ஒருவாறு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன், தன் அம்மாவின் உபதேசத்தை மூளையில் நிறுத்தி,... சரியான கருத்துக்களை சொல்லி, போட்டியாளர்களுக்கு மதிப்பெண்களை வழங்கினான்.
“இன்றைய நிகழ்ச்சியின் முடிவுக்கு வந்துட்டோம்… அடுத்த சுற்றுக்கு தேர்வு பெற்று போறவங்க பெயர்களை அறிவிக்கறதுக்கு முன்னாடி, உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய சர்ப்ரைஸ்…! நம்ம இளம் புயல் நிகில் இப்போ, இங்கே நம்ம முன்னாடி, இதே காட்சிக்கு, தான் எப்படி ரியாக்க்ஷன் கொடுப்பார் என்பதை, நமக்கு நடித்து காண்பிக்க போகிறார். வி வெல்கம் அவர் ஒன் அண்ட் ஒன்லி இளம் புயல் ஆன் ஸ்டேஜ் ப்ளீஸ்…!” நிகழ்ச்சித் தொகுப்பாளர் அறிவிக்கவும், கேமரா நிகிலை வட்டமடித்து, அவன் முகத்தில் நிலைத்தது., அமர்ந்திருந்த பார்வையாளர்களின் கரகோஷம் ஸ்டுடியோவை அதிரச் செய்தது.
“வாட்…” என்று அதிர்ந்தவன்,... ஓரமாக அமர்ந்து இருந்த தன் தந்தையை பார்த்தான்.
“கட்…” என்று டைரக்டர் குரல் கொடுக்க,... மகனை நோக்கி வந்தார் சக்கரவர்த்தி.
“நிக்கி கண்ணா,... ஜஸ்ட் நம்ம ப்ரோக்ராமை ப்ரமோட் பண்ண ஒரு சின்ன ஸ்டன்ட் இது. உனக்கு முன் கூட்டியே சொன்னா, இப்போ நீ கொடுத்த எக்ஸ்ப்ரஷன் உன் முகத்தில் தெரிஞ்சு இருக்காது. அதான் நானும், டைரக்டரும் உன் கிட்ட விஷயத்தை சொல்லல.”
“சார்… ஒரே ஒரு சீன் தானே… எங்களுக்காக நடிங்க சார்” என்று டைரக்டரும் வந்து கெஞ்ச,...
“ஓகே… ஒரு ரெண்டு நிமிஷம்…” என்றவன், தன் அறைக்குள் நுழைய,... அவன் தேடி வந்த தனிமை தான் கிடைக்கவில்லை.
மேக்கப் மேன் பின்னோடு வந்து, “கொஞ்சம் டச்சப் பண்ணிக்கலாம் தம்பி” என்று அவன் சிகையையும், முகத்தையும் திருத்தினார்.
தன்னை சமன்படுத்திக் கொண்டு வந்த நிகில், மேடையில் ஏறினான். “சார், இன்னொரு முறை ஸ்க்ரீன்ல சிட்டுவேஷன் ஷாட்டை போட்டுக் காண்பிக்கட்டா…?” என்ற டைரக்டருக்கு, “வேண்டாம் சார்…” என்றான்.
‘அதான்… கொஞ்ச நேரத்திற்கு முன், வாகன நிறுத்துமிடத்தில் கண்ட காட்சி அவன் மனம், மூளை, இதயம் முழுதிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறதே,... தனியாக அதை திரையில் வேறு காண வேண்டுமா…?’
“ஆசம் நிகில்… பென்டாஸ்டிக் சார்… சூப்பர் நிக்கி… கலக்கிட்ட மச்சி… நிக்கி… நிக்கி…” என்ற கலவையான குரல்கள் ஒன்றாக ஒலிக்க, நடப்புக்கு வந்தான் நிகில்.
ஒரே ஷாட்டாக பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியை, மீண்டும் அங்கிருந்த திரையில் பார்க்கும் வரை, எப்படி நடித்தான், என்ன மாதிரி உணர்வுகளை பிரதிபலித்தான் என்று அவனுக்கே தெரியாது. அவன் மனம் இருந்த நிலையில், கவனம் அங்கே இருந்து இருந்தால் தான் ஆச்சரியம்.
‘எனக்கு நிச்சயித்த பெண்ணை முகம் தெரியாத ஒருவனோடு நெருக்கமாக பைக்கில் பார்த்தும், அதை பற்றி யோசிக்க கூட முடியாமல், பொதுஜனத்தின் முன் இயல்பாக நிற்க வேண்டிய நிலையில் இருக்கும் என் நிலைமையை என்ன சொல்ல…? நல்ல வேளையாக இது நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி இல்லை.’
‘புகழும், பணமும் இருந்தால் மட்டும் போதுமா…? பொதுவாழ்வில் இருந்தால் சில விஷயங்களை பொறுத்து போக வேண்டும் தான். ஆனால், பொதுவாழ்வில் இருக்கும் ஒரு நபர், எப்போது தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சரிவை சந்திப்பார், அக்குவேறு ஆணிவேராக அதை எப்படி அலசலாம் என்று காத்திருக்கும் வம்பு, புரணி பேசும் கழுகுகளுக்கு, இதுவரை அப்படிப்பட்ட பேச்சுகளில் அடிப்படாத தன் குடும்பம் இப்போது இரையாகப் போகிறது’ என்று தவித்தான்.
‘சூடான செய்திகளுக்காக எப்போதும் ஸ்டுடியோ ஏரியாவை வட்டமிடும் பத்திரிகைக்காரர்கள் யார் கண்ணிலாவது இந்தக் காட்சி நிச்சயம் பட்டிருக்கும். நாளைய செய்தியில் புகைப்படத்தோடு கண்டிப்பாக ஒரு கிசுகிசு வரும். உனக்கு இதெல்லாம் தெரிந்திருந்தும், இப்படி சறுக்கலாமா ஸ்வே…!’
மனம் ஏதேதோ அசை போட்டாலும், முகம் எதையும் துளியளவு கூட பிரதிபலிக்கவில்லை. நடிகனாக இருப்பதற்கு நிறைய முறை பெருமைப்பட்டிருக்கிறான். ஆனால், முதல்முறை தன் தொழிலில் உள்ள அனுகூலத்தை கண்கூடாக அனுபவிக்கிறான். சும்மாவா தேசிய விருதை அவனுக்கு வழங்கினார்கள்…!
“சான்சே இல்ல… சும்மா பின்னிட்டாரு நிகில்… யாரு மகன்… புலிக் குட்டியா அவரு…”மற்றவர்களின் பாராட்டு அவன் செவியை அடைந்தாலும், மூளையை எட்டவில்லை.சிரித்த படி எல்லோருடனும் சிறிது, நேரம் செலவழித்தவன், தந்தையிடம் கிளம்புவதாக ஜாடை செய்ய,... அவரும் சம்மதிக்க,... அங்கிருந்து விடுவிடுவென கிளம்பி விட்டான் நிகில்.
ஈ.சி.ஆர். சாலையில் இருக்கும் அவர்களின் பண்ணை வீட்டுக்கு வந்தவன், நேரே நீச்சல் குளத்தில் குதித்தான். கொஞ்ச நேர நீச்சல் பயிற்சியின் பின், தோட்டத்தில் காலாற நடந்தான்.
சற்றே டென்ஷன் குறைய,... ‘யார் அந்த ஹெல்மெட் ஆசாமி…’ என்று சிறிது நேரம் யோசித்தவனுக்கு உடனே முகம் பளிச்சிட்டது. ‘அவன் எதற்காக ஸ்வேதாவை, தன் பைக்கில்…? அந்த பைக்குக்கு நன்றி சொல்ல வேண்டும்…! அதை வைத்துத் தானே யாரென்று அவனால் அந்த ஆளை இனம் கண்டுக் கொள்ள முடிந்தது.’