“மனசை குழப்பிக்காமல் நிதானமா யோசிச்சு பாரு வெற்றி. நான் சொல்றது உனக்கு புரியும்... “
“ப்ச்... எனக்கு குழப்பமா இருக்கு டாக்டர்... சரி நான் இன்னைக்கு நைட் ஹோட்டல் லீவுன்னு எழுதி வச்சிடுறேன்... சென்னையில இருந்து எல்லோரும் இன்னைக்கு நைட்டே இங்கே வந்திருவாங்கன்னு இவரு சொல்றாரே...”
“ஆமாம் அப்படியே செய்...” என்றபடி யோசனையில் ஆழ்ந்தார் டாக்டர் மோகன்.
🌼🌸❀✿🌷
“அப்போ நிலா, இல்ல இல்ல, கிருத்திகா வேலைக்கு போய்ட்டு இருந்தாளா?”
கீதா சாப்பிட்டு முடித்து வர காத்திருந்த மிருதுளா, அவள் வந்ததுமே அந்தக் கேள்வியை கேட்டாள். மிருதுளாவின் பக்கத்தில் ராஜம்மாளும், கிருத்திகாவும் இருந்தார்கள்!
"உட்கார கூட சொல்லாம இப்படியா கேட்ப?" ராஜம்மாள் மருமகளை மென்மையாக கடிந்துக் கொண்டு, கீதாவிற்கு தன் பக்கத்தில் இருந்த நாற்காலியை காண்பித்தார்.
கீதா மிருதுளாவின் அவசரக் கேள்வியை தவறாக நினைத்துக் கொண்டதற்கு அறிகுறியாக எந்த மாற்றத்தையும் முகத்தில் காட்டாமல் ராஜம்மா காண்பித்த நாற்காலியில் அமர்ந்தாள்!
“சென்னையில க்யூ.என்.ஹெச்ன்னு ஒரு பெரிய கம்பெனி இருக்கு. அதுல கிருத்திகா சேல்ஸ் டைரகட்டரா இருந்தா... உண்மையா சொல்ல போனால் தியாகு கம்பெனில வருஷத்துல வர லாபத்தை விட, பிரின்சஸோட வருஷ சம்பளம் சில லட்சங்கள் அதிகம்...”
மற்ற மூவரும் அவள் சொன்னதை நம்ப முடியாமல் வாயை திறந்து அவளைப் பார்த்தார்கள்!
கீதா அவர்களை பார்த்து புன்னகைத்து விட்டு மேலும் விபரங்கள் சொன்னாள்!