தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 61 - பிந்து வினோத்
61. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பவித்ராவும் பாரதியும் கல்லூரி நாட்கள் முதலே தோழிகள்... கல்லூரிக்குப் பிறகு அவர்கள் நடுவே கொஞ்சம் 'டச்' விட்டு தான் போயிருந்தது! ஆனால் பவித்ரா ரமேஷை கல்யாணம் செய்து சென்னை வந்ததும், பாரதி வேலை செய்த அதே காலேஜில் பவித்ராவும் லெக்சரர் ஆனதும், அவர்களின் நட்பை மீண்டும் வலுப்படுத்தி இருந்தது! பவித்ராவை தாண்டி ரமேஷ், கமலா என பவித்ரா குடும்பத்தினர் அனைவரும் பாரதியை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்கும் அளவிற்கு அவர்களின் நட்பு இருந்தது! பவித்ரா, பாரதி நடுவே சண்டை என்று ஒன்று வந்ததில்லை... இருவருமே மன முதிர்ச்சி கொண்டவர்கள் என்பதால், எப்போதும் மனதில் இருக்கும் கோபங்கள், கேள்விகளை நேரடியாக பேசி முடித்து விடுவார்கள்...
அதனால் தான் பாரதி தன்னிடம் விவேக்கின் மாற்றம் பற்றி சொல்லவில்லை என்ற கோபம் பவித்ராவிற்கு வந்திருந்தது...
ஆனால், இப்போது பாரதியிடம் தெரிந்த அதிக கோபமும்... அவளின் குரலில் இருந்த வருத்தமும், பவித்ராவை அவளின் கோபத்தை மறந்து இறங்கி வர செய்தது...
அதனால், 'நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை' என பாரதியிடம் பதில் கேள்வி கொண்டிருக்காமல், “இல்லை பாரு, நீ என் கிட்ட எப்போதும் எதையும் மறைக்க மாட்டீயே... அதனால் தான்...” என தணிந்தக் குரலில் சொன்னாள் பவித்ரா...
“ஆமாம் நான் மறைக்க மாட்டேன், நீ?” என பதிலுக்கு இப்போதும் சீறினாள் பாரதி!
“என்ன சொல்ற பாரு?”
“என்ன, என்ன சொல்ற பாரு? எங்க கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை தடவை, என் கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு உனக்கு விவேக்குக்கும் நடுவே இன்டிமேட் ரிலேஷன்ஷிப் ஏற்பட்டா சந்தோஷம் சந்தோஷம்னு சொல்லி இருக்க!?”
“அது...”
பவித்ரா பேச இடம் கொடுக்காது, பாரதி தொடர்ந்துப் பேசினாள்.