மிருதுளா பேசிக் கொண்டிருக்கும் போதே, விஜயின் செல் ஃபோன் மீண்டும் ஒலித்தது.
“தியாகு கூப்பிடுறான்... நான் கார்ல போறப்போ அவன் கிட்ட பேசிக்கிறேன்...” என்றபடி ஃபோனை கட் செய்தவன், நிலாவிடம் இருந்த போட்டோவில் இருந்த ஒவ்வொருவராய் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“இது என் சித்தப்பா, சித்தி, அதாவது பிரின்சஸோட அம்மா, அப்பா... எங்க அம்மா, அப்பா இறந்த பிறகு எங்க மூணு பேரையும் கூட அம்மா அப்பாவா இருந்து வளர்த்தது இவங்க தான்... இது நான்... இது கீதா என் வைஃப்... இது எங்க குட்டி பாப்பா ஸ்ரேயா... இப்போ நாலு வயசாக போகுது... கீதாவோட அம்மா அப்பா கிட்ட அவளை விட்டுட்டு நாங்க இவளை தேடிட்டு இருக்கோம்... இது பிரின்சஸ்... இது ஷிவா என்னோட இன்னொரு சித்தப்பா மகன், இது விஷ்ணு அவனோட தம்பி...”
விஜய் பேசும் போது அவனின் செல்ஃபோன் மீண்டும் மீண்டும் மீண்டும் ஓசை எழுப்பிக் கொண்டே இருந்தது... அதை கண்டுக்கொள்ளாமல் பேசினான் அவன்.
“ஷிவா, விஷ்ணு உங்க தம்பிங்களா???”
“ஆமாம், சித்தப்பா பசங்க... என் அப்பாக்கு இரண்டு தம்பிங்க. முதல் தம்பி பசங்க அவங்க இரண்டு பேரும்... அப்பாவோட இரண்டாவது தம்பி தான் இந்த போட்டோல இருக்க ரங்கராஜன் சித்தப்பா... என் அப்பா, அம்மா, முதல் சித்தப்பா, சித்தி நாலு பேரும் ஒரு ஆக்சிடன்ட்ல தவறிட்டாங்க. அது முதல் ரங்கராஜன் சித்தப்பாவும், சித்தியும் தான் எங்களுக்கும் அம்மா அப்பா... நாங்க எல்லோரும் ஒன்னா ஒரே வீட்டிலேயே தான் வளர்ந்தோம்...”
“ஓஹோ... அந்த தியாகு, அவர் போட்டோ ஏதாவது இருக்கா சார்?” நிலாவை பார்த்தபடி கேட்டாள் மிருதுளா.
“இப்போ என்கிட்டே இல்லை சிஸ்டர். அவனை என் ஃபோனுக்கு அனுப்ப சொல்றேன். ஏற்கனவே பத்து தடவைக்கு மேல கூப்பிட்டுட்டான்... இதுக்கு மேல எடுக்கலைனா ரொம்ப