, வேறு உடை மாற்றிக்கொண்டு மணையில் போய் உட்கார்ந்துவிட்டான்.

''தக்காளி ரசம் வாசனை மூக்கைத் துளைக்கிறதே! என்ன சமையல் இன்றைக்கு! அப்பளம் பொரித்திருந்தால் முதலில் கொண்டு வந்து போடு. அத்தை வருகிறவரை அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பசி தாங்கவில்லை. உஸ்ஸ்... இடியட்! பெருமாள்! நெற்றி முழுதும் நாமத்தைப் பட்டையாகத் தீட்டிக்கொண்டு......... உட்கார்ந்தபடியே எப்படித்தான் நாள் முழுவதும் தூங்க முடிகிறதோ அவனால்!...'' வார்த்தைகளைப் பொரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான் ராஜா.

சமையலறையில் பச்சைப் பட்டாணியும் முட்டைக் கோஸும் எவர்ஸில்வர் வாணலியில் இளம் பதமாக வதங்கிப் பக்குவமாகிக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது.

''அந்தக் கறியில் கொஞ்சம் கொண்டுவந்து போடு... பசி தாங்கவில்லை. அத்தையைக் காணோமே... அத்தே! அத்தே! நீ வரப் போகிறாயா.... நான் சாப்பிடட்டுமா?”

ஞானம் புகையப் புகைய கோஸ் கறியைக் கொண்டு வந்து பறிமாறினாள். அவசரமாக அதைச் சட்டென்று எடுத்து வாயில் போட்டுக்கொண்ட ராஜா, நாக்கைச் சுட்டுக் கொண்டு சூடு பொறுக்காமல் திணறிப் போய் ''பூ! பூ!” என்று வாய்க்குள்ளாகவே ஊதிச் சுவைத்துக் கொண்டிருந்த இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே வந்த பார்வதி, சிரிப்பை அடக்கிக் கொண்டவளாய், ”ஏண்டா! ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லையா? உனக்காக நான் இத்தனை நேரம் காத்திருந்தேனே, நான் வருவதற்குள் என்ன அவசரம் வந்து விட்டது உனக்கு?''

ராஜா பதில் கூறவில்லை. பதில் கூறும் நிலையில் இல்லையே அவன்!

துல்லியமாக, எளிமையாகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் பார்வதி. ஒரு கல்லூரியின் பிரின்ஸிபால் என்று கூறுவதற்குரிய வயதோ, தோற்றமோ, ஆடம்பரமோ அவளிடம் காணப்படவில்லை. அவளுடைய ஆழ்ந்த படிப்பும், விசாலமான அறிவும்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.