"மேடம்… நீங்க நந்துவோட போங்க. நாங்க ஜெமியுடன் வருகிறோம்." என்று ரஞ்சன் அவர்களை காரில் ஏற்றி விட்டான். அடுத்த நொடியே மனுகுட்டி ரேச்சலிடம் பாய்ந்து ஒட்டிக் கொண்டது. அவர்களுடைய கார் கிளம்பியது.
அடுத்த சில நிமிடங்களில் ஜெமி காரில் வந்து விட்டான். அவன் ரஞ்சனையும் சத்யனையும் பார்த்து,
" வாருங்கள் நாமும் கிளம்புவோம்" என்று சொல்லி இறங்கி கார் கதவை திறந்தான்.
சத்யனும் ரஞ்சனும் காரில் ஏறிக்கொள்ள அவர்களுடைய கார் கிளம்பியது. சத்யன் ஒன்றும் பேசாமல் அமைதியாக காரை ஓட்டினான். ரஞ்சனும் ஜெமியும் பேசிக் கொண்டனர்.
"மீராவுக்கு அம்னீசியா குணமாகவில்லை என்பது வருத்தமாக இருந்தாலும், வேறு ஒன்றும் பெரிய பிரச்சினை எதுவும் நடக்கவில்லை என்பதை நிம்மதியாக இருக்கிறது. அவர்கள் நெருப்புக்குள் பாய்ந்ததை பார்த்த பொழுது நான் மிகவும் பயந்துவிட்டேன். பெரிய அளவில் தீக்காயம் ஏற்பட்டு விடுமோ என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. தேங்க் காட்" ஜெமி சொல்ல,
"ஆமாம். அதுமட்டுமல்ல மனநல மருத்துவரும் சில விஷயங்களை சொல்லி பயமுறுத்தி விட்டாரே மீராவிற்கு பழைய நினைவும் வராமல் இப்போதைய நினைவும் இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது என்றாரே… அப்படி இல்லை என்பதும் நல்ல விஷயம்தான்." ரஞ்சன் பதிலளித்தான்.
"இனி அடுத்து என்ன செய்வது?"
"மீராவிற்கு பழைய நினைவுகள் திரும்பும்வரை அவளை ரேச்சலாகதான் நடத்த வேண்டும்."
"அப்படினா மீரா உங்களுடன் இருக்க முடியாது…" ஜெமி கேட்டான்.
"ஆமாம்…"
"அப்படியே விட முடியாது ப்ரோ… இந்த விஷயத்தை செட்டில் பண்ணிட்டு நான் ஆன்ட்டியை யூஎஸ்ஸுக்கு கூட்டிட்டு போயிடலாம்னு இருக்கேன்"
"என்ன செய்யனும்"
"நான் தெரிஞ்சுகிட்டவரை அம்னீசியா கடைசிவரை குணமாகமலே இருக்கும் வகையும் உள்ளது. ரேச்சலாகவே மீரா இருந்துட்டால் ப்ராப்ளம் ஆயிடும்."
"ஆமாம்… மனுகுட்டி வளரனும்… சத்யனுக்கும் மனைவி வேணும். காத்திருத்தலின் எல்லை தெரியாமல் எதையும் நம்பி செய்ய முடியாது"
"ம்… அதுக்கு சத்யன் சார் புதுசா இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பிச்சிடலாமே…" ஜெமி ஆலோசனை தந்தான்.