தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 20 - முகில் தினகரன்
உடன் பணி புரியும் அலுவலக நண்பர் அன்பழகன் தன் பிறந்த நாளுக்காக ஆபீஸில் ஒரு சிலரை மட்டும் அன்று மாலை டின்னருக்கு இன்வைட் பண்ணியிருந்தார். அந்த ஒரு சிலரில் ரவீந்தரும் இருந்தான்.
பொள்ளாச்சியின் இருதயப்பகுதியில் இருந்த அந்த உயர்ரக அசைவ ஹோட்டலில் எல்லோரும் பெயர் தெரியாத அசைவ ஐட்டங்களை விழுங்கினர். “அன்பு சார்...இத்தனை அசைவ ஐட்டங்கள் இருப்பதற்கு கூடவே சரக்கும் இருந்தால்....சும்மா அள்ளும்” என்றார் ஒரு லிக்கர் பிரியர்.
“ம்ஹ்ஹும்...அந்த வேலையே ஆகாது!...என் செலவுல உங்களை நான் குடிக்க வெச்சா அது நான் நம்ம நட்புக்கு செய்யற துரோகம்!” ஆணித்தரமாய் மறுப்பளித்த அன்பழகன், “அதுக்கு பதிலா உங்க எல்லோரையும் மூவி கூட்டிட்டுப் போறேன்!...ஓ.கே.?” கேட்டார்.
“என்ன மூவி?”
“பக்கத்து தியேட்டர்ல “கன்ஞ்சூரிங் 2” ஓடுது...போவோமா?”
“பேய்ப் படமா?” ரவீந்தர் கேட்க,
“க்கும்...இங்கிலீஸ்காரன் எடுக்கற பேய்ப் படத்தைப் பத்தி தெரியாதா?...சும்மாவாச்சும் “திடும்...திடும்”ன்னு மியூஸிக்கைப் போட்டு...பார்க்கிறவங்களுக்கு திகிலூட்டுவான்!...ஆனா கடைசி வரைக்கும் பேயையும் காட்ட மாட்டான்...பிசாசையும் காட்ட மாட்டான்!...கடைசில கிளைமாக்ஸ்ல “கசா...முசா”ன்னு ஏதோவொரு உருவத்தை...ஒரு செகண்ட் மட்டும் காட்டிட்டு... “தி எண்ட்”ன்னு போட்டுடுவான்!...அதுக்கு நம்ம ஊர் விட்டலாச்சரியார் படங்களே தேவலாம்!...கிராபிக்ஸே இல்லாத காலத்துல மனுஷன் பார்க்கிறவங்களை நடுங்க வெச்சிருக்கான்” என்றார் அன்பழகன்.
ஹோட்டலை விட்டு வெளியே வந்து, தியேட்டருக்குள் நுழைந்து அந்தப் பேய்ப் படத்தைப் பார்த்து விட்டு ரவீந்தர் தன் வீட்டிற்கு வந்து சேரும் போது இரவு மணி ஒன்று.
தன் வருகை ஹவுஸ் ஓனர் வீட்டிலுள்ளோர் தூக்கத்தைக் கலைத்து விடக் கூடாது, என்பதற்காக பூனை போல் நடந்து, நைஸாய் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
பாத்ரூம் சென்று கை, கால் முகத்தையெல்லாம் கழுவிக் கொண்டு வந்து, விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் வீழ்ந்தவனுக்கு உறக்கமே பிடிக்கவில்லை. கண்களை மூடினால் “கன்ஞ்சூரிங்” படமே வந்து போனது. திரும்பித் திரும்பிப் படுத்துப் பார்த்தான். ம்ஹூம்...தூக்கம் அவனை விட்டு வெகு தூரம் போய் விட்டிருந்தது.
அப்போது, “ஜல்...ஜல்”லென்று கொலுசு சப்தம் கேட்க,
“விருட்”டென்று எழுந்து படுக்கையில் அமர்ந்தான். “இதென்ன கொலுசு சத்தம் கேட்குது?”