ஓர் வாழ்க்கை - நிஷா லஷ்மி

அதிகாலையில் சுப்ரபாத பாடலுக்கு பதிலாக அந்த வீட்டு மருமகளின் குரல் வீட்டுக்குள் பட்டு திரும்ப திரும்ப எதிரொலித்து கொண்டிருந்தது.
“அம்மாவை அனுசரிச்சு போயேன் அனுஷா”இந்த வாசகம் மட்டும் அவனுடைய அம்மா தங்கத்திற்கு இனிமையை கொடுத்து கொண்டிருந்தது.
“இன்னும் எத்தனை நான் அனுசரிச்சு போகணும்.பார்த்தாச்சு.எல்லாத்தையும் பார்த்தாச்சு.இதுக்கு மேல நீங்க உங்க அம்மா கூடவே இருங்க.என்னோட ஞாபகம் வந்தா மட்டும் என் வீட்டுக்கு வாங்க”என்று தன்னுடைய பேகை தயார் செய்து கொண்டிருந்தாள்.
“ஏன் இப்படி அடம்பிடிக்கிற”சலித்துப் போனவனாய் கேட்டான் அவளது கணவன் ப்ரியன்.
“நீங்க தான் அடம்பிடிக்கிறிங்க.என்னோட உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பு கொடுக்காம எல்லாம் செய்துட்டு இருக்கீங்க”உச்சக்கட்ட எரிச்சலில் சொன்னாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சிறுகதை - குடிகாரன் - கிருத்திகா
படிக்க தவறாதீர்கள்...
“அம்மாவுக்கு கால் வலிக்குதுன்னு தானே பிடிச்சு விட சொல்றாங்க.இதுல என்ன தப்பு இருக்கு.பெரியவங்களுக்கு நோய் வரும் போது பார்த்து நடக்க வேண்டியது உன் பொறுப்பு தானே”
“ஒரு நாள்னா பரவாயில்லை.உங்கம்மாவுக்கு தினமும் இல்ல வந்து தொலைக்குது”என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற,
“புரிஞ்சுக்கோ அனுஷா”என்று பேகை பிடித்து இழுத்தான்.
“நீங்க என் அப்பாவுக்கு காலை பிடிச்சு விடுங்க. நான் உங்கம்மாவுக்கு காலை பிடிச்சு விடறேன்”என்றதும் அவனது கை அவள் கன்னத்தில் பதிந்திருக்க..அதே வேகத்தில் அவளுடைய கை அவனது கன்னத்தில் பதிந்திருந்தது.
அம்மாவின் முன் அவளை அடக்கித்தான் வைத்திருக்கிறேன் என்று காமிக்க அவன் நினைத்திருக்க,அவள் இப்படி செய்தது அவனுக்கு கோபத்தை வரவழைக்க விரக்தியுடன் அவளை பார்த்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.
“இவரோட அம்மா மட்டும் எனக்கு அம்மா மாதிரியாம்.நான் சேவகம் செய்தா தப்பில்லையாம்.ஆனா என்னோட அப்பாவுக்கு காலை பிடிச்சு விட சொன்ன உடனே கோபம் வந்துடுச்சு.அவர் மட்டும் இவருக்கு அப்பா மாதிரி இல்லையா.என்ன ஒரு சுயநலம்”வெறுப்புடன் அவனிடம் சொன்னவள் கிளம்பிபோய்விட்டாள்.
தங்கத்தின் கணவர் அவளது திருமணத்துக்கு முன் தான் இறந்திருக்க,அதிலிருந்து ப்ரியன் அம்மாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான்.அதில் தவறில்லை.
அம்மாவின் முன் காதலித்து கைபிடித்த அனுஷாவிடம் ஒரு வார்த்தை பேசக் கூட தயங்கினான்.அவள் அருகில் வந்தால் அம்மாவிடம் சென்று அமர்ந்துவிடுவான்.
“அம்மாவை தனிமையை உணர விடக் கூடாது அனுஷா”என்றதில் அவளும் சமாதானம் ஆகிவிட்டதால்,மாமியாரை நன்றாகவே கவனித்துக் கொண்டாள்.
வேலைக்கு சென்றுவிட்டு வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டவள் மாமியாரையும் கவனிக்கும் போது,அவருக்கு உடல்நிலை எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்பது அவளுக்கு தெரிந்துவிட்டது.
மருமகள் தன் காலடியில் தான் இருக்கிறாள் என்று மற்றவர்களிடம் சொல்லி கொள்வதற்காக அவர் நடந்துகொள்வது புரிந்த போதும் அவருக்கு சேவை செய்வதை நிறுத்தவில்லை.
வேலை மிகுதியால் அவள் விடுத்தது ஒரே வேண்டுகோள் தான்.வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளலாம் என்பது தான் அது.
“நம்ம நிலைமைக்கு அது சரிபட்டு வராது அனுஷா”என்று தங்களது குடும்பநிலையை கருத்தில் கொண்டு மறுத்துவிட்டான் ப்ரியன்.
“என்னோட சம்பள பணத்தில இருந்து கொடுக்கறேன்”என்றதும்,
“நீ வேலைக்கு போறதை நிறுத்திடேன்.வேலைக்காரி எதுக்கு போடணும்”என்று அம்மாவின் பேச்சு கேட்டு அவன் சொல்ல,அன்று ஆரம்பித்தது பிரச்சனை.
“என்னோட வேலையை விடவே முடியாது”என்று அவள் சாதித்தவள்,தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து கணவனை மருத்துவமனைக்கு அழைத்தாள்.
அவனோ,”அம்மாவை விட்டுட்டு வர முடியாது.நீ மட்டும் போயிட்டு வா”என்று அவள் கர்ப்பமாய் இருப்பது தெரியாமல் அவன் சொல்லிவிட, வெறுத்துப் போனவள்,இறுதியில் அம்மா வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தாலே தவிர,அவனை தனிக்குடித்தனம் அழைக்கவில்லை.
இதிலிருந்தாவது மருமகளின் குணத்தை புரிந்திருக்கலாம்.
அவர் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்காமல் இருக்க, இன்றோடு அவள் சென்று வருடம் ஆகிவிட்டது.
அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்க,கோவிலுக்கு சென்ற அனுஷா எதிரில் கணவனையும் அவளது அம்மாவையும் கண்டாள்.
தங்கம் ஊராரின் பேச்சை கேட்க முடியாமல் வந்திருந்தாலும்,பேத்தியை கொஞ்ச மனம் துடித்தது.
மகனையும் மருமகளையும் கண்டுகொள்ளாமல் குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அவர் முன்னே சென்றுவிட,அவளுடன் பேச அவன் தவித்தான்.
அதே நேரத்தில் ஏதோ ஓர் சத்தம்.
அவன் பேச நினைத்த போது,வார்த்தைகள் வரவில்லை.
அவனைக் காண அவள் துடித்தாள்.
கண்கள் தெரியவில்லை.
இருவருமே இனி பிரிய முடியாத இடத்திற்கு சென்றிருந்தனர்.
எதிர்பாராமல் நடந்த வெடி விபத்தில் அந்த இடத்தில் இருந்த அத்தனை பேரும் இறந்துவிட்டனர்.
கையில் பேத்தியுடன் கோவிலுக்குள் இருந்த தங்கம் கதறலுடன் ஓடி வர,அவர் கைக்குள் வைக்க ஆசைப்பட்ட மகன் அவர் கையில் ஏந்த முடியாத அளவுக்கு சிதறிப் போயிருந்தான்.
“என் மருமகள் எனக்கு கட்டுப்பட்டு தான் இருக்கிறாள்”என்று உறவினர் முன்னே சொன்ன போது பெருமையாக இருந்தவருக்கு,இன்று குடும்பத்தை பறிகொடுத்த போது பெருமையாக இருந்திருக்குமா என்ன!!
இருப்பது ஓர் வாழ்க்கை.யாரையும் அடக்கி வைக்க துணியாமல்,யாரையும் துன்புறுத்தாமல் இருக்கலாமே!!
{kunena_discuss:926}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.