தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 17 - சித்ரா. வெ
ஐந்து வருடங்களுக்கு முன்பு,
பாண்டிச்சேரி
“யதும்மா மணி எட்டாகப் போகுது பாரு.. காலேஜ்க்கு போக வேண்டாமா? எந்திரிம்மா..” என்று செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த ரத்னா,
பின் கொஞ்சம் கொஞ்சமாய் அவரது பொறுமை பறந்து போய், “பொம்பளை பிள்ளையா கொஞ்சமாவது பொறுப்பா இருக்கீயா? இப்படி டெய்லி எட்டு மணிக்கு எழுந்து காலேஜ்க்கு கிளம்பினா என்ன அர்த்தம்? இதுவரைக்கும் எந்த டீச்சரும் உன்னை கேள்விக் கேக்கறதில்லையா? இல்லை கேட்டாலும், நான் இப்படி தான் இருப்பேன்னு திமிறு புடிச்சு திரியிறியா?
ஒவ்வொரு வீட்ல பிள்ளைங்க எவ்வளவு பொறுப்பா இருக்குங்க.. வீட்ல அம்மாவுக்கும் உதவியா இருக்குங்க.. அதேசமயம் காலேஜ்க்கு போய் நல்லா படிக்கவும் செய்யுதுங்க.. ஆனா என்னோட ராசியான்னு தெரியல.. வந்ததும் சரியில்ல, வாச்சதும் சரியில்ல.. நான் வாங்கி வந்த வரம் இப்படி போல..” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் அதற்கும் அசராமல் இன்னும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்காமல் இருந்தாள் யாதவி.
“இப்போ தண்ணியை எடுத்துட்டு வந்து முகத்துல ஊத்தினா தான் எழுந்திருப்ப போல..” என்று தன் கடைசி ஆயுதத்தை ரத்னா சொன்னதும் தான், யாதவி படுக்கையை விட்டு எழுந்தாள்.
இதற்கு கூட அசராதவள் தான் அவள், ஆனால் எத்தனையோ முறை பேருக்கு சொல்லிக் கொண்டிருந்தவர் ஒருநாள் குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து அவள் மீது ஊற்றிவிட்டார். ஏற்கனவே அப்போது குளிர்காலம் வேறு, அதனால் திரும்ப அன்னை இப்படி ஏதாவது செய்துவிடுவார் என்பதாலேயே பயந்து எழுந்தாள்.
எப்போதோ உறக்கத்திலிருந்து விழித்துவிட்டாலும், தினம் அன்னையின் புலம்பலை கேட்பதே ஒரு சுகமாக இருக்கவே அப்படியே படுத்திருந்தாள் போல,
இவ்வளவு நேரம் புலம்பியவரா இவர் என்பது போல் ரத்னா மகளுக்கு பூஸ்ட் கலந்து கொண்டு வந்து கொடுக்க ரசித்து ருசித்து பருகிக் கொண்டிருந்தாள்.
ஒன்பது மணி கல்லூரிக்கு எட்டு மணிக்கு தான் விழிப்பவள், அப்போது கூட பரபரப்பாக கிளம்பாமல் நிறுத்தி நிதானாமாக தான் கிளம்புவாள். மகளை நினைத்து இப்போதே ரத்னாவிற்கு கவலையாக இருந்தது. சில சமயம் சில விஷயங்களில் பக்குவமாக நடந்து கொள்பவள், சில விஷயத்தில் அதிகபிரசங்கித்தனமாகவும் நடந்துக் கொள்வாள். எதிலும் எப்போதும் அவளிடம் ஒரு அலட்சியம் குடி கொண்டிருக்கும், ஆரம்பத்தில் அதிக செல்லம் கொடுத்து வளர்த்தது தான், இப்போது அவள் இப்படி இருக்கிறாளோ என்ற பயம் உண்டு. அதனால் சில விஷயங்களில் இப்போது அவளிடம் ரத்னா கண்டிப்பையும் காண்பிக்கிறார். அப்போதும் அவளது குணத்தில் மாற்றம் வரவில்லையே என்பது அவரது பெருங்கவலையாக இருந்தது.
திருமணம் ஆன சில வருடங்கள் பன்னீர் ஒழுங்காக தான் இருந்தார், பின் அவருக்கு இருந்த நண்பர்களின் சகவாசம் கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்பற்றவராக மாறிக் கொண்டிருந்தார். பிறந்த வீடு, புகுந்த வீட்டு உறவினர்கள் எல்லம் ஒரளவுக்கு கௌரவமாக வாழ்ந்துக் கொண்டிருக்க, இதில் பன்னீரால் இவர்களை அனைவரும் கொஞ்சம் கீழாக பார்க்க ஆரம்பித்திருந்தனர். இதில் உறவினர் ஒருவர் பிள்ளைகளோடு வெளிநாட்டிற்கு செல்வதால், அவர்களது வீட்டையும் நிலத்தையும் வேறொருவரிடம் ஒப்படைக்க மனமில்லாததால் ரத்னாவிற்காக பார்த்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அதுவரை பன்னீரின் பொறுப்பற்ற தன்மையால் குடும்பம் நடத்தவே கஷ்டமாக இருக்க, அவர்களின் தயவால் கொஞ்சம் வருமானம் கிடைக்க ரத்னா நிம்மதியாக குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
திருமணம் ஆகி 3 வருடம் கழித்து தான் யாதவி பிறந்தாள். அப்போதே பன்னீரை பற்றி ஓரளவுக்கு தெரிந்துக் கொண்டதால் ரத்னா ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொண்டார். ஒரே குழந்தையாக இருக்கவே அவளை மிகவுமே செல்லமாக வளர்த்துவிட்டார். இதில் குடும்ப கஷ்டத்தை மகளுக்கு காண்பிக்காமலே வளர்த்தார்.
இதில் உறவினர்களை நிலத்தை பார்த்துக் கொண்டு அவர்கள் வீட்டையே உபயோகித்ததால், கொஞ்சம் பெரிய வீடு என்பதால் யாதவியின் பத்தாம் வகுப்பு வரை அங்கு தான் இருந்தார்கள். அவர்களது சொந்த வீடு போலவே யாதவியும் பன்னீரும் பாவிக்க ஆரம்பித்திருந்தனர்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
இதில் பன்னீர் வெளிநாடு சென்றவர்கள் திரும்பி வரப் போகிறார்களா? என்பதால் அந்த நிலத்திலும் உரிமை இருப்பது போல் சில ஏமாற்று வேலைகளை செய்ய ஆரம்பிக்க, அது அந்த நிலத்தின் சொந்தக்காரருக்கு தெரிந்து,
“நான் வர்றதுக்குள்ள என்னோட நிலம் என் பேர்ல இருக்குமான்னு தெரியல.. ஏதோ சொந்தக்காரங்களாச்சே, கஷ்டப்பட்றீங்களே, யாராச்சும் தெரியாதவங்க கையில் வீட்டையும் நிலத்தையும் பார்த்துக்க சொல்லி சொன்னா, என்ன செய்வாங்களோன்னு பயந்து, அந்த வீட்டிலேயே இருந்துக்கோங்கன்னு சொல்லி, சம்பளம் மாதிரி கொஞ்சம் பணமும் கொடுத்தா உங்க கஷ்டத்துக்கு உதவியா இருக்கும்னு நினைச்சா.. உன்னோட புருஷன் இப்படி நடந்துக்கிறானே, இனி தயவு செஞ்சு இங்க இருக்க வேண்டாம்.. இந்த காலத்தில் இரக்கப்பட்றது கூட தப்பு போல..” என்று சொல்லி அந்த உறவினர் அவர்களை அங்கிருந்து கிளம்பச் சொன்னார்.
பின் விழுப்புரத்தில் இருந்த அந்த கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான், பாண்டிச்சேரியில் ஒரு சின்ன வீடு வாடகைக்கு எடுத்து, இனி கணவனை நம்பினால் நடுத்தெருவுக்கு தான் வரவேண்டுமென்பதை உணர்ந்து அங்கேயே ஒரு பருப்பு கம்பெனியில் ரத்னா தனக்கென்று ஒரு வேலையை தேடிக் கொண்டார்.
தான் எத்தனை கஷ்டப்பட்டாலும் மகளை நல்லப்படியாக படிக்க வைத்து ஒரு நல்ல இடத்தில் அவளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்ற உந்துதலோடு இன்னும் கூடுதலாக கூட ரத்னா உழைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் யாதவிக்கோ வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவு பெரிதாக இருந்தது. இதுவரை இருந்ததற்கும் இப்போது இருக்கும் நிலையை அவள் வெறுத்தாள். படித்து வேலைக்கு சென்று பின் வசதியான வாழ்வு வாழ்வதெல்லாம் அவளை பொறுத்தவரை கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான், வீட்டு நிலைமையை மகளிடம் சொல்லாமல் வளர்த்தது ஒருப்பக்கம் என்றால், இப்போது அதை புரிந்துக் கொள்ளும் வயது வந்தாலும் பிறப்பிலேயே பன்னீரின் சில குணங்கள் அவளுக்கு இருந்ததாலோ என்னவோ உழைக்காமல் வரும் வசதியை நோக்கி அவளது கனவு நீண்டது.