13. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா
டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கினான் வசந்த்.
டில்லி எப்போதுமே அவன் மனதுக்கு ரொம்பவும் நெருக்கமாயிருந்திருக்கிறது. அவன் மறக்கவே கூடாது என்று நினைக்கும் நிகழ்வுகளுக்கும், அவன் நினைத்து நினைத்து உருகும் தருணங்களுக்கும், அவன் நினைத்தாலும் மறக்கவே முடியாத நினைவுகள் எல்லவற்றுக்குமே சாட்சியாய் இருந்திருக்கிறது டில்லி.
அவன் டில்லிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி இருக்குமா? யோசித்துக்கொண்டே விமான நிலையத்தை சுற்றி பார்வையை சுழல விட்டபடி நடந்தான் வசந்த்.
நண்பகல். நேரம் பன்னிரெண்டிருக்கும். அலுவலகத்தில் ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தான் மனோ.
'நீங்க போன்னு சொன்னாலும் ஒண்ணு ஒன்றரை வருஷத்துக்கு நான் டென்னிஸுக்கு போக மாட்டேன்' திடீரென்று ஸ்வேதாவின் வார்த்தைகள் அவன் காதுக்குள் கேட்டது.
'என்ன சொன்னாள் அவள்? சட்டென்று மூளைக்குள்ளே மின்னல் வெட்ட இருக்கையிலிருந்து எழுந்தே விட்டிருந்தான் மனோ.
அவனுக்குள்ளிருந்து ஏதோ ஒரு வேகம் அவனை செலுத்த, அடுத்த மூன்றாவது நிமிடம் வண்டியை கிளப்பிக்கொண்டு பறந்தான் மனோ.
அடுத்த சில நிமிடங்களில் ஸ்வேதாவின் அலுவலக வாசலில் சென்று நின்றான் மனோ.
தன் கைப்பேசியிலிருந்து அவள் எண்ணை அழுத்தினான்.
'ஹேய்.... உங்க ஆபீஸ் வந்திருக்கேன். கீழே வா உடனே உன்னை பார்க்கணும்' குரலில் ஏறியிருந்த சந்தோஷ தவிப்புடன் சொன்னான் மனோ.
'அதெல்லாம் முடியாது பிஸியா இருக்கேன்'. என்ன விசேஷம்? திடீர்னு வந்திருக்கீங்க?, அவன் தவிப்பை ரசித்துக்கொண்டே கேட்டாள் ஸ்வேதா.
ஹேய்... 'ஹேய்..... ப்ளீஸ் டா. காலையிலே நீ சொன்னது எனக்கு இப்பத்தான் புரிஞ்சது. மனசுக்குள்ளே அப்படியே....... ஹையோ........கண்ணம்மா...... எனக்கு உன்னை உடனே பார்க்கணும். மேலே ஏறி வரவா? அவன் குரலில் குதூகலமும்,உற்சாகமும் பொங்கியது.
புரிந்துவிட்டதா இந்த ட்யூப் லைட்டுக்கு? தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள் ஸ்வேதா.
'நோ எல்லாம் ஈவினிங் வந்து பார்த்துக்கலாம். இப்போ மீடிங்க்லே இருக்கேன் வெச்சுடவா? குரலில் பொய் இறுக்கம் காட்டினாள் .
ஸ்வேதா.....ப்ளீஸ்டா.....
எதுக்கு அவசரம்.? எதுவுமே உடனே கிடைச்சுட்டா அதிலே திரில்லே இருக்காது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஈவினிங் பார்க்கலாம்
'போடி........நான் போறேன் போ.' குரலில் சேர்ந்த ஏமாற்றத்துடன் சொல்லிவிட்டு அவன் கிளம்ப அவளுக்குள்ளே லேசாய் வலித்தது.
உடனே ஓடி சென்று அவனை அணைத்துக்கொள்ள வேண்டும்மென்று தான் தோன்றியது அவளுக்கு. தன்னை தானே கட்டுப்படுத்திக்கொண்டாள் ஸ்வேதா.
இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து சிறிது தவிக்க வேண்டும்மென்றே தோன்றியது. அப்படி ஒரு நிகழ்வு இதுவரை நடந்ததே இல்லையோ என்றே தோன்றியது.
'எல்லாமே நினைத்தவுடனே கிடைத்து விட்டதைப்போல், காத்திருத்தல் என்ற உணர்வை அனுபவித்தேயிராததுபோல்......
சிறிது காத்திருந்துதான் பார்ப்போமே.........
அதன் பிறகு இருவருக்குமே வேலையில் மனம் செல்லவில்லை. மாலையை எதிர்நோக்கியே காத்திருந்தது மனம்.
டில்லியின் அந்த பகுதியில் இருந்த அவனது வீட்டுக்குள் கேட்டை திறந்துக்கொண்டு நுழைந்தான் வசந்த்.
தன் திருமணதிற்கு பிறகு, அவள் கணவன் குழந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறாள் அனுராதா
வீட்டு வாசலில் அந்த தோட்டம். தோட்டம் நிறைய அந்த பூக்கள்.
"இந்த பூவுக்காகவே உன் வீட்டுக்கு வாழ வரணும்பா" அர்ச்சனாவின் குரல் காதிலே கேட்க,தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் வசந்த்.
இந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியும் அவர்கள் நேசத்திற்கு சாட்சி. அந்த நினைவுகளிலேயே சில நிமிடங்கள் நின்று விட்டிருந்தான் வசந்த்.
பின்னர் புன்னகையுடன் சில அடிகள் நடந்து, அழைப்பு மணியை அழுத்திவிட்டு, சட்டென்று பதுங்கிக்கொண்டன் வசந்த், கதவை திறக்கும் அனுவை திகைக்க வைக்கும் எண்ணத்தில்.
அவள் கதவை திறந்தவுடன் சட்டென்று அவள் முன்னால் அவன் பாய்ந்த போது,சின்னதான ஒரு அலறலுடன் மயங்கிவிட்டிருந்தாள் அவள்.
ஒரு நொடி திகைத்தே போனான் வசந்த். 'போச்சுடா.....'
மயங்கியவள் அனு இல்லை. அவளுடைய கணவனின் தங்கை. அனுவின் திருமணத்தில் பார்த்திருக்கிறான் அவளை. கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பாதாக ஞாபகம்.
வீட்டில் வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை. அவள் முகத்தில் தண்ணீரை தெளித்து அவளை எழுப்பி அமரவைத்து, அவள் குடிக்க குளிர்பானம் கொடுத்து....
மூச்சு வெளியே வந்தது அவனுக்கு. அவனை அடையாளம் தெரிந்துக்கொண்டாள் அவள்.
'இவ்வளவு பயந்தாங்கோலியா இருக்கியே நீ? ஆமாம் உன் பேரென்ன மறந்துட்டேன்' என்றான் வசந்த்.
'ஐ யம் சாந்தினி' என்றாள் அவள் சின்னதான பெருமையுடன். சாந்தினி படம் பார்த்திருக்கீங்களா நீங்க? அதுல வர ஸ்ரீதேவி மாதிரியே இருக்கேன்னு எங்க அப்பா சொல்லுவார்.
'இந்த அப்பாக்கள் தொல்லை தாங்க முடியலை' தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன் 'அனு இல்லையா? என்றான்
இல்லையே. அவங்கெல்லாம் கல்யாணத்துக்கு போயிருக்காங்க. நாளைக்குதான் வருவாங்க
.அய்யய்யோ.....!!!!!!!!!!
'என்ன .அய்யய்யோ....?' நான் ஸ்ரீதேவி மாதிரி இருக்கேனா இல்லையா அதை சொல்லுங்க முதல்ல.
'நீ 'மூன்றாம் பிறை' படம் பார்த்திருக்கியா?
'இல்லையே.
'நீ உண்மையிலேயே மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரியே இருக்கே' சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்தபடியே நகர்ந்தான் வசந்த்.
மாலை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள் அர்ச்சனா. '
பி.எச்.டி வேலைகளுக்காக டில்லி செல்கிறேன். திரும்ப பத்து நாள் ஆகும்' அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுதான் கிளம்பியிருந்தான் வசந்த்.
அவள் வெளியே வந்த போது, சட்டென்று எதிர்ப்பட்ட ராஜேஷை பார்த்தவுடன் ,வசந்தின் வார்த்தைகள் நினைவுக்கு வர மனதிலிருந்த சோர்வையும் மீறி அவளுக்குள்ளே சிரிப்பு எழுந்தது.
சின்னதான புன்னகை இதழ்களில் ஓட நடந்தவளின் எதிரில் வந்து நின்றான் விவேக்.
சட்டென்று மாறிப்போனது அவள் முகம். அவனை நிமிர்ந்து கூட பார்க்க விரும்பாதவளாய் நடந்தாள் அர்ச்சனா.
அவளுடனே நடந்தான் விவேக். 'கார் கொண்டுவந்திருக்கேன் அதிலே போயிடலாமே'