தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 55 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“அந்த சாவியை என் கிட்ட கொடுப்பா...” என்ற ராஜம்மா, வெற்றியை பார்த்து,
“என்ன தான்டா நீ மனசுல நினைச்சுட்டு இருக்க? இன்னும் எத்தனை வருஷம் என் மருமக இப்படியே இந்த சமையல் கட்டுல நேரத்துக்கு சாப்பிடாமல் தூங்காமல் உழைச்சுட்டே இருக்கனும்? நீ மட்டும் நிலாவை தங்கை, தங்கைன்னு செல்லம் கொஞ்சலாம், அவ புருஷன் உனக்கு எதுவும் செய்ய கூடாதா? ஒழுங்கா சாவியை வாங்கிட்டு மதுரையில போய் செட்டில் ஆகுற வழியை பாரு... உன் சமுக சேவையை எல்லாம் அங்கேயும் செய்யலாம்...” என்றாள் கண்டிப்புடன்!
“இல்லைம்மா இந்த ஹோட்டல்...”
“அதை நம்ம டேவிட்டும், முருகனும் நல்லா கவனிச்சுப்பாங்க... வேணும்னா இன்னும் இரண்டு ஆளும் சேர்த்துக்கலாம்...”
வேறு வழி இல்லாமல், “சரிம்மா...” என்ற வெற்றி, அரை மனதுடன் தியாகுவிடம் இருந்து சாவியை பெற்றுக் கொண்டான்.
“உங்க வீட்டு டெரர் பார்ட்டி லீடர் அம்மா தானா... நீங்களும் அவங்க கட்சியில சேர்ந்திடுங்க...” என்று மிருதுளாவிற்கு ரகசிய குரலில் இலவச ஆலோசனை வழங்கினாள் கிருத்திகா...!
அதற்குள், “வெற்றி, நமக்கு இன்னுமொரு வேலை இருக்கு... வெளியே ஒரு போலீஸ்காரர் இருக்கார்...” என்றபடி மனைவியை ஒரு பார்வை பார்த்த தியாகு,
“அவருக்கு இந்த ஊருல இருக்க இரண்டுப் பேரை நீங்க அடையாளம் காட்டனும்...” என்றான்.
“யாரை சொல்றீங்க?” என புரியாமல் வினவினான் வெற்றி.
“குமார், மாடசாமின்னு ரெண்டு பேர் சுத்துறாங்களாமே... அவங்களை தான்... ஒரு நாலு அடி போடனும்!”