காதல்!! ஆசை !! யாரை விட்டது... - ஸ்வேதா சந்திரசேகரன்
This is entry #09 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
ரகு கடலுக்கு முதுகை காட்டிக் கொண்டும், சுமதி கடலைபார்த்துக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள். காபியை பருகிக் கொண்டே சுமதி சொன்னாள் "எனக்கு உன்னை பிடித்திருந்தது.பொய் இல்லை. என்னை பெண் பார்க்க வந்த அன்று நீ அணிந்திருந்த ஆகாய நிற சட்டை, வெள்ளையாக நீ சிரித்தது, இயல்பாக அப்பாவிடமும் அம்மாவிடமும் பேசியது, நல்ல காபி எதுவாக இருக்க வேண்டும் என்று என் அம்மாவுக்கு வகுப்பெடுத்தது. அதை கேட்டு இயல்புக்கு மேல் அம்மா ஆச்சர்யப்பட்டது, வீட்டு மனுஷன் மாதிரி விலகல் இல்லாமல் நீ பேசியது எல்லாருக்கும் பிடித்திருந்தது. ஆனால் மருத்துவமனையில் அக்காவிடம் சொல்லும் போது அவள் முக மாறுதல் பிடிக்கவில்லையோ என்று தோன்றுகிறது ரகு" என்றாள் முகத்தில் சஞ்சலத்தை அப்பிக்கொண்டு.
ரகுவிற்கு அழுத்தம் அதிகமானது. அவன் பழகி வைத்திருந்த சகஜ நிலையில் இருக்கும் முகம் கைக்கொடுக்கவில்லை. புரியாத நிலை தடுமாற்றம் வெளிப்படையாக தெரிந்தது அவன் முகத்தில் சுமதிக்கு.
கோமாவில் இருக்கும் சுகன்யாவின் சிலநேர அசைவுகள் அவன் அறியாததா? சென்ற ஆறு மாத காலமாக அவனின் சோகங்களுக்கும், மாற்றங்களுக்கும் விதை அவள் தானே.
உண்மையை சொல்லிவிடலாமா!! என்ற எண்ணத்திற்கு பாழாய் போன மனசாட்சி பயந்து வேண்டாம் என்றது. அவளிற்கு ஆறுதலாக பேசுவது அவனுக்கு சுகமாக இருந்தது. அவளின் அருகாமை அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவன் பழகிய பெண்களில் இவள் வேறு விதம், அவன் மனதை முழுமையாக கவர்ந்திருந்தாள். நடந்ததை சொன்னால் அவளின் உறவு அறுந்து போகவே வாய்புகள் அதிகம்.
யோசிக்கையில் அவனுக்கு அடுத்த நிமிடம் வாழ்வது கூட கடினமாகி போனது.
மீண்டும் சுமதி பேசினாள் "எனக்கு சுகன்யா முக்கியம் ரகு, அவள் குழந்தைகளின் எதிர்காலம், நிகழ்காலம் இரண்டுமே இப்போது என் கைகளில் ரகு" என்றாள் அவன் கையை பிடித்து அழுத்தியபடி.
ரகு ”போதும்! எல்லாம் போதும்" என்று முணுமுணுப்புடன் எழுந்து சென்றுவிட்டான் அழுகையை மறைத்து.சுமதிக்கு அவள் வெறித்துப் பார்த்த கடல் பொங்கி வந்து முகத்தில் அடித்ததுப் போல் ஆனது.
வீட்டினர் மட்டுமா அவன் பேச்சிற்க்கும் அக்கறைக்கும் மயங்கியிருந்தனர் அவளும் தானே. படிப்பு வேலை என்று இருந்தவள் அவன் அறிமுகத்திற்கு பின்பு தான் காதல் உணர்விர்க்கே அறிமுகம் ஆனாள்.
மணி ஆறு என்று கடிகாரம் சொல்ல அக்காவை பார்க்க மருத்துவர் வர நேரமாச்சே!! என்று அவளும் மனபாராத்தோடு கிளம்பினாள்.
ஏனோ உலகில் அவளை தவிர மற்றவரெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றியது. மனம் "அக்கா உனக்கேன் இப்படி ஆனது ? மாமா ஏன் எங்களை விட்டு போனீங்க ? அப்பு அம்மு உங்களை தேடுறாங்க மாமா, அக்கா நீ தான் சீக்கிரம் கண் திறயேன், என்னால் இந்த அழுத்தமெல்லாம் தாங்க சக்தி இல்லையே " என்று கதறியது.
மருத்துவமனையில் சுகன்யா அறைக்கு சென்றவள் அறையில் ரகுவை எதிர்ப்பார்க்கவில்லை.சுமதியைப் பார்த்ததும் எச்சிலை விழுங்கியவன் அவள் கைகளை பிடித்து உள்ளங்கையில் மோதிரத்தை வைத்து மூடி, நடுங்கும் குரலில் "சுமதி... அன்று ஈ.சி.ஆரில் பார்டி முடித்து போதையில் நான் வரும் பொழுது பெண் ஒருத்தி என் காரை நிறுத்தி எதோ கேட்டாள். நான் பையிலிருந்து காசு கொடுத்துவிட்டு வீட்டை அடைந்தேன். தெளிந்த பின் யோசிக்கையில் ரோடு ஓரம் விபத்தான கார் ஞாபகம் வந்தது, என் மடத்தனம் உணர்ந்தேன். திரும்ப அங்கே சென்று பார்த்தபோது உன் மாமா இறந்திருந்தார், உன் அக்கா அலங்கோலமாக இருக்க,அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டிருந்தனர். நான் கொடுத்த காசை உன் அக்கா இறுக்கமாக பிடித்திருந்தாள். அது என்னை ரொம்பவும் பாதித்தது. மருத்துவமனையில் விசாரிக்க வந்த என்னை உன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை என்று உன் அப்பா நினைத்துக் கொள்ள ஒரு வகையில் உன் குடும்பத்திற்கு ஆறுதலாக இருக்கலாம் என்று சூல்நிலைக்கேற்ப நடந்து கொண்டேன்" என்று சொல்லிக் கொண்டே கைகளால் கண்களை மூடி அழுதான்.
சுமதி கல்லாகி நின்றாள். அழுகைக்கு நடுவே அவன் " எத்தனையோ நாள் நம் சந்திப்பு நல்ல விதமாக இருந்திருக்க கூடாதா, எனக்கு குடிப்பழக்கம் இல்லாமல் இருந்திருக்க கூடாதா? " என்றெல்லாம் எண்ணி அறைபைத்தியமாகி போனேன் என்றான்.
கண்ணீருடன் " எனக்கு காமம் தான் பழக்கம், காதல் பழக்கியது நீ தான். கடவுளிடம் கூட வரம் சாபம் என்று சொல்லி தப்பித்து விடலாம், உள்ளுக்குள்ளே இருக்கும் மனசாட்சியிடம் தப்ப முடியாது, நான் கெட்டவன் இல்லை சுமா,”
“உன் அக்காவிற்கு நினைவு திரும்பி அவர்களிடம் மன்னிப்பு கேட்டு உன்னை மணம் புரிகிறேன் இல்லை என்றால் உதவி கேட்ட நேரத்தில் உதவாத எனக்கு இது தண்டனை என்று தனியாக வாழ்கிறேன். உன் குடும்பத்திற்கும் அந்த பிஞ்சு குழந்தைகளுக்கும் நல்லது செய்ய தவற மாட்டேன்" என்றான் சத்தியம் போல் உறுதியான குரலில்.
இறுக்கம் தளர்ந்தது. அசைவு தெரிந்தது படுத்திருந்தவளிடம்.
This is entry #09 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}