தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 25 - சாகம்பரி குமார்
ரேச்சல் கண்விழிப்பதற்காக அனைவரும் காத்திருந்தனர். இருள் சூழ ஆரம்பித்து விட்டது. ஆனால் ரேச்சலுக்கு இன்னும் விழிப்பு வரவில்லை. அவளுக்கு உடல் நிலை சீராக இருந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என்று மருத்துவருக்கு தோன்றியது.
"சம்திங் ராங்…. அவங்க ஏன் இன்னும் கான்ஷியஸிற்கு வரலைனு புரியலையே. அவங்களுக்கு ஏற்கனவே ஏதாவது ஹெல்த் இஷ்யூ இருக்கா" ஷீலாவிடம் கேட்டார்.
ரேச்சலின் விபத்து பற்றியும் அதனால் வந்த அம்னீசியா பற்றியும் அவர் சொன்னார்.
"ஓ… நான் எதுக்கும் சைக்ரியாடிஸ்ட் கிட்ட கன்சல்ட் பண்றேன்" என்று விரைந்தார்.
அப்போது சத்யன் ஷீலாவிடம் பேசினான். ரேச்சலுக்கு அவள்தான் மீரா என்ற பழைய நினைவு வந்திருக்கலாம். காரில் வரும்போது உளறிக் கொண்டு வந்தாள்... என்று சொன்னான்.
"நல்லதே நடக்கட்டும் தம்பி… ரேச்சல் என்றாலும் மீரா என்றாலும் அவள் என்னுடைய மகள்தான். அவள் குடும்பத்துடன் இணைந்து வாழ்வதுதான் நல்லது." என்றார்.
"ஆன்ட்டி… அவளுக்கு நினைவு திரும்பி விட்டால் உங்களை மறக்கவும் வாய்ப்பு உள்ளது." என்று கவலையாக ஜெமி சொன்னான்.
"இருக்கட்டும்ப்பா… அதனால் என் மகளுக்கு நல்லது நடக்கும்தானே. அவளுக்காக ஒரு அருமையான குடும்பம் காத்திருக்கிறது" என்றார்.
அப்போது மருத்துவருடன் இன்னொரு மருத்துவரும் வந்தார். அவரை பார்க்கவும்,
"ஏதாவது சிக்கலா…?" சத்யன் பதறினான்.
"இவர்தான் ஆஸ்டின்… சைக்ரியாடிஸ்ட்… இவர் என்ன சொல்றார்னா… டாக்டர்… நீங்களே விளக்கி விடுங்கள்" என்று அருகிலிருந்த மருத்துவரிடம் சொன்னார். அவர் விளக்க ஆரம்பித்தார்.
"ரேச்சலுக்கு என்ன நடந்திருக்கலாம் என்பதில் இரண்டு விஷயங்கள் சாத்தியமாக இருக்கலாம்.. அந்த தீ விபத்தினால் அவங்களுக்கு ஏற்பட்ட அம்னீசியா குணமாகி இருக்கலாம். அல்லது அந்த விபத்து இரண்டாம் முறையாக நடந்ததாக நினைத்து இன்னும் அந்த பாதிப்பில் ஆழ்ந்து போயிருக்கலாம். இதனால் அவருடைய மூளை தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு இயல்பு நிலைக்கு வர அவகாசம் எடுத்துக்கும்.. ஆழ்ந்த உறக்கம் நல்லதுதான். அவராக விழித்து எழட்டும்."
"ஏதும் சிக்கல் இல்லையே…."
"அது… அந்த சம்பவத்தை அவருடைய மூளை எப்படி எடுத்துக் கொண்டது என்பதை பொறுத்து அமையும்."
"புரியவில்லை டாக்டர்"