தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 16 - முகில் தினகரன்
“ம்ம்ம்...என்ன?ன்னு தெரியலை...தரகர் மட்டும் கைல பஞ்சாங்கத்தை வெச்சுக்கிட்டு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கார்!..மத்தவங்க எல்லோரும் எதையோ ஆவலோடு எதிர்பார்த்துக்கிட்டு அவர் முகத்தையே கூர்ந்து பார்த்திட்டிருக்காங்க!” என்று நேர்முக வர்ணனை செய்தாள் அர்ச்சனா.
“வர்ற ஐப்பசி ரெண்டு...நல்ல முகூர்த்தமாயிருக்கு!...இப்பயிருந்து கணக்குப் போட்டா சுத்தமா மூணு மாசம் டைமிருக்கு!...ரெண்டு குடும்பத்துக்கும் சௌகரியப்படும்ன்னா...அந்த நாளையே குறிச்சிடலாம்!” என்று தரகர் சொல்ல,
மாப்பிள்ளை வீட்டார்கள் அவர்களுக்குள் எதையோ சன்னக் குரலில் விவாதித்தனர்.
தேவநாதனும் எழுந்து பார்வதியிடம் சென்று தணிவான குரலில் பேசினார்.
அதற்குள் கூட்டத்தில் ஒருவர், “பரவாயில்லையே...இந்த தரகர் ஜோசியரோட வேலையையெல்லாம் தானே செஞ்சுடறாரே!” என்று சொல்லி விட்டுச் சிரிக்க,
பதிலுக்கு “ஹி...ஹி...ஹி”என்று சிரித்த தரகர், “ஒரு வருஷமா...ரெண்டு வருஷமா...கிட்டத்தட்ட பத்தொன்பது வருஷமா கல்யாணத்தரகர் வேலை பார்க்கறேன்...நூத்துக் கணக்கான ஜோடிகளைச் சேர்த்து வெச்சிருக்கேன்!...அந்த அனுபவம் போதாதுங்களா...பஞ்சாங்கத்தைப் பார்த்து நல்ல நாள் குறிக்கறதுக்கு?” என்றார்.
அப்போது மாப்பிள்ளையின் தகப்பனார், “எங்களுக்கு அந்த முகூர்த்த தேதி சம்மதம்!...இனி பொண்ணு வீட்டுக்காரங்கதான் சொல்லணும்!” என்றார் மலர்ந்த முகத்துடன்.
அவர் சொல்லி முடிக்கும் முன் பார்வதியும், “எங்களுக்கும் அந்த முகூர்த்தம் ஓ.கே!...தாராளமா அதே தேதில திருமணத்தை வெச்சுக்கலாம்!” என்றாள்.
“அப்புறமென்ன?...ரெண்டு வீட்டார்க்கும் பூரண திருப்திதானே?” தரகர் கேட்க,
ஒட்டு மொத்தமாய் அங்கிருந்தவர்கள் எல்லோருமே தங்கள் சம்மதத்தைக் காட்டும் விதமாய்த் தலையாட்டினர்.
மாப்பிள்ளை வீட்டுப் பக்கத்தைச் சேர்ந்த ஒரு பெருசு, “ஆஹா...எனக்குத் தெரிஞ்சு...இது ஒரு மகா பிராப்தம்!...ஏன்னா?...இது வரைக்கும் பொண்ணு பார்க்க வந்த இடத்திலேயே...திருமண நாளும் குறிச்ச சம்பவம்...இதுதான் முதல் தடவையா இருக்கும்னு நான் நினைக்கறேன்!” என்று பெருங்குரலில் சொல்லி மகிழ்ந்தார்.
“அப்ப...எல்லோரும் சந்தோஷமா டிபன் சாப்பிடலாமே?...அதான் எல்லாமே நல்ல விதமா முடிஞ்சிடுச்சில்லே?” தரகர் குதூகலித்தார். அந்த குதூகலம் வெறும் கமிஷனுக்கான குதூகலமாய் நிச்சயம் இல்லை.
அப்போது அந்த சம்பூர்ணத்தின் முகத்தில் ஈயாடவில்லை. அவளுக்குள் ஒரு கோப உலை கொதித்துக் கொண்டிருந்தது அவள் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.