தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 07 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மிகவும் தர்மசங்கடமான அமைதி அங்கே நிலவியது!
மற்றவர்களைப் போலவே, மிருதுளாவின் அருகே அமர்ந்திருந்த கிருத்திகாவும் தியாகுவை பார்த்தாள்.
டாக்டரின் கேள்வியை தொடர்ந்து தியாகுவும் ஒரே ஒரு வினாடி அவள் பக்கம் பார்த்தான். அவளின் பார்வை அவன் பக்கம் இருப்பது தெரிந்துக் கொண்டோ என்னவோ, உடனேயே பார்வயை திருப்பிக் கொண்டான்.
தியாகு பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவன் பதில் சொல்ல போவது இல்லை என்பதை புரிந்துக் கொண்டு, விஜய் பேசினான்.
“டாக்டர், இது அவங்க இரண்டுப் பேருடைய பர்சனல் விஷயம். இதை பத்தி எல்லாம் பேசி ஆகனுமா என்ன?”
டாக்டர் மோகன் தோளை குலுக்கி விட்டு அமைதியாக இருந்தார்.
வெற்றி தியாகுவை சந்தேகத்துடன் பார்த்தான்.
“நீங்க காட்டின போட்டோஸ், டாகுமென்ட்ஸ் எல்லாம் சரி. ஆனால், எனக்கு என்னவோ எதுவோ சரியில்லைன்னு தோணுது. ஒரு சாதாரண சண்டைக்காக நிலா சென்னையில இருந்து தனியா இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டிய அவசியமில்லையே... அவளை உங்க கூட அனுப்பி வைக்குறது அவளுக்கு நல்லதான்னு எனக்கு தெரியலை...”
“தம்பி, நீங்க நினைக்குற மாதிரி நாங்க கெட்டவங்க எல்லாம் இல்லை...” என்று பேச தொடங்கிய செவ்வந்தியின் பேச்சில் குறுக்கிட்ட தியாகு,
“நீங்க உங்க நிலாவை எங்க கூட தனியா அனுப்பி வைக்க வேண்டாம். நீங்களும் எங்க கூட வாங்க. எங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க. உங்க மனசுக்கு எல்லாம் சரியா இருக்கிறதா தோணும் போது அவளை எங்க கிட்ட விட்டுட்டு திரும்பி வாங்க...” என்றான்