தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 03 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சென்னை ஏர்போர்ட்டில், கணபதி, ராஜம், வர்ஷா மூவரும், வழி மேல் விழி வைத்து விக்ராந்த் வருவதற்காக காத்திருந்தனர்... இரண்டு மணி நேரமாக அங்கே நிற்கிறோம் என்ற எண்ணம் மூவருக்குமே இல்லை...
“அம்மா, அம்மா, அண்ணா வந்தாச்சு... அதோ பாருங்க கிரே டி-ஷர்ட்...”
வர்ஷா காட்டிய திசையில் பார்த்த ராஜத்திற்கு இதயமே ஒரு வினாடி நின்று போனது போல் இருந்தது...!!! அங்கே விக்ராந்துடன் பேசியப்படி, ஒரு வெளிநாட்டு இளம்பெண் நடந்து வந்துக் கொண்டிருந்தாள். ராஜத்திற்கு பல நாட்களாகவே எங்கே அவளுடைய ஒரே மகன், வெளிநாட்டில் இருந்து யாரையேனும் அழைத்து வந்து இவள் தான் மருமகள் என்று சொல்லி விடுவானோ என்ற பயம் இருந்தது...
அதற்கேற்றார் போல் அவனும், ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வருவதை பார்த்து அவளுக்கு மயக்கமே வந்தது...
“அம்மா! அப்பா! வர்ஷா...” ஆனந்த கூச்சலோடு வந்த விக்கிராந்த்,
“ஹை லிஸா, மீட் மை பேரென்ட்ஸ் அண்ட் சிஸ்டர்....” என்று கூட வந்தவளுக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தான்.
“இவங்க பெயர் லிஸா, நம்ம தமிழ்நாட்டை சுத்திப் பார்த்து, அதை பத்தி அவங்க பத்திரிக்கையில் கட்டுரை எழுத வந்திருக்காங்க...”
அதை கேட்டப் பிறகு தான் ராஜத்திற்கு இயல்பாக மூச்சு விட முடிந்தது... ஆனாலும் கூட நட்புடன் கை குலுக்கிய லிஸாவை சந்தேகமாகவே பார்த்தாள் அவள்...
பேசியப்படி அரைவல் (arrival) இடத்தை விட்டு நகர்ந்து வந்தார்கள் ஐவரும். லிஸாவின் பத்திரிக்கை அவளுக்காக ஏற்பாடு செய்திருந்ததாக சொல்லிக் கொண்டு வந்திருந்த டாக்ஸியின் விபரங்களை சரி பார்த்து விட்டு லிஸாவின் பெட்டியை உள்ளே எடுத்து வைக்க உதவினான் விக்ராந்த்.