எப்புடி இருந்த நான்... - ஜான்சி
This is entry #02 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
கொஞ்ச நேரம் நான் எங்கேயிருக்கிறேன் என்றே புரியவில்லை. 15 நிமிடத்திற்கு முன்னால் யாராவது நீ இப்படி அரக்கப் பரக்க அந்த காபினிலிருந்து வெளியே வருவாய் என்றுச் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்கவே மாட்டேன்.
"வொய் டோண்ட் யு இன்ஃபோர்ம் மீ?" இது 67வது தடவையாக என் காதில் விழுந்தது. காதுகளை ஒரு முறை கரங்களால் தடவிப் பார்த்துக் கொண்டேன்
"ஷப்பா பரவாயில்லடாப்பா காது ஜவ்வு இன்னும் கிழியலை"
ரிலாக்ஸாகி காபினுக்குள்ளே இருப்பவர் முன்னால் "உள்ளேன் ஐயா" சொல்லும் தூரத்தில் எதிரில் தெரியும்படி அமர்ந்துக் கொண்டேன். கண்ணாடிக் கதவையும் தாண்டி 68வது முறையாக "தென் , வொய் டோண்ட் யு இன்ஃபோர்ம் மீ?" கேட்டது.
எப்போதுமே பரபரப்பாக சுழலும் அந்த டீமின் மெம்பர்கள் தன் வேலைக்கு நடுவிலும் அந்த கத்தலைக் கேட்டு தமக்குள்ளாக சிரித்துக் கொண்டும், ஒருவரையொருவர் ரகசியமாக பார்த்து கண் சிமிட்டிக் கொண்டும் ,கூடவே அனைவரும் எனக்கு பரிச்சயமாதலால்,"இவருக்கு வேறு வேலையில்லை, இப்படித்தான் கத்துவார்" என்னும் விளக்கத்தோடும். "இன்றைக்கு நீ மாட்டினாயா? "என்னும் கிண்டல் சிரிப்போடும் என்னைப் பார்த்தபடி நகர்ந்தார்கள்.
என்னடா வெயில் காலம் கூட இல்லையே இப்பத்தான் சென்னையில மழை பெஞ்சு முடிஞ்சிருக்கு. மும்பையிலயும் குளிர் ஆரம்பிச்சிடுச்சே...... இவ ஏன் இப்படில்லாம் தலையும் , வாலும் புரியாம பேசிட்டிருக்கான்னு கேட்கிறது புரிகின்றது மக்களே.கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்.
நான் என்னுடைய வேலையை முதலில் அறிமுகப்படுத்திக்கிறேன். ட்ரெயினிங் கொடுக்கிறதும், இதுக்கு ஸ்கூலே பரவாயில்லையேன்னு சொல்ற அளவுக்கு டெஸ்ட் வைக்கிறதும், கேள்வி கேட்டு போரடிக்கிறதும்தான் என் வேலை. எனக்கு என் வேலை ரொம்ப பிடித்தம் ஏன்னு கேட்கறீங்களா? நூறு பேர் இருந்தாலும் சரி நான் மட்டும்தான் பேசுவேன், நானாக நிப்பாட்டுற வரைக்கும் மத்தவங்க கேட்டே ஆகணும் .....(போதும், போதும் ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாதுன்னு நீங்க சொல்றது கேட்கிறதுனால வாங்க கதைக்கு போகலாம்)
காலையில் அந்த மிஸ்டர் எக்ஸ் -ற்கு (அதான் "வொய் டோண்ட் யு இன்ஃபோர்ம் மீ?" நபர்) க்கு ட்ரெயினிங்க் -னு சொல்லி மெயில் வந்ததும் (வொய் மெயில் வொய் நாட் FEMALE?.............இதுக்கு ஆன்ஸர் கண்டு பிடிச்சதும் எனக்கு சொல்லி அனுப்புங்க) சரி இது என்ன பெரிய விஷயம்? என்று இருந்தேன்.
அப்போதான் சொன்னாங்க ரொம்ப பெரிய பதவியிலிருக்கிறவர் , ட்ரயினிங்க் அவர் காபின்லயே கொடுக்கணும்னு சரின்னு சொல்லி நேரத்துக்கே அங்கே போயிட்டேன்.
ஏற்கெனவே, அவர் ரொம்ப பிசியாக ஒரே நேரத்தில டெஸ்க்டோப்-இல் மெயில் ஒன்றை டைப் செய்த படி ஒரு கையும், ஸ்பீக்கரில் போட்ட மொபைலில்-ல் பேசிய படி ஒரு வாயையும்( எதுவும் மிஸ்டேக்கா சொல்லிட்டேனா?) இருந்தவர், கதவை தட்டிய என்னை மீதி இருந்த ஒரு கையால் சைகை காட்டி தன் டேபிளுக்கு எதிரே அமரச் சொன்னார்.
நான் கையோடு கொண்டுச் சென்ற மார்க்கரை டேபிளில் வைத்து விட்டு காபினில் glass board இருக்கும் திக்கை ஆராய்ந்துக் கொண்டு ட்ரயினிங்-ற்காக அவர் வேலை முடிய காத்திருந்தேன். திடீரென அவர் போனில் எதிரில் இருந்தவரிடம் நான்கைந்து மடங்கு டெசிபல் குரலையுயர்த்தி ஏறத்தாழ அலறி பேச தொடங்கி விட்டார் .....என்ன சொல்லியிருப்பார் சொல்லுங்க... இன்னேரம் உங்களுக்கே தெரிந்து இருக்க வேணுமே.....ம்ம்ம்......கரெக்ட் "வொய் டோண்ட் யு இன்ஃபோர்ம் மீ ?".
இப்படி ஒரு ஆத்திரமான அணுகுமுறையை அலுவலகத்தில் இது நாள் வரை கண்டறியாத எனக்கு ஏற்பட்ட திகைப்பு ஒரு புறம் என்றால் அந்த காபினின் glass door & patrician எல்லாம் வெடித்துத் தெறிக்காதது குறித்து மிக ஆச்சரியமாக இருந்தது.
தொடர்ந்த பேச்சுக்களில் என் ட்ரெயினிங்க்-ற்கான நேரத்தை விழுங்கிக் கொண்டு அவர் பேசிய பேச்சுக்களைப் பார்த்த போது எதிரில் போனில் பேசிக் கொண்டிருக்கும் அந்த நபர் ஃபோனிலிருந்து சட்டென்று குதித்து இந்த காபினில் வந்து பிரசன்னமாகி , இவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறாரோ? என்று எனக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. ஏற்கெனவே முடிந்துப் போன ஒரு தவறுக்கு விளக்கம் கேட்பதில் இவ்வளவு அகங்காரத் தொனியா? என்பதை எண்ணி அயர்ந்துப் போனேன்.
ஒருத்தரை உட்காரச் சொல்லியிருக்கிறோமே, அவர் முன்னால் வேறு நபர் ஒருத்தரை கண்டபடி திட்டிக் கொண்டு இருக்கிறோமே, வந்து உட்கார்ந்த நபர் ஏன் வந்தார்னு கூட கேட்கலியேன்னு கொஞ்சமாவது யோசிக்குதா , இதெல்லாம்னு........ உள்ளுக்குள் நான் பொருமிக் கொண்டிருக்க என்னைப் பார்த்து முதன் முறையாக அவர் தலையை உயர்த்தினார். அப்பாடா....நல்லதாகப் போயிற்று "நீங்கள் இன்றைக்கு பிஸி எனும் பட்சத்தில் ட்ரெயினிங்க்-ஐ postpone செய்து விடலாமா?" என நான் கேட்க வாய் திறக்கும் முன் "ப்ளீஸ் அந்த மூன்றாவது காபினிலிருப்பவரை அழைக்கிறீர்களா?" கேட்டது மிஸ்டர் ஹை டெசிபல் தான். "நானென்ன பியூனா? என சிலிர்த்த மனதை சாந்தப் படுத்தி ,
"இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது, இந்த சாக்கில் காபினை விட்டு வெளியே ஓடிடு " என்ற மன சாட்சியின் குரலை மதித்து வெளியே வந்து புலம்பியதை தான் நீங்கள் மேலே கண்டது.
"ப்ளீஸ் சென்று விட வேண்டாம், காபினில் அமருங்கள்"
என்று மறுபடி வந்த அழைப்பிற்க்கு மிரட்சியை மனதில் ஒளித்துக் கொண்டு "ஹி ஹி நான் வெளியே இருக்கிறேன்" என்று சொல்லி அமர்ந்துக் கொண்டேன்.கொஞ்ச நேரம் காத்திருங்கள் என்றுச் சொல்லி என் விலை மதிப்பில்லாத நேரத்தை விரயம் செய்த பின்னால்," ஸாரி இன்று முக்கியமான வேலைக் காரணமாக ட்ரெயினிங்க்-ல் பங்கேற்க முடியாது" என ஒரு வழியாக பதில் கூறினார்.
அந்த விசித்திர சம்பவத்தை தூசிப் போலத் தட்டி விட்டு, ஏனைய வேலைகள் முடித்து வீடு திரும்ப ட்ரோப்பிற்காக காத்திருக்கும் போது வெகு அருகில் கீச்சுக் குரலாக ஒரு பெணணின் சப்தம் கேட்டது.
அது யாருடைய ஃபோனிலிருந்தோ வரும் சப்தம்.பேசியது என்னவென்று புரியாவிட்டாலும் கூட அக்குரல் வெகுவாக எரிச்சலை ஊட்டும் தோரணையோடு இருந்தது. இவ்வளவிற்கும் ஃபோன் ஸ்பீக்கரிலும் இல்லை, தூர நிற்கும் எனக்கே காதைக் கிழிக்கும் விதம் அக்குரல் கேட்கும் போது ஃபோனை காதில் வைத்துப் பேசுபவர் மிக பாவப் பட்டவராகத் தான் இருக்க வேண்டும். அதிலும் அந்த பேச்சுத் தோரணை இருக்கே பட்டத்து மகாராணி சேவகனிடம் பேசும் தோரணை அது. அந்த கீச்சுக் குரலுக்கு மிகப் பணிவாக பதில் சொல்லிக் கொண்டிருக்கும் மற்றொரு குரலும் கேட்க யாரடா அந்த பாவப்பட்ட ஜென்மம் என்று திரும்பிப் பார்த்தால்...........................
அதான் உங்களுக்கு முன்பே தெரிஞ்சிருக்கே.
தென் வொய் டோண்ட் யு இன்ஃபோர்ம் மீ ?
:)
பி.கு: இந்தக் கதையில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனையே
This is entry #02 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}