சிறுகதை - உணவூட்டும் தாய்! - ரவை
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது என்பது சரிதான், ஆனால் பசிக்கு உணவு தேடுவது தவறா?
மீனாட்சியம்மன் ஆலய வாசலில், பல வருடங்களாக பிச்சை எடுத்துவரும், முடவன் முனியன், அம்மன் அருளால் ஒருநாள்கூட பட்டினி கிடந்தது இல்லை!
ஆனால், இன்றோ, அது பொய்யாகிவிடுமோ!
ஆலயம், மாதாகோவில், மசூதி எல்லா வழிபாட்டு நிலயங்களும் மூடப் பட்டுள்ளன!
ரயில், பஸ் நிலயங்களும்தான்! கடைகள் மூடப்பட்டுள்ளதால், தெருவில் நடமாட்டமே இல்லை!
வீடுகளின் கதவுகள் இழுத்து மூடிக் கிடக்கின்றன!
பாவம்! முடவன் முனியன் என்ன செய்வான்?
நேற்று முழுதும் தண்ணீரைக் குடித்தே பசியை போக்கினான். இன்று அது முடியாது போலிருக்கிறது! ஏனெனில், வெறும் வயிற்றில் தண்ணீர் குமட்டுகிறது!
" அம்மா! இத்தனை வருஷம் என் பசி தீர்த்தவளே! ஊரடங்கு நேரத்தில் உன் கதவும் தாளிடப்பட்டுள்ளது! மனிதர்களும் மனையும் மனதும்தான்!
எனக்கு வயதும் கூடி விட்டது! பசி தாங்க முடியவில்லை! என் குறையை காது கொடுத்துக் கேட்கக் கூட, எவருமில்லை, உன்னைத் தவிர!
உன் வீட்டுவாசலிலேயே என் உயிர் பிரியட்டும்! வேறு வழி?"
போலீஸ்வேன் ஒன்று, முனியனின் அருகில் வந்து நின்றது!
லத்தியை தட்டிக் கொண்டு வந்து எதிரில் நின்று " இங்கே இருக்கக்கூடாது, எங்காவது மறைவான இடம் பார்த்துப் போ! எழுந்திரு!" என்றான். " ஐயா! நான் முடவன், எழுந்திருக்க முடியாது!"
" கிண்டலா! ரெண்டு அடி விழுந்தால், முடவன் எப்படி ஓடறான், பார்க்கிறியா?"
" அதுவும் முடியாதுய்யா! ரெண்டுநாளா பட்டினி! அடிச்சா, உயிர் போயிடும்........"
" அதையும் பார்த்து விடுவோம்...!" என்று லத்தியை ஓங்கினான், அந்த போலீஸ்காரன்!
ஓங்கிய லத்தி ஏனோ முனியனின் முதுகில் இறங்க வில்லை!
போலீஸ்காரன் திரும்பி பார்த்தான், இன்ஸ்பெக்டர்!
சைகையாலே, அடிக்க வந்த போலீஸிடம், முடவனை தூக்கி வேனில் ஏற்றிவிடப் பணித்தார்!
வேறுவழியின்றி, அவன் அப்படியே செய்தான்!
அவன் மனதில் எழுந்த அந்தக் கேள்வி, 'இவரெங்கே, எப்படி, இங்கு திடுமென வந்தார்? இவர் எந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்?', பதில் கிடைக்கப்படாமலேயே கேள்வி நின்றது!