தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்
புதன் கிழமை.
மாலை ஏழு மணி வாக்கில் உப்பாயம்மன் கோவிலுக்குள் நுழைந்தான் ரவீந்தர். சுதாகர்ஜி சொன்னதைப் போலவே அன்று கூட்டம் சற்று அதிகமாயிருந்தது. “இந்த ஊரில் இருக்கும் அந்தக் குல மக்கள் மொத்தமே இவ்வளவுதான் போலிருக்கு?...இதை நம்பி உட்கார்ந்திட்டிருந்தா சுதாகர்ஜிக்கு தட்டுல காசு விழாது...அவர்தான் தட்டுத் தடுமாறி விழுவார்!...நிச்சயமா அவருக்கு ஒரு மார்க்கெட்டிங் பண்ணிக்கு குடுக்கணும்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே சென்றான்.
“ஜி...சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...இந்த மணியடிக்கற வேலையைத் தூக்கிப் போட்டுட்டு என் கூட வாங்க...உங்களுக்கு நான் ஒரு நல்ல உத்தியோகம் பிடிச்சுத் தர்றேன்...நல்ல சம்பளத்தோட” என்றான் ரவீந்தர் அங்கிருக்கும் சிலருக்குக் கேட்கும்படியாய்.
“அய்யய்ய...அப்படியெல்லாம் தூக்கிப் போடறதுக்கு இது ஒண்ணும் கூலி வேலை இல்லை!...எங்க குல முன்னோர்கள் எங்க குடும்பத்துக்குக் குடுத்திருக்கற கௌரவம்” என்றார் சுதாகர்ஜி.
அதைக் கேட்டு மகிழ்ந்தனர் குல மக்கள்.
“என்ன பெரிய கௌரவம்?...கால் வயித்துக்கும் அரை வயித்துக்கும் சம்பாதிக்கற பொழப்பு எதுக்கு?...சுதாகர்ஜி...மனுஷன் தன் வேலையைத் தானே சிரத்தையோட செய்யணும்!..அப்படிச் செய்யும் போது அதன் வெற்றி அவனுக்கு முழுதாய்க் கிடைக்கும்!...அதை விட்டுட்டு...கோயிலுக்கு வந்து...மணியடிச்சிட்டு...சாமி கும்பிட்டுட்டு...என்ன பிரயோஜனம்?” நாத்திகனானான் ரவீந்தர்.
“த பாருப்பா...இது எங்க குல தெய்வம் கோயில் இங்க வந்து எதுவும் பேசாதே” சுதாகர்ஜியின் உறவுக்காரனான பால்ராஜ் எகிறினான்.
“அய்யா...சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...உங்க குலதெய்வம் கோயில்ல நித்திய பூஜை செய்யற குருக்கள்...அன்னாடங்காச்சியாய்...வறுமையின் பிரதிநிதியா இருக்கார்!...அதே மாதிரி உங்க குல தெய்வம் வாசம் செய்யுற இந்தக் கோயிலைக் கொஞ்சம் உற்றுப் பாருங்க....சினிமாக்கள்ல வர்ற பேய் பங்களா மாதிரி இருக்கு!..ஆக...தான் இருக்கற இடத்தையே வசதிய வெச்சுக்க முடியாத உங்க குல தெய்வம் எப்படிங்க அய்யா உங்களுக்குப் படியளக்கும்!...நீங்களும் தவறாம வந்து கும்பிட்டுட்டுத்தான் போறீங்க....என்ன பயன் கிடைச்சுது?...” ரவீந்தர் பேசிக் கொண்டே போக,
அங்கிருந்த மற்றவர்களும் ஆத்திரமானார்கள். “பட்டணத்துக்காரத் தம்பி...கொஞ்சம் நாவை அடக்கிப் பேசுங்க!...உப்பாயம்மனை இப்படிப் பேசினா...அவ உங்களைச் சும்மா விட மாட்டா!...”