தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 21 - முகில் தினகரன்
“பார்க்-இன்” ஹோட்டலின் விஸ்தாரமான முகப்பு வராண்டாவில் “மெத்...மெத்” சோபாவில் ஹாய்யாக அமிழ்ந்திருந்தார் சுப்ரமணியராஜா.
அவர் கையில் ஆங்கில தினசரி. பார்வை வாசல் பகுதியில்.
நேரம் இரவு 9.35.
பேப்பரை மடித்து வைத்து விட்டு யோசனையுடன் மேவாயைத் தடவியவர் “என்னது...யாரையுமே காணோம்?...சரியா நைன் தர்ட்டிக்கு இங்க இருக்கணும்னு சொல்லியிருந்தேனே!”
அப்போது அவரது மொபைல் சிணுங்க எடுத்துப் பார்த்தார். லாயர் சுரேஷ்.
இணைப்பை “ஆன்” செய்து பேசினார்.
“ஹலோ...என்ன சுரேஷ்?...ஐ யாம் வெய்ட்டிங் ஹியர்!”
“சார்...ஒரு அர்ஜெண்ட் கேஸ் விஷயமா ஒரு இடத்துக்கு வந்திருந்தேன்...வந்த இடத்துல லாக் ஆயிட்டேன்!...ஸோ...என்னால வர முடியாதுன்னு நெனைக்கறேன்!...பட்...டோண்ட் வொர்ரி...என்னோட ஜூனியர் விவேக்கை அனுப்பியிருக்கேன்!...அனேகமா இன்னும் அஞ்சு நிமிஷத்துல அவர் அங்க வந்துடுவார்!.” லாயர் சுரேஷ் தனது சாமார்த்தியமான் நழுவலை சாதூர்யமாக விளக்கினார்.
“ஷிட்!” என்றபடி இணைப்பைத் துண்டித்தார் சுப்ரமணியராஜா.
நேரம் 9.45.
யாருமே வராதிருக்க தன் காவல்துறை நண்பர்களையாவது தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்றெண்ணி ஒருவருடைய எண்ணுக்கு டயல் செய்தார். அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
“இடியட்!” திட்டியவாறே இன்னொரு நண்பரின் எண்ணை டயல் செய்தார்.
நீண்ட நேரம் ரிங் போன பிறகு கடைசியாய் எடுத்துப் பேசிய அந்த நண்பர்
“சாரி சார்...இன்னும் ரெண்டு நாள்ல சி.எம்.வர்றார்!...அதுக்கான ஸ்பெஷல் கான்ஃபிடென்சியல் மீட்டிங் நாளைக்கு மார்னிங் கமிஷனர் ஆபீஸில் நடக்குது!...அது சம்மந்தமா சில ரெக்கார்ட்களியும்...டேட்டாக்களையும் தயார் பண்ண வேண்டியிருக்கு!..ஆக்சுவலா இப்பக் கூட நான் கமிஷனர் ஆபீஸ்ல அந்த ஒர்க்கில்தான் இருக்கேன்!...நிலைமையைப் பார்த்தா எப்படியும் ரெண்டு மணி..அல்லது மூணு மணியாயிடும் போலிருக்கு! ஸோ...என்னால வர முடியாது..ஸாரி!”
சுப்ரமணியராஜா பதில் சொல்ல வாயெடுப்பதற்கு முன், எதிர் முனை இணைப்பைத் துண்டித்துக் கொண்டது.