தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 79 - பிந்து வினோத்
79. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விவேக் வந்ததும் வராததுமாக எந்த விளக்கமும் சொல்லாமல் பாரதியை உள்ளே அழைத்துச் சென்று சில பல வினாடிகள் ஆனப் பிறகும் பவித்ரா திகைத்துப் போய் நின்றிருந்தாள்! விவேக்கின் நடவடிக்கைகளை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை!
மருமகளைப் பார்த்து புன்னகைத்த கமலா, “பார்த்தீயா பவித்ரா நான் சொன்னது சரி தானே? ஒரு வாரம் கூட இல்ல, ஒரே நாள்ல விவேக் பாரதியை தேடி வந்துட்டாரே?” என்றாள் பெருமையுடன்!
என்ன பதில் சொல்வது என்று புரியாமல் குழப்பத்துடன் இப்போதும் அமைதியாகவே இருந்தாள் பவித்ரா. கமலா சொல்வதுப் போல ‘எல்லாம் சரி’ ஆகி விட்டால் நன்றாக தான் இருக்கும்! ஆனால், விவேக்கின் இந்த திடீர் திடீர் மாற்றங்கள் நல்லது தானா? பாரதியால் அவனின் இதுப் போன்ற மாற்றங்களை அமைதியாக எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியுமா??? முதலில், எதனால் இந்த திடீர் மாற்றம்???
பவித்ரா தன் பாட்டில் யோசித்துக் கொண்டே நிற்க, கமலா மருமகளின் அமைதியை பெரிது படுத்தாமல், “சரி வா நாம சமைப்போம்... நான் போய் பாய் கடையில் இருந்து கறி வாங்கிட்டு வரேன், நீ சமைக்க எல்லாம் தயார் செய்து வை... விவேக்குக்கு எப்போவுமே உன் சமையல் ரொம்ப பிடிக்கும்...” என்றாள்.
குழம்பிய மனதுடனே, “சரி அத்தை...” என்றாள் பவித்ரா.
சொன்னதுப் போல கமலா வாங்கி வந்த கறியை பவித்ரா ருசியான உணவாக மாற்றி கொண்டிருந்த போது, அழைப்பு மணி ஒலித்தது. மருமகளுக்கு சிறு சிறு உதவிகளை புரிந்த படி பேத்தியை கவனித்துக் கொண்டிருந்த கமலாவை தொல்லை செய்யாமல், கேஸ் அடுப்பின் தணலை குறைத்து விட்டு கதவை திறந்தாள் பவித்ரா.
வெளியே நரேந்திரன், கற்பகம், உமா, மது என நால்வரும் நிற்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டப் போதும், உடனே சமாளித்துக் கொண்டு, வந்தவர்களை வரவேற்றாள் பவித்ரா. மருமகளின் பேச்சு சத்தம் காதில் விழவும், வந்திருப்பது யார் என்று தெரிந்துக் கொள்ள பேத்தியை தூக்கி கொண்டு வந்த கமலாவின் முகத்திலும் ஆச்சர்யம் வந்துப் போனது!