சிறுகதை - நியூட்டனின் மூன்றாம் விதி...... - ஜெப மலர்
நியூட்டனின் மூன்றாம் விதி என விதியை மனனம் செய்து கொண்டு இருந்தான் ஆனந்த் லதா தம்பதியினரின் மகன் சதீஷ்.. அருகில் இருந்த மகள் சபிதா கணக்கு ஹோம் வொர்க்கை செய்து கொண்டு இருந்தாள்.
ஏங்க... அம்மா ஊருக்கு போறாங்க. இன்னும் அரை மணி நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் போகனுமாம். கொஞ்சம் கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்திடுங்களேன்.....என்றாள் லதா.
இந்த வெயிலுக்குள்ள மனுஷ பய போக முடியுமா என்றவர்... ச்ச ஒரு நாள் வீட்ல இருக்கிறதுக்குல ஆயிரம் வேலையை சொல்றா என்றவாறே டேபிள் ஃபேனை தனக்கு நேராக திருப்பி வைத்து விட்டு சோபாவில் சாய்ந்து கொண்டார் ஆனந்த்.
பத்து நிமிடம் கழித்து....
ஏங்க... நானே போய் எங்க அம்மாவை விட்டுட்டு வந்திடறேன். தங்கச்சியை பார்க்க போறாங்க, அதனால கொஞ்சம் ஆப்பிள் வாங்கி கொடுத்து விடனும்னு நினைக்கேன். பணம் தாங்க...
நேற்று தான ஏழைகளின் ஆப்பிளை கிலோ கணக்கில் வாங்கி கொண்டு போட்டேன். அதுல ஒரு கிலோ என்ன, இரண்டு கிலோ வேணும்னாலும் எடுத்து கொடு என்று சொல்லி விட்டு திரும்பி படுத்து கொண்டார் ஆனந்த்..
அவர் தக்காளி பழத்தை கொடுக்க சொல்கிறார் என்று தெரிந்ததும் கோபமும் ஆதங்கமும் வீறு கொண்டு எழும்ப, கையில் இருந்த பாத்திரத்தை மேஜையில் ஓங்கி வைத்து விட்டு தன் ஸ்கூட்டி சாவியை எடுத்து கொண்டு எதிர் வீடாகிய தன் தாயின் வீட்டிற்கு சென்றாள் லதா...
ஒரு மணி நேரம் கழித்து...
ச்சப்பப்பா.. என்னா வெயிலு என்றவாறே உள்ளே நுழைந்த லதாவிடம், லதா... குடிக்க கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் போட்டு தா... என் நண்பன் ஊருக்கு வந்து இருக்கானாம். அவனை ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடறேன் என்று அறைக்குள் இருந்து சத்தம் கொடுத்தார் ஆனந்த்...
என்னா வெயிலுங்க.... மனுஷ பய வெளில போக முடியாதுங்க என்றபடியே அங்கு வந்த லதா ஜீஸ் டம்ளரை அவரிடம் கொடுத்து விட்டு முகத்தை துடைத்து கொண்டே சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்..
வர வர திமிரு அதிகமாகிட்டு இவளுக்கு... வீட்டுக்குள்ள சொகுசா உட்கார்ந்து
சாப்பிடுறால என்றவாறே ஜீஸை வாயில் வைத்தவர், என்னத்தை பண்ணி தொலைச்ச, இந்த புளிப்பு புளிக்கு....
அது ஏழைகளின் ஆப்பிள் நிறைய போட்டு செஞ்சது என அறைக்குள் இருந்து சத்தம் வர செய்வதறியாது திகைத்தார் ஆனந்த்.