எனக்கு வேண்டிய விஷயங்கள் தெரிந்து விட்டதால் அங்கிருந்து நகர்ந்து எங்கள் அறைக்கு சென்று உடை மாற்றி, முகம் கழுவி வந்த போது, நரேந்திரன் அவசர அவசரமாக பொருட்களை பெட்டியில் எடுத்து வைப்பதை பார்த்தேன். இன்னும் கோபம் குறையாததால் எதுவும் கேட்காமல் அமைதியாக ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தேன். பொதுவாக நரேந்திரனுக்கு பேக்கிங் எல்லாம் செய்து பழக்கம் இல்லை. ஆனாலும் இருவரின் வீம்பும் குறையாததால் அவரும் என்னிடம் உதவி கேட்கவில்லை, நானும் உதவி செய்ய முன் வரவில்லை. ஐந்தே நிமிடத்தில் பெட்டியை மூடியவர், என் பக்கம் ஒரு கோப பார்வையை செலுத்தி விட்டு, ஒன்றும் சொல்லாமல் கிளம்பினார். அறையை விட்டு வெளியே சென்றவர் என்ன நினைத்தாரோ திரும்பி வந்து,
"போறேன்..." என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்கு காத்திராது கிளம்பி சென்றுவிட்டார்.
அவர் கிளம்பி சென்ற பின் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்த என் மனம், அவர் சொல்லி சென்ற 'போறேன்'ல் சற்றே சலனம் அடைய தொடங்கியது. எத்தனை தமிழ் படங்கள் பார்த்திருப்பேன். இது போல் போறேன் என்று சொல்வது, கால் தடுக்குவது இது எல்லாம் அபசகுனங்கள் ஆச்சே! இந்த எண்ணம் தோன்றிய உடனேயே மற்றொரு பக்கம் இருந்து, ச்சே ச்சே இதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஒரு குரல் கேட்டது. ஆனால் அந்த குரலுக்கு கொஞ்சம் கூட தெம்பு தான் இல்லை.
‘மறக்க முடியுமா’ தொடங்கி ‘மண் வாசனை’ வரை இது போன்ற காட்சி உள்ள படங்கள் ஒன்றொன்றாக என் மன கண் முன் ஊர்வலம் வர ஆரம்பித்தது. ரொம்பவே குழப்பமாக இருக்கவே, இதற்கு மேல் முடியாது என முடிவு செய்து, அவசரமாக எழுந்து என் கைப்பைக்குள் இருந்த என் கைப்பேசியை எடுத்து என் கணவரின் எண்ணை தட்டினேன். உடனேயே கைப்பேசி ஒலிக்கும் ஓசை அருகிலேயே கேட்டது. திரும்பி பார்த்தால், என் கணவர் அவரின் கைபேசியை மறந்து அங்கேயே விட்டு சென்றிருந்தார். அடடா, இனி இரண்டு நாட்கள் அவரிடம் பேசுவது எப்படி? ட்ரெயின் கிளம்பிவிட்டதா என்பதில் தொடங்கி அவர் தர்வாத்தில் எப்படி இருக்கிறார் என்பது வரை அறிந்துக் கொள்வது எப்படி?
எனக்கு என் மீதே கோபம் வந்தது. அப்படி என்ன கோபம் வேண்டி இருக்கிறது? அவருக்கு நண்பர் என்பதால் தானே அவசரமாக ட்ரெயினில் டிக்கெட் பதிவு செய்திருப்பார். இது கூட