நேர் கொண்ட பார்வை... - மதிவதனி
This is entry #70 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே. அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்திலேயே பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போலே அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள். பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள். இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே. இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள். ச்சேச்சே... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது. அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள். அது அவளே தான்…
திரையில் இந்தக் காட்சி மெளனமாக, பின்னணி வருணனையோடு ஓட,... “ஸ்டாப்…” என்ற குரல் கேட்டது.
“ஓகே போட்டியாளர்களே…! இந்தப் போட்டியில், உங்களுக்கான இந்த சுற்று, உங்க நடிப்பு திறனுக்கு பெரிய சவாலா இருக்கப் போகுது.”
பேசும் இயக்குனரின் முகத்தையே அங்கே நின்றிருந்த ஆறு இளைஞர்களும் ஆர்வம் மேலிட பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இப்போ நீங்க காட்சியா பார்த்ததும், அதுக்காக கேட்ட வருணனையையும் நல்லா மனசுக்குள்ள பதிஞ்சுக்கோங்க பாய்ஸ். உங்களுக்கென நிச்சயித்த பெண்ணை வேறொருவனுடன் எதிர்பாராம பார்க்கறீங்க. உங்க மனநிலை எப்படி மாறுது…? உங்க மனசுல ஓடுற எண்ணங்கள், குழப்பம், கோபம்,… இப்படி பல்வேறு உணர்ச்சிகளையும் உங்க முகபாவனையில் நீங்க பிரதிபலிக்கணும். நாளைக்கு காலையில ஷூட் பண்றோம். போய் ஹோம்வர்க் பண்ணுங்க. பேக் அப்” என்று நிகழ்ச்சியின் இயக்குனர் முடித்தார்.
“ஸ்டாரோ சூப்பர் ஸ்டாரோ… நீங்களும் ஆகலாம் ரீல் ஹீரோ டு ரியல் ஹீரோ’’... பிரபல தமிழ் சேனல் ஒன்றில் தற்போது சக்கை போடு போடும், ரியாலிட்டி டி.வி. ஷோவின் படப்பிடிப்புத் தளத்தில், போட்டியாளர்களுக்கான அடுத்த கட்ட தேர்வை பற்றி அவர்களிடம் மேலும் விளக்க ஆரம்பித்தார் அந்த நிகழ்ச்சியின் க்ரியேட்டிவ் டைரக்டர்.
“ஆமா… படிக்கற காலத்துல ஹோம்வர்க் ஒழுங்கா பண்ணாததால தான், இந்தப் பய இன்னைக்கு இப்படி லோல் படறான்.” நிகழ்ச்சியில் பங்கெடுத்து, இந்த சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த மதனின் அப்பா, சத்தமாக முனக,...
“ச்ச்சு… சும்மா இருங்க… என் புள்ளையை குறை சொல்லலைன்னா உங்களுக்கு சாப்பாடு உள்ள இறங்காதே” என்று கணவனை கண்டித்த அவர் மனைவி,... சோர்ந்து வந்த மகன் மதனிடம், ஜூஸ் பாட்டிலை நீட்டினார்.
நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான, ‘டூரிங் டாக்கீஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தினர், அவர்கள் அடுத்து எடுக்கவிருக்கும் படத்தில், அறிமுக நாயகனாக இப்போட்டியில் வெற்றி பெறுபவர் இருப்பாரென்று, பரிசு அறிவித்திருந்தனர்.
தற்போதைய டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதல் இடத்தில் இந்நிகழ்ச்சி உள்ளது. இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று தொலைக்காட்சி பார்க்கும் பல கோடி பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாளேடுகள், மற்றும் வார இதழ்களிலும் கூட இதை பற்றிய செய்திகளே முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன.
ஆரம்ப கட்ட ஸ்க்ரீன் டெஸ்ட், நடனம், காமெடி, வசன உச்சரிப்பு மற்றும் சில அடிப்படை சுற்றுகள் நல்ல முறையில் முடிந்து விட்டது. இப்போது நவரசத்தில் ஒவ்வொரு உணர்வாக போட்டியாளர்கள் எப்படி பிரதிபலிக்கிறார்கள் என்று அறிந்துக் கொள்ள வேண்டி, அவர்களுக்கு ஒரு காட்சி விளக்கப்பட்டு, அவர்களின் நடிப்பை படம் பிடிக்கின்றனர்.
தமிழ்த் திரை உலகில் நடிப்புக்கென பேர் பெற்ற முன்னாள் திரை நட்சத்திரங்கள் மூவரும், ஒரு சிறப்பு விருந்தினரையும் நடுவர்களாக வைத்து, ஒவ்வொரு வாரமும் சில போட்டியாளர்கள் விலக்கப்பட்டும், மற்றும் சிலர் அடுத்த சுற்றுக்கும், தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆரம்பத்தில் இருபத்தியொரு இளைஞர்களோடு துவங்கிய போட்டியில், வெவ்வேறு நிலைகளுக்கு பிறகு, இன்று ஆறு பேர் எஞ்சி உள்ளனர்.
‘டூரிங் டாக்கீஸ்’ நிறுவனர் திரு. சக்ரவர்த்தியின் மகனும், தமிழ் திரையுலகைத் தன் வசீகர நடிப்பால், நடனத் திறமையால் கட்டிப் போட்டிருக்கும் இளம் புயலுமான, நடிகர் நிகில்…! நாளைய நிகழ்ச்சிப் பதிவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெறுகிறார்.
முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றது மட்டுமில்லாமல், தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்கள் தந்தவர்…! மூன்று ஃபிலிம் ஃபேர், மற்றும் சி.மா, விருதுகள் வாங்கியவர். திரையுலகில் பல இளம் ஹீரோக்களுக்கு சிம்மசொப்பனமாக, உச்சத்தில் இருக்கும் நிகில்,... அவர்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, பரிசு ஸ்பான்சர், செய்யும் இந்த ரியாலிட்டி ஷோவுக்கு வருவது பெரிய விஷயம் இல்லை.
போட்டியாளர்களுக்கு நடிப்பு பயிற்சியும், வசன உச்சரிப்பை திருத்தி செதுக்கவும் அமர்த்தபட்டிருந்தவரிடம், அடுத்த நாளுக்கான ஆயத்தம் செய்ய ‘நான், நீ’ என அவர்கள் போட்டி போட்டு சூழ்ந்தனர்.