11. நினைத்தாலே இனிக்கும்... - Prishan
நான்கு வருடங்களுக்கு முன்பு.............
பள்ளி செல்லும் பருவத்திலிருந்து விடை பெற்று சிறகு முளைத்தது போல் , கண்களில் கனவோடும் மனதில் லட்சியத்தோடும், கல்லூரியின் உள்ளே நுழைந்த மாணவர்கள் மத்தியில் சந்துருவின் கைகளை இறுக்கமாக பற்றியவாறு உள்ளே நுழைந்தான் குணா.
குணா ஞானபிரகாஷின் கார் டிரைவர், முத்துவின் மகன். தாய் இல்லாத அவனை மற்றொரு மகனாகவே வளர்த்து வந்தார் நளினி. சந்துருவிற்கும் காலையில் விழித்தது முதல் இரவு உறங்கும் வரை குணா அவன் கூடவே இருக்க வேண்டும். அமைதியும், சற்று பயந்த சுபாவமும் கொண்ட குணாவும் எப்பொழுதும் சந்துருவையே ஒட்டிக் கொண்டு திரிவான். அதைக் கண்டு " டேய் நீங்க ரெண்டு பேரும் கல்யாணமாவது தனிதனியா பண்ணிக்குவீங்களா.." நளினியே கிண்டல் செய்வார்.
லீவு நாட்களில் ஊருக்கு போகும்போது அவனையும் அழைத்துச் செல்வார்கள். இன்று வரைக்கும் தனக்கென்று எந்த கனவும் இல்லாமல், சந்துருவைத் தொடர்ந்து குணாவும் அதே கல்லூரியில் காலடி எடுத்து வைத்தான்.
முதல் நாள்,
காலேஜே ராகிங்கில் கலகலத்தது. அதிலும் பயந்து நடுங்கிய குணாவை இன்னும் நடுங்க வைத்தார்கள். ஒரளவிற்கு மேல் பொறுக்க முடியாமல் தட்டிக் கேட்டு முறைத்த சந்துருவை காலேஜ் முடியும் நேரம், கெடாவர் இருக்கும் ரூமில் போட்டுப் பூட்டி வைத்தார்கள். மறுநாற் காலை லேபை திறந்த பார்த்த பொழுது எதற்கும் அசராமல், அலடச்சியத்துடன் சீனியரிடம் சென்று
" அனாடமி ஸ்பெஷல் க்ளாஸ்க்கு தாங்க்ஸ் " என்றுவிட்டு, குணாவைத் தேடிச் சென்றான். பதறியபடி வந்த குணாவை சமாதானம் பண்ணி தோளில் கைப்போட்டபடி அழைத்துச் சென்றான்.
அன்று முதல் சந்துரு காலேஜில் ஹீரோவாகிப் போனான்.
கண்டதும் நட்புடன் புன்னகைத்த கதிரை அவர்கள் இருவருக்கும் பிடித்து விட்டது.( அதான்.,கண்டதும் காதல் மாதிரி கண்டதும் நட்பு..) அதிலும் கதிருக்கும் குணாவிற்கும் சந்துருவே பொறாமை படுமளவிற்கு கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது.
பேச்சிலும், செயலிலும் தனித்தன்மையுடன் மிளிர்ந்தவனை அனைவருக்கும் பிடிந்துப் போனது. கூடவே அவனது கம்பீரமும் ஆண்மையும் பல பெண்களை அவனிடம் ஈர்த்தது. தன்னுடன் பேசும் பெண்கள் நட்பின் எல்லையைத் தாண்டி தன்னை நெருங்குவது போல் தெரிந்தால் தயவு தாட்சன்யம் இல்லாமல் முகத்திற்கு நேரே சாடிவிடுவதால் பெண்கள் அவனிடம் சற்று தள்ளியே பழகினார்கள்.
அவர்களின் நடுவே சற்று வித்தியாசமாய் straight forward ஆக கண்களை நேராகப் பார்த்துப் பேசும் சுபத்ராவை தன் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக் கொண்டான் .அவளுடன் இலவச இணைப்பாக அவளின் சிறு வயது தோழன் ப்ரேமும் ஒட்டிக் கொண்டான். ஆரம்பத்தில் பெண்களிடம் என்னேரமும் வழியும் அவனை அவ்வளவாக பிடிக்காவிட்டாலும், அவனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் அவனும் அந்த ஐவர் குழுவில் ஒன்றாகிப் போனான்.
நால்வரிடமும் எந்த வேறுபாடும் காட்டாமல் பழகும் சுபியிடம் குணாவால் மட்டும் இயல்பாக பழக முடியவில்லை. சிறு வயதுமுதல் பெண்களிடம் அதிகம் பேசிப் பழக்கம் இல்லாததால் அவளிடம் சிறு தயக்கத்துடனே பழகினான். இதனாலே பெண்கள் அவனை சீண்டுவதும் மற்றவர்கள் அதை அதட்டுவதும் வாடிக்கை ஆயிற்று. குணா எல்லாவற்றிற்கும் சிறிதாக புன்னகைப்பதோடு சரி.
காலேஜின் முதல் இரண்டு வருடங்கள், அவர்கள் வாழ்க்கையின் அத்தனை சந்தோஷமான நாட்களையும் கொண்டதாய் இருந்தது. படிப்பிலும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதும், மற்ற நேரங்களில் சேட்டை செய்து மற்றவர்களை அலறவைப்பதுமான அழகான நாட்கள் அவை.
காலம் இறக்கை கட்டிக் கொண்டு அண்ணாமலை சைக்கிளில் பறந்தது. அன்று இரண்டாம் வருடத்தின் முதல் பரீட்சை, அன்றிலிருந்துதான் குணாவின் வாழ்வில் விதி தன் வேலையை ஆரம்பித்தது.
பரீட்சை ஹாலின் முன்னால் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் பெல் அடிக்கவும் உள்ளே செல்ல ஆயத்தமாக, சுபி மட்டும் அங்கும் இங்கும் எதையோ பதட்டத்துடன் தேடினாள். என்னவென்று கேட்டவர்களிடம் ஹால்-டிக்கெட்டை காணவில்லை என்றவுடன் மற்றவர்களும் வேகமாக தேடினார்கள்.
" எல்லாரும் உள்ள வாங்க, ஹால்டிக்கெட்டை எடுத்துக் காட்டுங்க.," என்று இன்ஸ்ட்ரக்டர் அதட்ட, கைகளை பிசைந்தபடி நின்றவர்களிடம் என்னவென்று விசாரித்தவர், சுபியை பார்த்து, பல்லைக் கடித்தவாறு,
" எக்ஸாம்க்கு மேக்கப் பண்ணத் தெரியுது, ஹால்டிக்கெட் எடுத்துட்டு வரனும்னு தெரியாதா,?..எப்ப ஹால்டிக்கெட் எடுத்திட்டு வர்றியோ அப்ப எக்ஸாடை எழுதினா போதும்.." கத்திவிட்டு இவர்களிடம் திரும்பி,
"எக்ஸாம் எழுதனுனு ஆசை இருந்தா உடனே உள்ள வாங்க..இல்லனா அப்படியே போயிரு...!!!" என்று மிரட்டிவிட்டு உள்ளே சென்றார்.
அழுது கொண்டிருந்த சுபியை உற்றுப் பார்த்த குணா., திரும்பி தலை தெறிக்க எங்கயோ ஒடினான். இரண்டு நிமிடங்களில் மூச்சு வாங்க திரும்பி வந்தவன் கையில் சுபியின் ஹால்டிக்கெட் இருந்தது.
நிம்மதியுடன்," எங்க,..எங்கயிருந்துச்சு..?"என்று கேட்டவளிடம் அவள் நெற்றியை சுட்டிக் காட்ட,அதில் இருந்த திருநீரைக் கண்டு கோவிலில் என்று புரிந்து கொண்டார்கள். சுபத்ராவிற்கு தான் காலேஜின் உள்ளே இருந்த கோவிலில் அதை வைத்து கும்பிட்ட பிறகு எடுக்க மறந்தது ஞாபகம் வந்தது.
"தாங்க்ஸ்..." என்று உணர்ச்சி வசப்பட்டவளை மற்றவர்கள் சேர்ந்து எக்ஸாம் ஹாலிற்குள் தள்ளிச் சென்றார்கள்.
ஐந்து பேரும் ஒன்றாக உள்ளே நுழைவதைக் கண்டு முறைத்த இன்ஸ்ட்ரக்டர், பக்கத்தில் இருந்தவரிடம்,
"இதுங்கள்ளாம் படிக்கவா வருதுங்க.,!" என்றிவிட்டு ஆன்சர் பேப்பரைப் கொடுக்க ஆரம்பித்தார்.
எக்ஸாம் முடிந்து வெளியே வந்தவர்கள், அடுத்த எக்ஸாம் பத்தி பேசியபடியே நடக்க, சற்று பின் தங்கிய குணாவிடம் வந்த சுபி, இயல்பாக அவன் கையை பிடித்தபடி,
" ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்டா...டென்ஷன்ல மறந்தே போய்ட்டேன்...நீ எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்ச..? எனிவே.....இத நான் என்னிக்குமே மறக்கமாட்டேன்..." அவன் கைகளை அழுத்திய படி சொன்னவள், செல்லமாக அவன் முன் உச்சி முடிகளை கலைத்து விட்டுச் சென்றாள்.