அடையாளம்
அவன் எண் புகைப்படத்துடன் ஏழாவது முறையாக மிதுனாவின் கைப்பேசியில் ஒளிர்ந்தது. "எடுத்து பேசலாமா வேண்டாமா" என்ற சிந்தனையில் கைகள் நடுங்க ஆட்டோவில் அமர்ந்து இருந்தாள் மிதுனா. தலையை வெளி நீட்டி சிக்னலை பார்த்தால் அதிலோ 68,67....... என்று எண்கள் ஓடி கொண்டிருந்தன. ஆயாசமாக உணர்ந்தாள் மிதுனா.
இரண்டு மாதங்கள் ஓடி விட்டன, அவன் மிதுனாவை விட்டு விலகிச் சென்று. நல்ல நண்பர்களாக தான் பழக ஆரம்பித்தார்கள், இவர்களின் நட்பு இருவரின் பெற்றோரையும் தழுவிச் செல்ல குடும்ப நண்பர்கள் ஆனார்கள். பெற்றோர்கள் நெருங்கி வந்த சமயம் இருவருக்குள் சண்டைகள் வர ஆரம்பித்தன. மிதுனா தான் எப்பொழுதும் விட்டுக் கொடுத்து போனாள்.
அதுவே அவனுக்கு சாதகமாக அமைய எல்லாவற்றிற்கும் மிதுனவை திட்டி குறை கூற தொடங்கினான். இதே நிலை நீடிக்க, பொறுமை இழந்த மிதுனா ஒரு நாள் பதிலுக்கு அவனை திட்ட போய் சண்டை வழுத்தது. அன்று வார்த்தைகளால் குத்திக் கிழித்து சென்று விட்டு இன்று திடீரென சந்திக்க வேண்டும் என்று கூறுகிறான். மாலை 6 மணிக்கு coffee day-விற்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்!!!
ஓட்டுனர் ஆட்டோவை கிளப்ப, கனவிலிருந்து விழித்தது போல் தன் நினைவிற்கு வந்தவளாய் கடிகாரத்தைப் பார்த்தாள். “மணி 6.20!!! ஐயோ கடவுளே 6 மணிக்கே வரச் சொன்னானே இன்று என்ன பூகம்பம் வெடிக்குமோ” என்று நொந்து கொண்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த coffee day முன்பு நின்றது ஆட்டோ, கடவுளை வேண்டிய படியே இறங்கி உள்ளே சென்றாள்.
அவன் வழக்கத்திற்கு மாறாக மந்தகாச புன்னகையுடன் எழுந்து மிதுனாவை நோக்கி வந்தான். "வருவது அவன் தானா?ஆமாம் அவனே தான். சீறி விழுவான் என்று நினைத்தால் புதிராக புன்னகைக்கிறானே, என்ன இருக்கிறது அந்த புன்னகையில்?" என்று சிந்திக்கும் போதே அவள் முன் கையை ஆட்டி பூவுலகிற்கு அவளை கொண்டு வந்தான் வசீகரன்.
"இப்படியா பட்டிக் காட்டான் பீசாவை பார்க்கற மாதிரி பார்க்கிறது ச்சே ச்சே " என்று தன்னையே திட்டிக் கொண்டு அவனுடன் சென்றாள்
யாருடைய இடைஞ்சலும் இல்லாதிருக்க ஒரு மூலையில் இருந்த இருவர் மட்டுமே அமரக் கூடிய மேஜையைத் தேர்வு செய்து அமர்ந்தான். அவளும் அவனுக்கு நேர் எதிர் அமர்ந்து தரையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நிமிட அமைதிக்குப் பின் , தயக்கத்தை உடைத்து முதலில் பேசியவன் வசீகரனே " என்னை மன்னிச்சுரு மிதுனா, உன்னை ரொம்பவே காயப் படுத்திட்டேன் " மிகவும் மெல்லிய குரலில் ஆனால் தெளிவாக ஒவ்வொரு வார்த்தையும் அவன் உதடுகள் தாண்டி விழுந்தன.
முதன் முதலாய் "ABCD" கேட்கும் குழந்தை போல் விழித்தாள் மிதுனா. வசீகரனே தொடர்ந்தான் " உன்னை விட்டு போனதுக்கு அப்புறம் ரொம்பவே பட்டுட்டேன் மிது, இந்தத் தனிமை எனக்கு நிறையவே புரிய வெச்சுது ப்ளீஸ் என்ன விட்டு இனி எங்கேயும் போகாத மிதுனா"
தன் காதுகளையே நம்ப முடியாமல் பேசா மடந்தையென அமர்ந்திருந்தாள். இவள் தன்னை மன்னிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தவனாய் அவனும் எதுவும் பேசாமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.
மெல்ல மிதுனாவிற்கு தைரியம் வந்தது. ஒரு முடிவிற்கு வந்தவளாய் தன் கைப்பையில் இருந்த அதை மெதுவாக வெளியே எடுக்க அவள் திறந்த போது அவள் கையைப் பற்றி சட்டென ஒரு அழகிய பிளாட்டினம் மோதிரத்தை அணிவித்துத் " வில் யூ மேரி மீ" என்று தன் காதலை சொல்லி விட்டான் அவள் வசீகரன்!
மிதுனா ஒரு நிமிடம் சுவாசிக்க மறந்து தான் போனாள். அவள் முகம் சிவப்பதையும் தன் பார்வையைத் சந்திக்க முடியாமல் விழி தாழ்த்தியதையும் கண்டு மனதில் இருந்த பாரம் முழுவதும் கரைந்து போனது அவனுக்கு
“இவ்வளவு அழகாகக் காதலைச் சொல்லி விட்டாளே இவள்” மனதிற்குள் வியந்தான். மெல்ல நிமிர்ந்து நேராக அவன் கண்களுக்குள் பார்த்து சொன்னாள் நீ இல்லாம என்னால எப்படி வாழ முடியும்னு நினைக்கிற வசீ, இந்த ரெண்டு மாசம் ஒரு கால், மெசேஜ் இல்லாம எப்புடி தவிச்சு போயிட்டேன் தெரியுமா ஐ லவ் யூ வசீ , என்னைக்கும் உன்மேல கோவப் படவோ உன்ன ஒதுக்கி வைக்கவோ என்னால முடியாது" என்றவளின் கண்களில் நீர்த்திரையிட, பதறி தான் போனான் அவளுடைய வசீ. எத்தனை முறை அவளிடம் மன்னிப்புக் கேட்டான் என்று அவனுக்கே நினைவிருக்காது.
பின் தன் பையிலிருந்து அதை எடுத்துக் கொடுத்தாள். க்ரிஸ்டலினால் செய்யப்பட்ட அழகிய ஹார்ட் வடிவ கிப்ட் அது “ஐ லவ் யூ வசீ” என்று என்க்ரேவ் செய்யப்பட்டிருந்தது. இந்த முறை நீர்த்திரையிட்டது வசீகரனின் கண்கள். இருவரும் வெகு நேரம் காதல் மொழி பேசிக் களித்தனர்.
பின் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் வெகு விமர்சையாக வசீ -மிது திருமணம் முடிந்தது.
இப்போது நடந்தது போல் கண்களையும் மனதையும் விட்டு அகலாமல் உள்ளது ஒவ்வொருக் காட்சியும் ஆனால் இரண்டு ஆண்டு ஓடி விட்டது திருமணம் முடிந்து!
கையில் திருமணப் புகைப்படத்தை வைத்துக் கொண்டு எங்கோ பார்த்தபடி சிட் அவுட்டில் அமர்ந்திருந்த மனைவியை சில மணித் துளிகள் கண்களாலே அளந்தான் வசீகரன். கருநீல வண்ண காட்டன் புடவையில் தன் நீண்ட கூந்தலைப் பிண்ணி அதில் மல்லிகை சரத்தை சூடியிருந்தாள் மனம் எதிலோ லயித்திருக்க இதோலோரம் ஓடிய புன்னகையுடன் தாய்மைக்கே உரித்தான அழகுடன் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்த அவன் மிதுனாவை பார்த்த போது அவனுள்ளும் தாய்மை உணர்வு பொங்கிற்று.
"இந்த மாதிரி டைம்ல ஏண்டா வெளில உட்காந்துருக்க" என்ற கணவனின் குரலில் தன்னிலை கொண்டு கணவனைப் பார்த்தாள். "நம்ம கல்யாண போடோ பார்த்துட்டு இருந்தேன் பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சு அதான் அப்டியே உட்காந்துட்டேன்" என்று கூறும் போதே அவள் முகம் மாறியது. சில நொடிகளில் வலி தாங்க முடியாமல் அவன் தோள்களில் சாய்ந்து கத்தத் தொடங்கி விட்டாள் மிதுனா.
இரவு 9 மணிக்கு அந்த ஹாஸ்பிட்டலே அதிரும் படி பூமிக்கும் வானுக்கும் குதித்துக் கொண்டிருந்தான் வசீகரன்! அவனுக்கு மகன் பிறந்து விட்டானாம். கை கால் முளைத்த பூக்குவியலை போல் தொட்டிலில் கிடந்த குட்டி வசீகரனைப் பார்த்து இருவரும் சொல்லுவதற்கு இயலாத ஆனந்தம் கொண்டனர். (ஏன் என்று கேட்டால்)
அவர்களின் காதலுக்கான அடையாளமாம்!!
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.