குழப்பம் இருந்துக் கொண்டே தான் இருந்தது.
ஆனால், அவளின் குழப்பத்தை தீர்ப்பது போல் அன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது!
திருமணத்திற்கு தேவையான ஜவுளிகளை வாங்கி முடித்து கிளம்பும் நேரத்தில் கற்பகம் ஒரு உறவு பெண்மணியை சந்திக்கவும், நின்று அவளிடம் பேசினாள். உமாவும் பவித்ராவும் முன்னே சென்றுக் கொண்டிருக்கவும், பின்னே வந்துக் கொண்டிருந்த பாரதியும், மதுவும் மட்டும் கற்பகத்தின் அருகில் நின்றனர். வருங்கால மருமகளை அந்த பெண்மணிக்கு அறிமுகம் செய்து வைத்த கற்பகம், பாரதி மற்றும் மது கைகளில் வைத்திருந்த பைகளை கவனித்து விட்டு, அவர்களை காருக்கு செல்ல சொன்னாள்.
பாரதியும் மதுவும், பார்க்கிங்கை அடைந்தப் போது, பவித்ராவும், உமாவும் பார்க்கிங் ஸ்லிப்பை காணாமல் தேடிக் கொண்டிருந்தனர். பாதுகாப்பிற்காக, அந்த கடையில் பார்க்கிங் ரசீதை பார்த்து விட்டு தான் பார்க்கிங் இடத்திற்குள் செல்லவே அனுமதிப்பார்கள். ரசீது ஒருவேளை கற்பகத்திடம் இருக்குமோ என்ற கேள்வி வரவும், பாரதி கற்பகத்திடம் சென்றுக் கேட்டு வருவதாக சொல்லி திரும்பி சென்றாள்.
கற்பகமும் அவளின் உறவு பெண்மணியும் அதே இடத்தில் தான் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கடைக்கு வந்து போபவர்களுக்கு இடையுறாக இல்லாமல் சுவர் அருகே நின்றப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அவர்களின் அருகே சென்ற பாரதி, காதில் விழுந்த பேச்சைக் கேட்டு நின்றாள்.
"... என்ன இருந்தாலும், உங்க அந்தஸ்த்திற்கு ஏத்த மாதிரி பெண் எடுத்திருக்கலாம் தானே அக்கா?" என அந்த பெண்மணி கற்பகத்திடம் கேட்டுக் கொண்டிருந்தாள்!
"இல்லை மாலா, பாரதி நீ நினைகுற மாதிரி சாதாரணமானவள் இல்லை... பத்து கோடிக்கு மேல் அவளுக்கு சொத்து இருக்கு... அதை அப்படியே விவேக்கிற்கு தரேன்னு சொல்லி இருக்கா... வேற எங்கேயாவது பெண் எடுத்தால், இப்படி மொத்தமா விவேக்குக்கு மட்டும் தருவாங்களா? ஆயிரம் கேள்வி கேட்பாங்க... பாரதி அப்படி இல்லையே..."
பாரதிக்குள் மின்னல் வெட்டியது!!!!