மனதை தொட்ட ராகங்கள் - 02 - வத்சலா
என் காதலே என் காதலே
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்?
ஸ்ரீகாந்தின் மனம் ஏனோ சமாதானம் அடையவே மறுத்தது. இருபது நாட்களுக்கு பிறகு இன்று காலையில் தான் சென்னையிலிருந்து, காரைக்குடி திரும்பியிருந்தான் அவன்,
காரைக்குடியில் தனது வீட்டில் சாய்வு நாற்காலியில் கண்களை மூடி சாய்ந்து கிடந்தான் ஸ்ரீகாந்த்.
மனம் முழுக்க மோகனாவே நிறைந்திருந்தாள். அவள் நினைவுகளில் மூழ்கிப்போனவன் அவளை மானசீகமாக கேட்டுக்கொண்டிருந்தான்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப்போகிறாய்?
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?
சில நாட்கள் முன்பு வரை மோகனா அவன் வாழ்கையின் மோகன ராகமாகத்தான் இருந்தாள்.
அவனது அண்ணியின் தங்கை அவள். அவளை முதன் முதலில் சந்தித்தது அவனது ஒரே அண்ணனின் திருமணத்தில்.
ஏதோ ஒரு வேலை நிமித்தமாக டெல்லி சென்றிருந்தவன் அந்த திருமணதிற்கு முன் தினம் மாலைதான் சென்னை வந்திறங்கினான்.
மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்துக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த அவனை வரவேற்றது மோகன ராகம். மிக இனிமையான கீ போர்டு இசை.
கீ போர்டு வாசித்துக்கொண்டிருந்தாள் அவள். மோகன ராகத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது 'இ.......தயம் ஒ..ரு கோ....வில். அ....தில் உ.....தயம் ஒ..ரு பா....டல்'
சில நிமிடங்கள் அப்படியே நின்றுவிட்டிருந்தான் ஸ்ரீகாந்த்.
அங்கே இருந்த அவனது தந்தையிடம் கேட்டான். 'வாசிக்கறது யாருப்பா?
'உங்க அண்ணியோட தங்கை மோகனாடா.'
அடுத்த பாடல் துவங்கியது.
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்.?
அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அந்த பாடலுக்குள் தொலைந்தே போனான். அவளது கீ போர்டிலிருந்து எழுந்த இசையில் அந்த வார்த்தைகள் அப்படியே ஒலிப்பதுபோல்.....
அவள் விரல்களுக்குள் இப்படி ஒரு வித்தையா? வியந்து போனான். அந்த பாடலின் saxophone இசையை தன் விரல்களின் நாட்டியத்தில் அரங்கேற்றிக்கொண்டிருந்தாள் மோகனா.
இமைக்க மறந்தான் ஸ்ரீகாந்த்..
காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்.
அவனை பொறுத்தவரை இந்த வார்த்தைகள் உண்மையாகி போனது. அவள் எறிந்த இசையெனும் பூவில் குழைந்து லயித்து, ரசித்து அவளையும் ரசிக்க துவங்கினான்.
அடுத்து வந்த சில நாட்களில், அவனது அண்ணனின் திருமணம் முடிந்த பின் வந்த சில விசேஷங்களில் அவளை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அவளையும் அவள் இசையையும் அவன் ரசிக்கும் விதம் அவளை ஈர்க்கவே செய்தது. அவனிடம் அவளும் கரைய துவங்கியிருக்க, ஒரு நாள் இருவரும் கடற்கரையில் நடந்துக்கொண்டிருந்த போது அந்த கேள்வியை கேட்டாள்,
நீங்க ஏன் மெடிசின் படிக்கலை.? சீட் கிடைக்கலையா?
பதில் சொல்லவில்லை அவன்.
இந்த கேள்வியை இதுவரை அவனிடம் பன்னிரெண்டாயிரத்து இருநூறு பேர் கேட்டுவிட்டார்கள். இவளுடன் சேர்த்து பன்னிரெண்டாயிரத்து இருநூற்றி ஒன்று.
அவன் வீட்டிலும் சரி மோகனாவின் வீட்டிலும் சரி அவளையும் சேர்த்து எல்லாரும் மருத்துவர்கள்.
ஸ்ரீகாந்தின் தந்தைக்கு சொந்தமாக ஒரு மருத்துவமனையே இருக்கிறது.
இவன் மருத்துவம் படிக்கவில்லை. அப்பாவிற்கு இவன் மீது அதனாலேயே வருத்தம்.
பிளஸ் டூ வில் மதிப்பெண்கள் நிறையவே எடுத்திருந்தான். அவன் நினைத்திருந்தால் மிக எளிதாக மருத்துவராகியிருக்கலாம்.
அதில் விருப்பமில்லை அவனுக்கு. அது ஏனோ சிறு வயது முதலே ஆசிரியர் பணியில் அவனுக்கு ஈடுபாடு அதிகம். அதுவும் கணிதம் அவனுக்கு மிகவும் பிடித்த பாடம்.
அவன் பி.எஸ்.ஸி கணிதம் படிப்பதில் அவன் தந்தைக்கு உடன்பாடே இல்லை. அவரிடம் சண்டைப்போட்டுதான் அந்த படிப்பில் சேர்ந்தான்.
கணிதத்தின் ஒவ்வொரு துளியையும் ரசித்து ரசித்து படித்தான். அல்ஜீப்ராவுக்குள்ளும், ட்ரிக்னாமென்ட்ரிக்குள்ளும் கரைந்து போனான்.
அதன் பிறகு எம்.எஸ்.சி, எம்.பில் முடித்து காரைக்குடிக்கு அருகில் இருக்கும் அரசுக்கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தான்.
'டாக்டாராகி ராஜா மாதிரி இங்கே இருக்கறதை விட்டுட்டு ஏதோ கிராமத்திலே போய் காலேஜிலே நின்னு கத்திட்டிருக்கான்' அவனை பற்றி இப்படிதான் சொல்வார் அவன் அப்பா.
சிரித்துக்கொள்வான் அவன். ஏன் டாக்டரானால்தான் ராஜா மாதிரி இருக்க முடியுமா என்ன? நான் இப்பவே ராஜாதான் பா.
நிஜம்தான். .அவன் மாணவர்களுக்கு அவன் ராஜாவாகத்தான் இருக்கிறான்.
தான் படித்ததை மற்றவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் பணி, அது அவனுக்கு கொடுக்கும் மனம் நிறைவுக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை.
நாம் கற்றுக்கொடுப்பதை மாணவர்கள் புரிந்துக்கொள்ளும் போது கிடைக்கும் சந்தோஷம், அவர்கள் மதிப்பெண் பட்டியலை பார்க்கும் போது ஏதோ சாதித்து விட்டதைப்போல் கிடைக்கும் மனநிறைவு இதற்கு மற்ற துறைகளில் கிடைக்கும் பல கோடிகள் கூட ஈடாகாது என்றே தோன்றும் அவனுக்கு.
ஏன் படிக்கலை? பதில் சொல்லுங்க. பிளஸ் டூலே மார்க் கம்மியாயிடுச்சா? என்றாள் மறுபடியும்.
'மார்க்கெல்லாம் நிறையத்தான் இருந்தது.' என்றான் நிதானமாக. எனக்கு மெடிசின் படிக்க பிடிக்கலை. அதனாலே படிக்கலை.
சரி அட்லீஸ்ட் பீ.ஈ படிச்சு சாப்ட்வேர் லைன்லே போயிருக்கலாமே?
மெல்ல கண்களை நிமிர்த்தி அவள் முகத்தை ஊடுருவினான். இப்போ உனக்கு என்ன ப்ராப்ளம்? அதை நேரடியா சொல்லு.
இல்லை நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் இதே வேலையிலேதான் இருப்பீங்களா?
ஆமாம்.கண்டிப்பா.
இல்லை. எங்க வீட்டிலே, என் friends சர்கிள்லே எல்லாரும் டாக்டர்ஸ். லட்ச லட்சமா சம்பாதிக்கறாங்க . நீங்க மட்டும் இப்படி கிராமத்திலே காலேஜ்லே வேலை பார்த்து மாச சம்பளம் வாங்கிட்டிருந்தா யார் நம்மை மதிப்பாங்க.?
மெல்ல விரிந்தன அவன் கண்கள்.
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா? இல்லை வீழ்வதா?
உயிர் வாழ்வதா இல்லை போவதா?
அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுதவிஷமென்பதா?
தன் கைகளை அவனுக்கு மாலையாக்கி சொன்னாள் 'பேசாம வேலையை விட்டு சென்னை வந்திடுங்க. டாக்டர் ஹாஸ்பிடல் இதெல்லாம் பிடிக்கலன்னா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம். இந்த டீச்சிங் மட்டும் வேண்டாம் .என்ன சொல்றீங்க?
அவன் தன் வேலையை எவ்வளவு நேசிக்கிறான் என்று அவளுக்கு புரிய வைக்க முயன்று தோற்றுத்தான் போனான் ஸ்ரீகாந்த்.
'அவசரமில்லை நிதானமா யோசிச்சு சொல்லுங்க.' என்று சொல்லிவிட்டு நகர்ந்தவள் சென்ற திசையிலேயே இருந்தது அவன் பார்வை. ஆடிப்போனவனாய் நின்றிருந்தான் ஸ்ரீகாந்த்
அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுதவிஷமென்பதா!