பசி தாங்க மாட்டீங்கன்னு உங்க கணவர் சொன்னார்... முதல்ல நீங்க இரண்டு பேரும் சாப்பிடுங்க... அதுக்கு அப்புறமா பேசலாம்... உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க நிறைய இருக்கு,” என்றாள் மிருதுளா.
"அவரும் சாப்பிடலை... அவரும் வரட்டுமே..."
கீதா தயக்கத்துடன் சொன்னதற்கு பதில் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்காமல், வெற்றி மற்றும் டாக்டர் மோகனின் கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கங்கள் தந்துக் கொண்டிருந்த விஜய் இருந்த இடத்திற்கு வந்தாள் மிருதுளா.
“சாப்பிட்டு முடிச்சிட்டு பேசலாம்... வாங்க... உங்க மனைவி நீங்க வந்தா தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டாங்க...!”
“மணி நாலாக போகுதே, இன்னுமா நீங்க சாப்பிடலை? முதல்ல போய் சாப்பிடுங்க,” என்றார் மோகன்.
வெற்றியும் தலை அசைக்க, விஜய் மிருதுளாவை தொடர்ந்து சென்றான்.
அவனை யோசனையாக பார்த்த டாக்டர் மோகன்,
“இவர் சொல்றதை நம்பலாம்னு தோணுது வெற்றி. நிலா பெரிய வீட்டு பொண்ணுன்னு லதா சொல்லிட்டே இருப்பா, அது உண்மை தான் போல,” என்றார்.
“ஆனாலும் டாக்டர், அவ எதுக்காக வீட்டை விட்டு வெளியே வந்தான்னு தெரியாமல் இவங்க கூட அனுப்பி வைக்க முடியுமா,” என்றான் வெற்றி சந்தேகத்துடன்!
“வெற்றி, இவங்க அவ சொந்தக்காரங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்குறது தான் நம்ம கடமை. அதுக்கு மேல அவங்க சொந்த விஷயத்துல நாம மூக்கை நுழைக்க முடியாது. இவருக்கும் அவ மேல ரொம்ப பாசம் இருக்குன்னு தான் தோணுது...”
“ஆனாலும் டாக்டர்...”