“எங்க பாஸ்...அதான் “துருவா டிரேடிங் கம்பெனி” எம்.டி. உனக்கு எழுபதாயிரம் சம்பளம் தர்றேன்னு சொல்றார்!...அதனால பேசாம இந்த வேலையை விட்டுட்டு அங்க வந்து சேர்ந்திடு...என்ன?”
கோபத்தைப் புன்னகையாக்கிய அர்ச்சனா, “லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வர மாட்டேன்!...கோடி ரூபாயே கொடுத்தாலும் வரமாட்டேன்!...அதுக்கு நீங்க வேற ஆளைப் பாருங்க!” என்றாள்.
“கண்மணி...நீ பெரிய திறமைசாலி...பலே காரியகாரி...நீ இருக்கறதினாலதான் இந்தக் கம்பெனி இன்னிக்கு உச்சாணிக்குப் போயிருக்கு...அது தெரிஞ்சதினாலதான் உனக்கு எழுபதாயிரம் குடுக்கறேங்கறார்!...உனக்கு ஒரு லட்சம்தான் வேணுமின்னா சொல்லு...வாங்கித் தர்றேன்!..அதை வெச்சுக் காலாகாலத்துல ஒரு கண்ணாலத்தைப் பண்ணிகிட்டு செட்டிலாயிடு தாயி”
தன் வலது கை விரலை நெற்றியில் வைத்துத் தேய்த்த அர்ச்சனா, “நான் ஏதாச்சும் அசிங்கமாய்த் திட்டறதுக்கு முன்னாடி இங்கிருந்து போயிடுங்க!” என்றாள் விழிகள் சிவக்க,
அதுவரையில் பொறுமையாய் பேசி வந்த அந்த கறுத்த மனிதன் சட்டென்று கோபமாகி, “ஏய்...இந்தக் கம்பெனி எந்த அளவுக்கு மேலே மேலே போகுதோ அந்த அளவுக்கு அந்த துருவா டிரேடிங் கம்பெனி கீழே கீழே இறங்கிட்டிருக்கு!...இதுக்கெல்லாம் காரணம் நீதான்!...உன்னோட திறமையும்....சாமார்த்தியமும்தான்...அந்த நொண்டி தனியா இதைப் பண்ணினான்னா ஒரே மாசத்துல கம்பெனிய இழுத்து மூடிட்டுப் போக வேண்டி வந்துடும்!...அதனால..ஒழுங்கா மரியாதையா எங்க பேச்சைக் கேட்டு சமத்தா நடந்துக்கிட்டேன்னா...விபரீதம் எதுவும் ஆயிடாது!...இல்லேன்னா...ம்ஹூம்...நீ தாங்க மாட்டே!” என்று மிரட்ட்ல் தொணியில் சொன்னான்.
அதே போல் அந்த நிமிடம் வரை தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்த அர்ச்சனாவும் பொங்கியெழுந்தாள், “டே....ய்!...எந்திரிடா மேலே!...போடா வெளிய” எரிமலைக் குழம்பு தெறித்தது அவள் வார்த்தைகளில்.
“அச்சச்சோ...என்ன ராசாத்தி?...இப்படிக் கோவிச்சுக்கறே?...இந்தக் கம்பெனிக்கு இத்தனை நாளு சம்பாதிச்சுக் குடுத்தே!...இனி அந்தக் கம்பெனிக்கு கொஞ்சம் நாள் சம்பாதிச்சுக் குடு!...உன்னோட சாதூரியத்தை அங்க வந்து காட்டு...அதுக்குத் தகுந்த சன்மானமும் வாங்கிக்க!”
சட்டென்று கீழே குனிந்து தன் காலிலிருந்த ஸ்லிப்பரைக் கழற்றி, அவன் முகத்திற்கெதிரே அர்ச்சனா ஓங்க,
தன் இரும்புக் கரத்தால் அதைத் தடுத்துப் பிடித்தவன், விழிகள் சிவந்தான்.
“த பாரு...இந்த வேலையெல்லாம் எங்க கிட்ட காட்டாதே!...நல்லா இருக்கற போதே நாலு காசு சம்பாதிக்கப் பாருன்னா...அதை விட்டுட்டு” என்றபடி அவள் கையை “வெடுக்”கென்று உதறித் தள்ளினான் அவன்.