இவை அத்தனையும் மாது-மதுரம் அறிந்ததே!
தேனீயும் அவனுக்கு ஈடாக, அழகானவள். அவளும் எம்.சி.ஏ. படித்து, நிறைய சம்பாதிக்கிறாள். பெற்றோர் செல்லமாக வளர்க்கிற 'ஒன்லி டாட்டர்'!
குடும்பத்தின் மதிப்பை எந்தவிதமாகவும் குறைக்காத மகள்!
பின், எங்கே முரண்? தேனீ வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு நாள், ஒரு இளைஞன் வீடு தேடி வந்து, மாது-மதுரத்தை சந்தித்து, அவர்களிடம் ஒரு கடிதம் தந்து, அடக்கமாக நின்று கொண்டிருந்தான்.
யாரோ ஒருவன், ஏதோ ஒரு கடிதம் தந்து, பவ்யமாக எதிரில் நிற்கிறானே, என மாது-மதுரம் திகைப்புடன், கடிதம் பிரித்து, அவசரமாக படித்தனர்.
' அன்புள்ள ஐயாவுக்கு,
வணக்கம். என் பெயர் அற்புதன்........'
இதைப் படித்ததுமே, மாது-மதுரம் இருவரும் எழுந்து அவனை வரவேற்று அமரச் சொன்னார்கள்.
அவனும் ஏதும் பேசாமல் அமர்ந்தான். சைகையால், கடிதம் தொடர்ந்து படிக்கச் சொன்னான்.
' தேனீ என்னைப் பற்றி உங்களிடம் நிறைய சொல்லியிருப்பாள்!
அவள் என்னை மிகவும் விரும்புகிறாள். நானோ அவளை, உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன்.
காதலைப் பற்றி எனது புரிதல் சற்று வித்தியாசமானது!
காதலிப்பவரை தனது உடமையாக்கிக் கொள்ள வெறி பிடித்து அலைவதல்ல, தூய்மையான காதல்!
என் காதலி, தனது வாழ்க்கையில், எந்தக் குறைகளும் இன்றி, பிறர் பொறாமைப்படும் அளவுக்கு மிக உயர்ந்த நிலையில், நிறைந்த மகிழ்வுடன் வாழ வேண்டும் என ஆசைப்படும் என் வேண்டுகோள், இதுவே!
ஐயா! தேனீக்கு எல்லா விதங்களிலும் பொருத்தமான ஒருவனுக்கு மணமுடித்து வைக்க உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்!
நான் அவளுக்கு உகந்தவன் அல்ல, ஏனெனில் நான் ஒரு பிறவி ஊமை!'
இருவரும் திடுக்கிட்டு எழுந்து, அவனைப் பார்த்தனர். அவனும் 'ஆமாம்' என தலை அசைத்தான்.
மாது-மதுரம் தங்களை அறியாமல், பொல பொல வென கண்ணீர் உகுத்தனர்.
' இத்தனை உயர்ந்த ஒருவனுக்கு இப்படி ஒரு குறையா? ஈசா! இதென்ன கொடுமை?'
அற்புதன், மறுபடியும் அவர்களை தொடர்ந்து கடிதம் படிக்கச் சொன்னான்.