சிறுகதை - உயிர்த்தது மனித நேயம் - ஜெப மலர்
அண்ணா குடிக்க தண்ணீர் தாங்களேன் என்று அரண்மனை போன்ற வீட்டின் வாயிலில் தன் டூவீலரில் நின்றவனிடம் கேட்டாள் எண்ணையில்லா கேசத்துடன் வாடிப் போன முகத்துடன் நின்ற சிறுமி ஒருத்தி...
போ.. போ... தண்ணிலா இல்ல... இதுவே வேலையா போச்சு இதுங்களுக்கு... ஊருக்கு ஒதுக்கு புறமா வீடு இருக்கிறதால திருடுவதற்கு வசதியாக இருக்கும்னு பார்த்து விட்டு வர அனுப்பினாங்களோ... என்று வார்த்தை அம்புகளை பாய்ச்சினான் 40வயது மதிக்கத்தக்க மனிதன் ஒருவன்...
அம்மா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நானும் எல்லாரையும் மாதிரி இருந்திருப்பேன்ல என்று எண்ணியவாறு நடந்த சிறுமியின் கண்களில் பட்டது அடிபம்பு... தேவைக்கு தண்ணீர் குடித்து விட்டு பாட்டிலிலும் நிரப்பி கொண்டு மெயின் ரோட்டை அடைந்தாள் சிறுமி...
அந்தோ பரிதாபம்... அங்கே ஒருவர் பைக்கில் இருந்து கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்... சுற்றும் முற்றும் பார்த்தாள் சிறுமி.. சிறிது தூரம் சென்றால் தான் ஆட்களை பார்க்க முடியும் என்பதை அறிந்ததும் ஓட்டமாக சென்று சில மனிதர்களை அழைத்து வந்தாள்.. மயங்கிய நிலையில் கிடந்தார் அடிபட்டவர்... தன்னிடம் இருந்த தண்ணீரை கொடுத்து மயக்கம் தெளிய உதவினாள் சிறுமி...
அதற்குள் ஆம்புலன்ஸ் வரவும் அவரை தூக்கி வண்டியில் ஏற்றினார்கள்.. தன்னால் சிறிது நேரத்திற்கு முன்னால் துரத்தப்பட்ட சிறுமியின் கையில் திறந்த நிலையில் இருந்த பாட்டிலை கண்டதும் அவரது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது....
தன் பாதையில் நடையை தொடர்ந்தாள் சிறுமி...
மாறிய மனதோடு மனிதனாய் சென்றான் பெரியவன் மருத்துவமனை நோக்கி....
அரண்மனை வாயில் கதவை
அடைத்து தண்ணீர் மறுத்து
எமனாய் நின்றவனுக்கு....
யமலோகத்தின் வாயிலை அடைத்து
உயிர் பெற உதவிட்டாள் சிறுமி ஒருத்தி...
துளிர் விட்டது மனிதநேயம் இங்கே...