காத்திருந்தேன் - கிருஷ்ண பாபு
லைப்ரரியில் புத்தகங்களை கிண்டிக் கொண்டு இருந்தேன். ரேக்கின் மேலிருந்து என் தலையில் விழுந்தது மிகப்பழைய புத்தகம் ஒன்று.
புரட்டினேன்.
என்ன ஆச்சரியம்! யாரும் இதுவரை அதை வாடகைக்கு எடுத்ததில்லை.. தொட்டது கூட இல்லை போல… மகா தூசியாக இருந்தது.
நின்றபடி படிக்க ஆரம்பித்தேன்.
அது ஒரு சரித்திர நாவல்.
இளவரசன் ஒருவனுக்கும் அவன் எதிரிக்கும் நடந்த யுத்தத்தின் வியூகங்கள் அனைத்தும் இளவரசனின் பார்வையில் அழகாக எழுதப்பட்டிருந்தன.
வீரமும் காதலும் ஒரு சேர கலந்த கதை. ஆனால் எனக்கு ஏனோ அந்த இளவரசன் கேரக்டரை பிடிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் பாதுகாவலனையே துரோகி ஆக்கி இளவரசனை கொல்கிறான் எதிரி.
அட,இது பாகுபலி கதை போல இருக்கிறதே என்று ஆச்சர்யமானேன்.
வாழ்வின் கடைசி நொடிகளில் இளவரசன் தன் எதிரியை நோக்கி சூளுரைக்கிறான்.
'இந்தக் கதையின் கடைசி வரியில் உன்னை நான் நிச்சயமாக கொல்வேன். இது சத்தியம்'
ஆஹா,சரித்திர கதை பேய்க்கதை போல ட்ராக் மாறுகிறதே என வியந்து விசிலடித்த நான் சஸ்பென்ஸ் தாங்காமல் உடனே கடைசி வரிக்கு சென்று படித்தேன்.
'வா என் இனிய எதிரியே! உனக்காக எத்தனை ஜென்மங்கள் இந்த புத்தகத்தில் காத்திருக்கிறேன் தெரியுமா?'
சட்டென என் இதயத்தில் வாள் சொருகியது போன்ற வலி.
சரிந்தேன்.
{kunena_discuss:785}