பென்குவின் ஜாதி - தனுஜா
சிறகு இருக்கும் போதிலும் சில பறவைகளுக்கு பறப்பது முடிவதில்லை.ஆனாலும் அவை பறவைகள் அல்ல என்றாகி விடாது. பறக்க தான் முடியவில்லையெனினும் ஓட முடியுமே!!
படுக்கையை விட்டு எழுந்தாள் அமிர்தா. கண நேரமும் வீணடிக்காமல் தயார் ஆனாள். சுருட்டை முடியை சுருட்டி அழகாய் கொண்டையாக்கி கொண்டாள். நகத்திற்கு நக பூச்சு இல்லை, பெர்பியும் தேவையில்லை, கழுத்தில் மெல்லிய சங்கலி போதும். முடிந்தது அலங்காரம்.
அறையின் ஓரத்தில் தையல் மஷின்,படுக்கை ஓரத்தில் "லெரன் பிஸ்நெஸ் " புத்தகம், அலமாரி முழுக்க கலர்கலராக ரகம் ரகமாக நகைகள், லிப்ஸ்டிக்,பெர்பியும், எல்லா வகையான அழகு சாதனங்கள், அவள் கையில் "அமிர்தா பீவரேஜெஸ்" கணக்கு புத்தகங்கள்.
கணநேர அமைதி, பின் பெருமூச்சு விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அவள் அம்மா சாப்பிட இட்லி வைத்தாள். இரண்டு நிமிடம் ஒரே இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு , அம்மா கிளம்புறேன் என்றாள்.
"பார்த்து போயிட்டு வாடா கண்ணா…"
கிளம்புகையில் "அம்மா, அப்பாவை உடம்பை பார்த்துக்கொள்ள சொல்லுங்கள் " என்றாள்
அவள் அம்மா முகம் மலர்ந்தார்.
வீட்டு வாசலில் வந்து நின்றவளிடம் டிரைவர் தலை சொரிந்துக்கொண்டே "அம்மா இந்த கார்ல கோளாறு " என்றான்
அவசரமாய் "பெரிய கார் எடுக்கட்டாம்மா " என்றான்.
அது அவள் தந்தையின் கார். ஏனோ அதில் போவதில் அவளுக்கு விருப்பமில்லை. கொஞ்ச நாள் அவர் இடத்தில் அவள் இருப்பதனால், அவரின் மரியாதையை எல்லாம் அவளுக்கும் எனபதில் நாட்டம் இல்லை அவளிற்கு.
"வேண்டாம் நான் பஸ்ஸில் போய் கொள்வேன்"
"ராஜாத்தி… நீ ஏன் டா பஸ்ஸில் போகவேண்டும்" என்று அவளை பதற்றத்துடன் குறுக்கிட்டார். டிரைவரை ஓங்கி ஓர் அரையும் விட்டார்.
அம்மாவின் செய்கை கோபம் தர
"அம்மா, எனக்கு சென்னை புதிது இல்லை, ஏன் ம்மா அவரை அடிச்சீங்க "
அமிர்தா டிரைவரை நோக்கி "சாரிண்ணா, அம்மா கோபத்துல அடிச்சிட்டாங்க, மனசுல வெட்சிக்காதீங்க " என்றாள் .
அவள் அம்மாவை நோக்கி "ஐ ஆம் டோடல்லி டையர்ட் ஆப் யுவர் ஆக்ஷன்ஸ் ம்மா " என்றாள்
வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
கூட்ட நெரிசலுடன் இருந்த பஸ்ஸில் ஏறி சீட்டு வாங்கினாள்.
அவளை நெருக்கி கொண்டிருந்தது கூட்டம் அசராமல் நின்றிருந்தாள்.
அவளிற்கு முன்னே இருக்கும் பெண்மணி நெளிந்து கொண்டே இருக்க இவள் நிற்க முடியாமல் தவித்தாள். கூர்ந்து கவனித்ததில் ஒரு அயோக்கியன் வெட்கமே இல்லாமல் அவருக்கு தொந்திரவு கொடுத்து கொண்டிருந்தான்.
சட்டென கூட்டத்துக்குள் அவனை கண்டறிந்து. அவன் இடுப்பில் கிள்ளினாள். எதிர்பாராத சதை பிடிப்பில் அவன் துள்ளி குதிக்க மற்றவரெல்லாம் அவனை திட்டினர்.
சிறிது நேரத்தில் கூட்டம் குறைய அவள் இடம் பார்த்து நிற்பது போல் அவனை தேடி அவளின் கனமான ஹீல்ஸ் செருப்பால் மிதித்து விட்டு நகர்ந்து கொண்டாள்.
பழிவாங்கிய திருப்தி!!
அம்பத்தூர் தொழில் பேட்டைக்குள் தன் கம்பனியை நோக்கி நடந்து சென்றாள்.அவளுக்கென்ற அறையில் அமர்ந்தாள்.
விஸ்தாரமான ஜூஸ் கம்பனி அது. அவள் தந்தை மூன்று மாதமாக உடல் நிலை சரியின்றி மருத்துவமனையில் இருக்க பாஷன் டிசைன் முடித்தவள் , பாரிஸ் போக வேண்டியவள் சென்னையில் அவர்கள் கம்பனிக்கு டைரக்டர் ஆகி கவனிக்க தொடங்கி விட்டாள்.
நல்ல லாபத்தில், அதிக விற்பனையாகும் ஜூஸ் என்றாலும் தந்தை உடல்நிலை சரி இல்லாததன் விளைவு இரண்டு மாதத்தில் லாப கணக்குகளில் குழப்பம், ஊழியர்களுக்குள் பூசல், தரத்தில் வேற்றுமை என்று அடுக்காய் பிரச்சனைகள் எழ அவள் அப்பாவின் பதவியில் அமர்ந்தாள். அமர்த்தப்பட்டாள்.!!
புதிதாக முயற்சிப்பதில் ஆர்வமுள்ளவள் பொறுப்பை ஏற்றாள். கண்ணை கட்டி விட்டு காட்டுக்குள் திரிவதுப்போல் ஆனது. பிரச்சனைகள் முடிய முடிய இன்னொன்று புதிதாக எழ தொடங்கியது.
அமிர்தா தன்னால் முடியவில்லை என்று சொல்ல, அவள் அப்பா திருமணம் செய்துக்க சொல்லி அறிவுரை கூறினார்.
கம்பனியை சுற்றிபார்த்து விட்டு வந்து அமர்ந்தவளிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது "ஹாய் ஸ்வீடி, நைட் ஷெரட்டனில் பார்ட்டி எனக்கு கம்பனி கொடு"
"அட…ச்சீ வை போனை "
அழைத்தவன் யார் என்பது கூட தெரியாது. அவள் அப்பாவின் நண்பர்கூட்டத்தின் வாரிசில் ஓன்றாக இருக்கலாம்.
அவள் பாஷன் டிசைனெர் ஆசை, அவள் அப்பாவின் உடல்நிலை, யாரோ முகம் தெரியாதவனின் அழைப்பு, பேருந்தில் பாதுகாப்பு எல்லாம் சேர்ந்து அவளை பலவீனமாக்கியது.
அமைதி தேவைப்பட்டது. கம்பனியை விட்டு வெளியே வந்தாள்.நெருடலில் இருந்தவள் அப்பாவை பார்க்க மருத்துவமனை கிளம்பிவிட்டாள்.
மருத்துவமனையில் "என்னடி சொல்றா என் பொண்ணு ??"
"பாவங்க!! ரொம்ப கஷ்டப்படறா.. கம்பெனி நிர்வாகம் அவள் இயல்பை மாற்றிடும் போல "
"இதே மாதிரி போச்சு என்றால் இரண்டு நாள்லில் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிடுவாள் தானே "
"கொள்ளை கூட்ட தலைவன் போல,இது என்ன பிளானோ ??"
"பின்ன?, உன் பொண்ணுக்கு இருக்கும் பிடிவாதம் அப்படி ,இப்படி பிளான் செய்து கல்யாணம் பண்ணால் தான் உண்டு, பாரிஸ் போய் அவளாக சம்பாதிக்க தொடங்கினாள் என்றால் நீ, நான்,கல்யாணம் எல்லாம் மறந்தே போகும் "
"பெண்ணுரிமை, தன்னம்பிக்கை, போராடும் எண்ணமெல்லாம் சொல்லிகொடுத்தது நீங்க தானே?? இப்போது என்ன!!"
"அது அவளை பாதுகாத்து கொள்ள... பாரு என் ப்ரெண்ட் ராஜு அவன் இரண்டு பெண்ணுக்கும் ஜாம் ஜாமென்று கல்யாணம் முடித்துவிட்டான் "
"என்னமோ போங்க நல்ல அப்பா, நல்ல பொண்ணு !! பெண்ணுக்கு பிடித்தை செய்கிறாள்.விடுங்களேன் கொஞ்ச நாள் "
“அடிபோடி பைத்தியகாரி ஒத்த பெண்ணை கல்யாணம் செய்துகொடுக்க முடியாதவன் என்று பெயர் வரும்”
உரையாடலை கேட்டு சத்தமின்றி திரும்பியவள் கம்பெனிக்கு சென்றாள். மனேஜரை அழைத்தாள். காலையில் எரிச்சல் படுத்திய கோப்புகளை கேட்டு படிக்க துவங்கினாள்.
அவளுக்குள்ளே ஒரு குரல் சாதனை என்பதோ வெற்றி என்பதோ எப்போது நிகழுமெனில் அதன் வாய்ப்புகலும் வசதிகளும் போராட்டத்தில் கிடைக்க பெற்றால் மட்டுமே. இது தான் உனக்கான களம் அமிர்தா என்றது.