கண்ணே நலமா - வத்சலா
அந்த சனிக்கிழமை மதிய பொழுதின் சோம்பேறித்தனமான மனநிலை, சட்டென்று மாறி மனதில் உற்சாகம் இப்படி பெருக்கெடுக்கும் என்று நினைக்கவேயில்லை ப்ரசாத்.
மனைவி ரம்யா வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அந்த விடுமுறை நாளின் தனிமையை போக்கிக்கொள்ள, அலுவலக நண்பன் வருண் வீட்டிற்கு வந்திருந்தான் பிரசாத்.
.கடந்த சில மாதங்கள் முன்பாகத்தான் அவனது அலுவலகத்தில் சேர்ந்திருந்தான் வருண்.
தன்னுடைய facebookஇன் பக்கங்களை தனது மடிக்கணினியில் திருப்பிக்கொண்டிருந்தான் நண்பன் வருண்.
அவனருகில் அமர்ந்து திரையில் பார்வையைப்பதித்துக்கொண்டிருந்த ப்ரசாத். அந்த புகைப்படம் கண்ணில் பட்டவுடன் ஒரு நிமிடம் துள்ளிவிட்டிருந்தான்.
டேய்! டேய்! அந்த போட்டோவைக்காட்டு. என்றான்.
'ஏண்டா? என்றபடி அந்தப்புகைப்படத்தை பெரியதாகிக்காட்டினான் வருண்.
அந்தப்புகைப்படம்! அந்த புகைப்படத்தில் கணவனுடன் இருந்தாள் அவள். திருமணம் ஆகிவிட்டதா அவளுக்கு?
சில நொடிகள் அந்த புகைப்படதையே பார்த்துக்கொண்டிருந்தான் ப்ரசாத் .'ரேவதி ரமேஷ்' என்றிருந்தது அவள் பெயர்.
'இவளை உனக்கு தெரியுமாடா' என்றான் வருண்.
ஆம்.... ஆமாம்....... தெரிஞ்ச பொண்ணுதான் தடுமாறியது அவன் குரல்.
'என் wifeவோட friendடா' என்றான் வருண் 'ரெண்டு வருஷம் முன்னாடி இவள் கல்யாணத்துக்கு கூட போயிட்டு வந்தேன்.
இப்ப எந்த ஊர்லேடா இருக்கா? காரைக்குடி தானா?
'சரியாய் தெரியலைடா' என்றான் வருண்.
'உன் wifeஐ கேட்டு சொல்லுடா' என்றான் ப்ரசாத்
'வம்பா? என்றான் வருண். என் friendடோட விவரமெல்லாம் உங்க friendக்கு எதுக்குன்னு கேட்பா. வேணும்னா நீயே போய் கேளு' என்று கடிகாரத்தை பார்த்தபடியே எழுந்தவன்
'டேய் பால் வாங்கணும். பக்கத்திலே தான் கடை.நான் போயிட்டு வந்திடறேன் நீ இரு' என்று நகர்ந்தான் வருண்.
கணினியை அணைக்கவில்லை வருண். அவன் நகர்ந்தவுடன் ப்ரசாதின் விரல்கள் கீ போர்டை தட்ட அவளை பற்றிய விவரங்கள் திரையில் விரிந்தன.
தனிப்பட்ட விவரங்கள் என்று எதையுமே தந்து விடவில்லை அவள். மதுரையில் இருப்பதாக மட்டுமே தெரிந்தது.
அவள் புகைப்படங்கள் ஒவ்வொன்றாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான். மனதில் பலவிதமான உணர்வுகள் பொங்கி பொங்கி எழுந்தன
அவள் கணவன் முகம் கூட பரிச்சயமானதாகவே தோன்றியது. சில நிமிடங்கள் கழித்து உரைத்தது. அவர்கள் குடியிருந்த தெருவிலேயே குடி இருந்த ரமேஷ் அல்லவா அவன்.?
அவள் திருமணம் அத்தனை சுலபமாக நடந்திருக்குமா?
சாதாரண கோவில் அர்ச்சகரின் மகள் அவள். அவள் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல். என் ,சுயநலத்திற்காக அவளை பிரிந்து வந்துவிட்டேனே?
இந்த நான்கு வருடங்களில் அவள் எப்படி இருக்கிறாள் ,எங்கே இருக்கிறாள் என்று கூட கேட்க தோன்றவில்லையே எனக்கு. எத்தனை பெரிய சுயநலவாதி நான்.? மனம் உறுத்தியது.
கணிணியின் திரையையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன் .காரைக்குடியில் தாவணி அணிந்து கொண்டு பயந்து பயந்து பெண்கள் கல்லூரிக்கு சென்ற பெண்ணா இவள்?
அவளிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. மகிழ்ச்சியாக இருக்கிறாளா அவள்? பார்க்க வேண்டும். ஒரே ஒரு முறை அவளிடம் பேசி மனதார மன்னிப்பு கேட்க வேண்டும்.
நண்பன் வரும் காலடி சத்தம் கேட்டு கணினியை அணைத்தான் ப்ரசாத்
இரவு மனைவி ரம்யா செய்த உணவு தொண்டையில் இறங்க வில்லை அவனுக்கு. மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.
யோசித்துக்கொண்டே இருந்தான் ப்ரசாத் அப்படி ஒன்றும் அவனை புரிந்து கொள்ளாத மனைவி இல்லை ரம்யா. எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா அவளிடம்?
நீண்ட நேர யோசனைக்கு பிறகு முடிவெடுத்தான். இப்போது வேண்டாம். ரேவதியை பார்த்துவிட்டு வந்த பிறகு சொல்லிக்கொள்ளலாம்.
காலை எப்போது விடியும் என காத்திருந்தவனாய் எட்டு மணிக்கு கிளம்பி விட்டிருந்தான் .
விடுமுறை நாளில் இத்தனை சீக்கிரம் எழுந்துவனை ஆச்சர்யமாக பார்த்தாள் ரம்யா.
எங்கே கிளம்புகிறான்? என்று கண்களில் கேள்விக்குறியை தேக்கி கொண்டு பார்த்த மனைவியின் கன்னத்தில் செல்லமாய் தட்டி 'ஒரு முக்கியமான வேலை வந்திடறேன்' என்றபடி, ஒரு முடிவுடன் வருண் வீட்டை நோக்கி நடந்தான் ப்ரசாத்
அடுத்த ஏழாவது நிமிடத்தில் வருண் வீட்டில் இருந்தான்.
'அவர் வாக்கிங் போயிருக்கார்' என்றாள் வருணின் மனைவி டிபன் ரெடியா இருக்கு சாப்பிடறீங்களா?
'இல்லை அதெல்லாம் வேண்டாம்' என்றான் ப்ரசாத் வேறொரு முக்கியமான விஷயம் உங்ககிட்டே பேசணும் என்றான் தயக்கத்துடன்.
'என்கிட்டேயா'? புருவங்கள் உயர அவன் எதிரில் அமர்ந்தாள் ' சொல்லுங்க'
உங்க...உங்க...friend ரேவதியோட அட்ரஸ் வேணும்?
மெல்ல மாறியது அவள் முகம்.
ரேவதிக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம்.?
என்ன பதில் சொல்லவதென்றே தெரியவில்லை அவனுக்கு.
'ரேவதி என்னை பற்றி இவளிடம் சொல்லியிருக்கிறாளோ இல்லையோ. நான் ஏதாவது சொல்லி அவளை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடகூடாது' என்ற எண்ணத்தில் சொன்னான்
'அது வந்து ரேவதி என்னோட பழைய friend.' இப்போ டச் விட்டு போச்சு.
'பழைய friendன்னா? என்றாள் வருணின் மனைவி 'இங்க பாருங்க ஏற்கனவே அவங்க வீட்டிலே நிறைய பிரச்சனை. ரொம்ப நாள் கல்யாணமாகாம இருந்து ,இப்போதான் செட்டில் ஆயிருக்கா. அவளுக்கு எந்த பிரச்னையும் வர்றதை நான் விரும்பலை'
'தெரியும். எல்லா பிரச்சனைக்கும் மூலக்காரணம் நான் தான்' சொல்லிகொள்ளவில்லை அவன்.
'அப்படியெல்லாம் எதுவும் வராது.' எனக்கு அவ மேலே, அவ குடும்பத்து மேலே அக்கறை அதிகம். என்றான் ப்ரசாத்
நிஜமாவே உங்களுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?' என்றாள் விடாமல்
நான் அவளுக்கும், அவள் குடும்பத்துக்கும் கடன் பட்டவன் . எனக்கு அவ சந்தோஷம் ரொம்ப முக்கியம். ப்ளீஸ் அட்ரஸ் குடுங்க என்னாலே அவளுக்கு எந்த பிரச்சனையும் வராது. இது எங்க அம்மா மேலே சத்தியம்.
அவன் சொன்ன விதம் அவளை என்னோமோ செய்திருக்கவேண்டும். .அட்ரஸையும் ,தொலைபேசி எண்ணையும் தந்துவிட்டிருந்தாள் அவள்.
'கிளம்பும் முன் கையெடுத்து வணங்கி 'ரொம்ப தேங்க்ஸ்' என்று அவன் சொன்ன போது சற்று திகைத்துதான் போனாள் வருணின் மனைவி.