உளம் கடந்து - ஸ்வேதா
"இட்ஸ் ஆல் ஓவர் அபிநயா, டோன்ட் டிஸ்டர்ப் மீ எனிமோர்"
அபிநயா உடைந்து போனாள்.
"அபிநயா உன் வேலையில் எனக்கு திருப்தி இல்லை, வேலை செய்ய பிடிக்கலை என்றால் வேலையை விட்டு போ" மனேஜெர்
"தென் லெட் மீ கோ" அபிநயா
மனேஜெர் "??!!"
"ஏன் லேசியாக இருக்க அபி, ரூம் கிளின் பன்னு"
"நான் ரூம் காலி பண்றேன் "
கொஞ்ச காலமாக அன்றாட வாழ்கை கூட சுமையாக தெரிந்தது அவளிற்கு. ஐந்து வருடம் காதல் ஒரு தொலைபேசி அழைப்பில் முடிந்தது, வேலையில் கவனமில்லை, தனிமை கொடுமை எல்லாம் சேர்ந்து முடிவிற்கு வந்தாள்.
வேலையை விட்டாள் புனேவிலிருந்து வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள். காரணம் கேட்டவர்களிடம் பிடிக்கவில்லை என்று மட்டும் சொன்னாள்.
இரண்டு நாள் வீட்டில் அவள் அம்மாவின் சமையல், நல்ல தூக்கம், கொஞ்ச நேரம் டிவி, நிறைய புத்தகம் தெளிவு கொடுக்க தளர்ந்தாள்.
மூன்றாம் நாள் அவள் அம்மா நயமாக "அபி.., உனக்கு மாமா எங்க தோட்டத்துல கோவில் கட்டுறது தெரியும் தானே "
அபிநயா "ஆமாம் அதுக்கென்ன இப்போ ??"
"அங்கே மாமா அத்தை மட்டுமாக இருக்காங்க"
"சரி"
"அங்க நிலத்துல குடி இருக்கானே கண்ணையன், அவன் மேல சாமி வந்து தேவையானது எல்லாம் கேட்குதாம்"
"அப்படியா??"
"எனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லம்மா, இவங்கள நெனச்சா கவலையா இருக்குடீ ராஜாத்தி "
"ஐயோடா பாசமலரே !!"
"நீ சும்மா தானே இருக்க கொஞ்ச நாள் மாமா அத்தையோட இருந்துட்டு வாயேன், அத்தைக்கு கூட இருந்து உதவி பண்ணிகிட்டே சமையல் கத்துக்கோ, ஜாலியா இருக்கும் அங்கே " உற்சாகமாக பெண்ணை வற்புறுத்தினார்.
"மாசம் சொளையா முப்பது ஆயிரம் சம்பளம் கொடுக்கிற வேலையே விட்டது தப்பும்மா... இப்போ புரிது."
"பாரு நீ போகலேனா நான் போகிறேன்... நீங்க மூன்று பேரும் கஷ்டபடுங்க "
அவள் அம்மா பேசுவதை கேட்டும் கேட்காதது போல் இருந்த அவள் அண்ணனும் தந்தையும் இப்போது அபியை பார்த்தனர்.
வாய்கால், சிலுசிலு காற்று, தென்னை தோப்பு, மாமரம், கொடுக்காய் புளி, பெரிய நெல்லி, மற்றும் அவள் அத்தையின் சாம்பார் எல்லாம் யோசிக்க போய்த்தான் பார்ப்போமே என்றது மனம் .
அந்த தோட்டத்தில் தொலைபேசியின் சிக்னல் கிடைக்காது. அது இப்போதைக்கு தேவையாக இருந்தது. பேஸ்புக், வாட்ஸ் அப், ஹைக் எல்லாம் அவள் உலகில் இல்லாமல் போனால் நன்றாக இருக்குமென்ற எண்ணம் அவளை அங்கே போக தூண்டியது.
"சரி போய் கொஞ்ச நாள் அவங்களோட இருக்கேன். எனக்கு வரணும் தோனினா வந்திருவேன்"
அவள் அம்மா அண்ணனுக்கு தொலைபேசியில் அழைக்க ஓடினார். அபியின் அண்ணன் நாளை காரில் கொண்டு விடுவதாக சொல்லி விட்டு அவன் வேலையில் மூழ்கினான்.
அவள் அப்பா "வேலையை விட்டு வந்து வீட்டில் உட்கார்ந்தால் கொஞ்ச நாள் ஸ்ட்ரெஸாக தான் இருக்கும், கொஞ்சம் ரெப்ரெஷாகி வா " என்றார். அவர் அக்கறையில் சிலிர்த்தது அபிக்கு.
கிட்டே இருந்தாலும், தூரமாக இருந்தாலும் மகள் மகனின் வலியும், வேதனையும் அழகாய் புரிந்து விடும் பெற்றோருக்கு.
தேவையானவற்றை எடுத்து வைத்துகொண்டிருந்தாள் அபி. அவள் அம்மா அவளுக்கு முன்னுரை கொடுத்தார்.
மகனும் மகளும் வெளிநாட்டில் செட்டில் ஆகி விட உத்தியோகத்தில் ஓய்வு பெற்ற மாமா ஆன்மிகத்தில் ஈடுபட அதன் தாக்கம் அவர்கள் பூர்விக சொத்து என்று இருக்கும் நிலத்தில் புவனேஸ்வரிக்கு கோயில் கட்டியுள்ளார். இவ்வளவு நாள் அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து உபயோகித்து கொண்டிருக்கும் கண்ணையனின் மேல் சாமி வந்து அவர்களை நிறைய செய்ய சொல்லி கேட்கிறதாம். சின்ன சின்னதாக என்றாலும் சிலது பயமாக இருக்கிறது அதன் அர்த்தமென்ன என்று யோசிக்கையில். உதாரணத்திற்க்கு ஒரு நாள் சாமி வந்த கண்ணையன் "இந்த நிலத்தின் அருமை புரியாமல் விட்டவரெல்லாம் இந்த நிலத்தின் பக்கம் வர கூடாது உன் அண்ணனை இங்கே வரகூடாது என்று சொல் " என்றதாம்.
இன்னொரு நாள் "எனக்கு கத்தி வேண்டும்,இவனை தென்மேற்கு திசையில் போய் வாங்கி வர சொல்"என்றதாம்.
அபிநயா அங்கே இருந்தாள் என்றால் வார இறுதியில் அவள் அம்மா அவளை பார்க்க வருவார்களாம். அவர்கள் சிலர் வர போக இருந்தால் அவனுக்கும் அங்கே வாழும் அவன் குடும்பத்திற்கும் பயம் இருக்குமாம்.
"அப்படி என்னம்மா பயம்?"
"அதெல்லாம் ஒனக்கு புரியாது, கையில் காசு இருக்கு தானே, கிளம்பு" என்றார் சாந்தி.
"உன் வேலை ஆகிற வரை கொஞ்சின இப்போ மிரட்டுற " என்று சொல்லி காரில் ஏறினாள்.
எங்கேயோ எப்போதோ அவளுக்குள்ளே தொலைந்த போன அபிநயா சிறு வயதில் அங்கே கோழி பிடிக்க ஓடியது, ஆட்டுக்குட்டி கொஞ்சியது, நிறைய இளநீர் குடித்தது கிணற்றில் குளித்து எல்லாம் நியாபகம் வர தொலைந்து போனவளை மீட்டெடுக்க கிளம்பினாள்.
பரதாங்கி கிராமம் சேர்ந்தவுடன் அபிநயாவிற்கு உற்சாகம் கிளம்பியது.தோப்பிற்குள் நுழையும் போதே தூரத்தில் வர்ண பூச்சு நடந்து கொண்டிருந்த கோவில் தெரிய அபிநயா "இது தானா " என்றாள்.
கிட்டே போக போக அவள் மாமாவின் சேதுமாதவனின் குரலில்
"ஓம் நாராயணியாயை வித்மஹி
புவனேஸ்வரியாயை தீமஹீ
தன்னோ தேவி ப்ரசோதயாத் " புவனேஸ்வரி காயத்ரி கேட்டது.
தீப ஆரத்தி முடிந்ததும். சேதுமாதவன் "வாமா பார்த்தியா கரெக்டா உன்னை ஆரத்தி நேரத்துக்கு வர வெச்சுட்டா எங்க அம்மா "என்றார் கர்வமாக.
அபிநயா சிரித்த முகமாய் "நல்லா இருக்கீங்களா மாமா " என்றாள்
"நல்லபடியா வெச்சிருக்கா எங்க அம்மா " என்றார்.
புரிந்தது அவளிற்கு இனி எல்லாம் புவனேஸ்வரி தான் துணை இங்கு என்று. திரும்பி கருவறையில் அமர்ந்திருத்த புவனேஸ்வரி அம்மன் சிலையை பார்த்தாள்.
கலையான சிரித்த முகம். செய்தவன் கைதேர்ந்தவன் தான் என்று தோன்றியது. சட்டென்று மனதில் "நான் தேடும் நிம்மதியை கொடும்மா " என்று வேண்டியது நெஞ்சம்.
கோவிலுக்கு அருகிலேயே தற்காலிகமாக வீடு கட்ட பட்டிருந்தது. மூன்று பெரிய அறைகள், ஒரு சமையல் அறை, அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீடு. வருத்தமான விஷயம் என்னவென்றால் பாத்ரூம் தனியாக வெளியே இருந்தது.
அவள் அத்தை கீதா "என்ன அபி முகம் அப்படி ஒரு சுளிப்பு "
"அத்தை பாத்ரூம் ஏன் தனியா கட்டிருக்கு அதும் வெளியே இருட்டினா எப்படி போறது ?"