அது போகட்டும்! அண்ணே! இதிலே முப்பதாயிரம் ரூபாய் இருக்கு!இந்தப் பணம், பதினெட்டு வருஷம் நீங்க கடுமையா உழைச்சதுக்கு அரசாங்கம் உங்களுக்கு கொடுத்த சம்பளம்! இதை அப்படியே எங்களிடம் கொடுத்திருக்கீங்களே, நீங்க ஒரு காசுகூட உங்களுக்கு வைச்சுக்கலையே, என்ன பண்ணுவீங்க, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு?
சரி, எங்களுக்கு இந்தப் பணம் எத்தனைநாள் செலவுக்கு போதும்? ஒரு மாசம்? பிறகு?
அண்ணே! எனக்காவது ஆசிரியர் உத்தியோகத்திலே மாசாமாசம் சம்பளம் கிடைக்கும்?
உங்களுக்கு வேலை கிடைக்கவே, கொரோனாவை முழுக்க ஒழிக்கணுமே, அதுக்கு எத்தனை மாசம், வருஷம் ஆகுமோ?
இந்தாங்க! இதை நீங்களே வைத்துக்கொண்டு எத்தனைநாள் சமாளிக்கமுடியுமோ சமாளிங்க!"
என்று பணத்தை, அண்ணனின் சட்டைப்பையில் திணித்தாள், தங்கச்சி!
அங்கே, பாசப் பிணைப்பின் அருவி, குற்றால அருவிபோல, கொட்டியது!
அருகில் நின்றுகொண்டிருந்த காயத்ரி, மாதவியும் அவர்களை அணைத்துக்கொண்டு கண்ணீரில் கரைந்தனர்.
சகாதேவன், பணத்தில் பாதியை தான் வைத்துக்கொண்டு, மறுபாதியை தங்கச்சியிடம் தந்தார்.
" அண்ணனுக்கு பாதி, தங்கச்சிக்கு பாதி! சரியா?"
சகாதேவனின் சிரிப்பில், மற்றவர்களும் கலந்துகொண்டனர்.
குழந்தைகளின் ஆசைக்காக, சகாதேவன் உணவு சாப்பிட்டார்.
தங்கச்சி, கண்ணீர் விட்டுக்கொண்டே, இரண்டு வேளைப் பசிக்கு தேவையான அளவு பரிமாறினாள்! அதற்குமேல், வயிறு கொள்ளாதே!
தங்கச்சியின், அவள் பெற்ற பெண்களின் பாசத்தை நெஞ்சார அனுபவித்துக்கொண்டே, சகாதேவன் கன்னத்தில் நீர் வழிய, சாப்பிட்டார்!
கிளம்பும்போது, மூவரையும் பார்க்கிற துணிவின்றி, சகாதேவன் வெளிப்புறம் பார்த்துக்கொண்டே, கைப்பையை எடுத்துக்கொண்டு, "போய் வரேன்" என முனகினார்.
" எப்போதும் நிகழ்காலத்தில் வாழணும்னு எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்க, அது தங்கச்சிக்கு மட்டுமில்லே, அண்ணனுக்கும்தான்!"
சகாதேவன் தலையை உலுக்கிக்கொண்டு, தொண்டையை கனைத்தவாறு எட்டி நடை போட்டு வெளியேறினார்.
திரும்பிப் பார்த்திருந்தால், இதயமே வெடித்திருக்கும், மூவரின் முகத்தில் கப்பியிருந்த சோகத்தைக் கண்டு!